பாலியல் புகாரில் சிக்கி கைதான பத்ம சேஷாத்ரி பள்ளி ஆசிரியர் ராஜகோபாலன் மீது அதிரடியாக குண்டர் சட்டம் பாய்ந்து உள்ளது.

பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த விவகாரத்தில், சென்னை பத்மா சேஷாத்ரி பள்ளி ஆசிரியர் ராஜகோபாலன் அதிரடியாகக் கைது செய்யப்பட்டு, சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டு இருக்கிறார்.

இதனையடுத்து, பத்மசேஷாத்ரி பள்ளி ஆசிரியர் ராஜகோபாலானை, போலீஸ் 5 நாட்கள் காவலில் எடுத்து விசாரித்தனர். அத்துடன், அசோக் நகர் மகளிர் போலீசார் திட்டமிட்டனர். அதன்படி, ராஜகோபாலனை 3 நாள்கள் காவலில் எடுத்து விசாரித்தனர். 

இந்த விசாரணையின் போது, பத்மசேஷாத்ரி பள்ளி ஆசிரியர் ராஜகோபாலனிடம் போலீசார் நூற்றுக்கணக்கான கேள்விகளைத் துருவி துருவி கேட்டு விசாரணை நடத்தினர்.

மேலும், “5 மாணவிகள் அளித்த புகாரின் அடிப்படையில் ஒவ்வொரு புகாருக்கும் 50 கேள்விகளை தயாரித்து அதற்குப் பதில் அளிக்கும்படி ராஜகோபாலனிடம் போலீசார் இன்னும் தீவிரமாக விசாரணை நடத்தியதாகவும் தகவல்கள் அப்போது வெளியானது. அதன் படி, சுமார் 250 கேள்விகளுக்கு எழுத்துப்பூர்வமாகப் பதில் அளிக்கும்படி போலீசார் கூறியதாகவும் கூறப்பட்டது.

போலீசார் சரமாரி கேள்விகள் கேட்டு கிடிக்குப்பிடி விசாரணை நடத்தியதை, போலீசார் வீடியோவாகவும் பதிவு செய்தனர். 

இந்த விசாரணையின் போது, ஆசிரியர் ராஜகோபாலன் ஆன்லைன் வகுப்பிற்கு வீடியோவில் வரும் மாணவிகளை சூம் zoom செய்து, ஆபாசமாகப் புகைப்படம் எடுத்து ரசித்ததும் விசாரணையில் அப்போது தான் தெரிய வந்துள்ளது. இந்த சம்பவம், இன்னும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

2 நாட்கள் அவரிடம் பெறப்பட்ட வாக்குமூலத்தின் அடிப்படையில், ராஜகோபால் மாணவிகளை பாலியல் தொந்தரவு செய்த விதத்தையும், பதிவு செய்து
ஒவ்வொரு குற்றப்பத்திரிக்கையாகத் தாக்கல் செய்து, ஆசிரியர் ராஜகோபாலுக்கு அதிகப்படியான தண்டனை பெற்றுத்தர போலீசார் நடவடிக்கை மேற்கொண்டு
வருவதாகவும் பேசப்பட்டது. 

இவற்றுடன், பத்மசேஷாத்ரி பள்ளி ஆசிரியர் ராஜகோபாலனிடம் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில், ஆசிரியர்கள் சிலர் மீதும், பள்ளி நிர்வாகம் மீதும் நடவடிக்கை எடுக்கக் காவல் துறையினர் திட்டமிட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியானது.

இந்நிலையில், இந்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ஆசிரியர் ராஜகோபாலனை குண்டர் சட்டத்தில் அடைக்க சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் தற்போது உத்தரவிட்டுள்ளார். அவர் மீதான வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய போலீசார் முடிவு செய்து உள்ளனர். இதனால், இந்த வழக்கு, மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.