தமிழக புவிசார் குறியீட்டு பொருட்களுக்கு வெளிநாடுகளில் நல்ல வரவேற்பு இருக்கிறது. எனவே அதன் தரம் குறைந்துவிடக் கூடாது என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேட்டுக் கொண்டுள்ளார்.

மத்திய அரசின் வர்த்தக அமைச்சகத்தின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் இந்திய ஏற்றுமதி நிறுவனங்களின் கூட்டமைப்பு  பியோ சார்பில் தென்மண்டல சிறந்த ஏற்றுமதியாளர் விருது வழங்கும் விழா சென்னை ஆழ்வார்ப்பேட்டையில் உள்ள நட்சத்திர ஓட்டலில் நேற்று நடைபெற்றது.

இந்நிலையில் இந்த விழாவுக்கு கூட்டமைப்பின் தலைவர் ஏ.சக்திவேல் தலைமை தாங்கினார். தமிழக தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, சிறு, குறு-நடுத்தர தொழில்நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன், அரசு செயலாளர் அருண் ராய், கூட்டமைப்பின் தலைமை செயல் அதிகாரி அஜய் சகய் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சிறப்பு விருந்தினராக பங்கேற்று, சிறந்த ஏற்றுமதியாளர்களுக்கு விருதுகளையும், சான்றிதழ்களையும் வழங்கி பாராட்டினார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் சுங்கத்துறை சென்னை மண்டல தலைமை கமிஷனர் எம்.வி.எஸ்.சவுத்ரி, ஜி.எஸ்.டி. மற்றும் கலால் வரி சென்னை வடக்கு கமிஷனர் சுதா கவுக்கா ஆகியோர் வர்த்தக சேவைக்கான சிறப்பு விருதுகளை பெற்றனர். ‘ஹூண்டாய் மோட்டார்’ நிறுவனத்துக்கு தலை சிறந்த ஏற்றுமதிக்கான தங்க விருது வழங்கப்பட்டது. இந்த விருதை அந்த நிறுவனத்தை சேர்ந்த கணேஷ் மணி தலைமையிலான அதிகாரிகள் குழுவினர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் பெற்றுக் கொண்டனர்.

விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது: கடந்த 2020-21-ம் ஆண்டில், இந்தியாவின் சர்வதேச வர்த்தகத்தில் ரூ.1 லட்சத்து 93 ஆயிரம் கோடி ஏற்றுமதி செய்து 8.97 சதவீத பங்களிப்புடன் இந்தியாவிலேயே 3-வது பெரிய மாநிலமாகத் தமிழ்நாடு திகழ்கிறது என்பதை நான் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன். இது ஆண்டுதோறும் அதிகமாக வேண்டும். தமிழ்நாடு முதன்மையான மாநிலமாக ஆக வேண்டும் என்பதுதான் இந்த அரசினுடைய விருப்பம், என்னுடைய லட்சியம்.

அதனைத்தொடர்ந்து பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின் தமிழ்நாட்டின் தற்போதைய ஏற்றுமதி அளவு 26 பில்லியன் டாலர். அதில் இருந்து 2030-ம் ஆண்டிற்குள் 100 பில்லியன் அமெரிக்க டாலராக உயர்த்த வேண்டும். இதனை அடைவதற்கான புதிய உத்தியை கடந்த ஆண்டு செப்டம்பர் 22-ம் தேதி நான் வெளியிட்டேன். இதற்காக, பல்வேறு முன்னெடுப்புகளை அரசு செய்து வருகிறது. அதில் சிலவற்றை மட்டும் உங்களுக்கு நான் நினைவுபடுத்த விரும்புகிறேன். சென்னையின் வர்த்தக வளர்ச்சிக்கு குறிப்பாக, ஏற்றுமதிக்கு உயிர்நாடியாகத் திகழக்கூடிய மதுரவாயல்சென்னை துறைமுகம் உயர்மட்டச் சாலைத் திட்டத்தை நிறைவேற்றிட ரூ.5,570 கோடி மதிப்பீட்டில் 20.6 கி.மீ. நீளமுள்ள இரட்டை அடுக்கு உயர்மட்டச் சாலை அமைக்கப்பட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் தொடர்ந்து தமிழ்நாட்டின் தனித்தன்மையான தஞ்சாவூர் ஓவியங்கள், தட்டுகள், வீணை, கோவை கோரா காட்டன் சேலைகள், கோவில்பட்டி கடலைமிட்டாய், சேலம் பட்டு, ஈரோடு மஞ்சள், அலப்பை பச்சை ஏலக்காய், நீலகிரி தேயிலை, ஸ்ரீவில்லிப்புத்தூர் பால்கோவா, பழனி பஞ்சாமிர்தம், சிறுமலை மலை வாழைப்பழம் என 43 புவிசார் குறியீடு பெற்ற பொருட்கள் அதில் இருக்கிறது. கம்பம் பன்னீர் திராட்சை, சேலம் ஜவ்வரிசி, உடன்குடி பனங்கருப்பட்டி, மணப்பாறை முறுக்கு, தூத்துக்குடி மக்ரோனி, பண்ருட்டி முந்திரி மற்றும் பலாப்பழம், மார்த்தாண்டம் தேன் உள்ளிட்ட 24 பொருட்களுக்கு புவிசார் குறியீடு பெற விண்ணப்பித்து பரிசீலனையில் இருக்கிறது.

மேலும் வெளிநாடுகளிலும், இந்தப் பொருட்களுக்கு நல்ல வரவேற்பு இருக்கிறது. இதன் மூலம், நமது உற்பத்தியாளர்களும், ஏற்றுமதியின் மூலம் மேன்மை அடைந்திட முடியும். இவற்றை அதிகமாகத் தயாரிக்க வேண்டும். அதே நேரத்தில், கொஞ்சமும் தரம் குறைந்துவிடக் கூடாது. தமிழ்நாட்டில் இப்போது இருக்கும் திறனையும் வளத்தையும் வைத்துப் பார்க்கும்போது, ஏற்றுமதியில் நாம் இன்னும் பல மடங்கு உயர முடியும். இதனை அரசும், பியோ அமைப்பும் இணைந்து நிச்சயம் நிறைவேற்ற முடியும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.

அதனைத்தொடர்ந்து விழாவில் ‘பியோ’ அமைப்பின் மண்டல தலைவர் இஸ்ரார் அகமது வரவேற்று பேசினார். துணை தலைவர் கலித் கான் நன்றி கூறினார். இந்த விழாவில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி தலைவர் ஈ.ஆர்.ஈஸ்வரன், தமிழ் வர்ததக சபையின் தலைவர் சோழ நாச்சியார் ராஜசேகர் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.