பள்ளி மாணவரின் தொடையில் இருந்த அரிய வகையிலான புற்றுநோய் காட்டியை அறுவை சிகிச்சை மூலம் அகற்றி, திருச்சி அரசு மருத்துவமனை மருத்துவர்கள் சாதனை படைத்துள்ளனர்.

திருச்சி அரியமங்கலத்தை சேர்ந்தவர்  அப்துல் காதர் வயது 17 ஆகும். 12-ம் வகுப்பு படிக்கும் இவருக்கு கடந்த 3 மாதங்களுக்கு முன் கால் முட்டில் வீக்கம் ஏற்பட்டு, நடக்க முடியாமல் இருந்துள்ளார். இதற்காக திருச்சி அரசு மருத்துவமனை எலும்பு முறிவு பிரிவு மருத்துவரிடம் சிகிச்சைக்காக சென்றிருந்தார். அங்கு அவருக்கு எக்ஸ்ரே எடுத்தபோது தொடை எலும்பில் கட்டி இருப்பது தெரியவந்தது. பின்னர், அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன் உதவியுடன் கட்டியில் இருந்து திசுவை எடுத்து பரிசோதனை செய்ததில், அவரது தொடை எலும்பில் 15 செ.மீ நீளம், 15 செ.மீ அகலத்தில் ஆஸ்டியோ சார்கோமா என்ற புற்றுநோய் கட்டி  இருப்பது உறுதி செய்யப்பட்டது. 

இந்நிலையில் இந்த வகை புற்றுநோய் கட்டி கண்டறியப்பட்டால், அவர்களை சிகிச்சைக்காக சென்னைக்கு பரிந்துரை செய்வது வழக்கம். மேலும், அறுவை சிகிச்சையில் தொடைப்பகுதியுடன் கால் துண்டிப்பு செய்யப்படும்.  இந்த நிலையில், திருச்சி அரசு மருத்துவமனை முதல்வர் வனிதா வழிகாட்டுதலின் படி, எலும்பு முறிவு சிகிச்சை துறை தலைவர் மருத்துவர் கல்யாண சுந்தரம் மேற்பார்வையில், எலும்பு மற்றும் முட்டு சிகிச்சை மருத்துவர் பேராசிரியர் வசந்த ராமன் தலைமையில் மருத்துவர்கள் ரமேஷ்பாபு, ராபர்ட், கோகுலகிருஷ்ணன் மற்றும் புற்றுநோய் மருத்துவர் செந்தில்குமார், மயக்கவியல் துறை தலைமை மருத்துவர் சிவகுமார் குழுவினருடன் இணைந்து தொடர்ந்து 6 மணி நேரம்  அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. 

அதனைத்தொடர்ந்து இந்த அறுவை சிகிச்சையின்போது எலும்பு புற்றுநோய் கட்டியை அகற்றி பிரத்யேகமாக உருவாக்கிய செயற்கை மூட்டு உபகரணத்தை உள்ளே பொருத்தினர். இதனால் நோயாளிக்கு கால் துண்டிக்கப்படாமல் பாதுகாக்கப்பட்டதுடன், அதன் முழு செயல்திறனும் இயல்பை போலவே மீட்கப்பட்டது. 4 யூனிட் ரத்தம் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தி மருந்துகள் அவருக்கு அளிக்கப்பட்டு 24 மணிநேர கண்காணிப்பு கிடைக்கும் வகையிலும் தொற்று ஏற்படாமல் தடுப்பதற்காகவும் சிறப்பு எலும்பு புற்றுநோய் அறுவை சிகிச்சை பிரிவில் தற்போது சிகிச்சை பெற்று வருகிறார்.

மேலும் அந்த மாணவர் அப்துல் காதரின் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டு வருகிறது. தனியார் மருத்துவமனையில் ரு.10 லட்சம் செலவில் மேற்கொள்ளப்படும் இந்த உயர் அறுவை சிகிச்சை, திருச்சி அரசு மருத்துவமனையில் முதல்வர் விரிவான காப்பீட்டு திட்டத்தின் கீழ் இலவசமாக மேற்கொள்ளப்பட்டது என தெரிவிக்கப்பட்டது.