உலகின் அதிநவீன வசதிகளை கொண்ட Mi-17V5 ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானது எப்படி என்பது குறித்து தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது. 

நீலகிரி மாவட்டம், குன்னுார், வெலிங்கடனில் ராணுவ உயரதிகாரிகளுக்கான பயிற்சிக் கல்லுாரி உள்ளது. இங்கு இன்று நடக்க இருந்த ராணுவ உயரதிகாரிகளுக்கான கூட்டத்தில் பங்கேற்பதற்காக இந்திய முப்படைத் தலைமை தளபதி பிபின் ராவத், அவரது மனைவி மற்றும் நான்கு பைலட்கள் உள்பட 14 பேர், கோவை மாவட்டம், சூலுாரிலுள்ள ராணுவ விமானப்படைத் தளத்திலிருந்து, 11.30 மணியளவில் ஹெலிகாப்டரில் வெலிங்டன் நோக்கி கிளம்பினர்.

ஹெலிகாப்டர் குன்னுார் மலைப்பாதையிலுள்ள காட்டேரி  பள்ளத்தாக்குக்கு மேலே பறந்த போது கடும் மேகமூட்டமான சூழ்நிலை நிலவியது. இதனால் ஏற்பட்ட காலநிலை குழப்பம் காரணமாக, ஹெலிகாப்டர் கட்டுப்பாட்டை இழந்து மரத்தில் மோதி விழுந்து  விபத்துக்குள்ளானது. 

ஹெலிகாப்டர் விபத்தில் அதில் பயணித்த 4 ராணுவ வீரர்கள் பலியானதாக முதல் கட்ட தகவல் வெளியானது. இதுவரை  13 பேரின் உடல்கள்   மீட்கப்பட்டுள்ளன. ஒருவர் உயிருக்கு போராடிய நிலையில் மீட்கப்பட்டு குன்னுார் ராணுவ மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு உள்ளார். 

BIPIN RAWAT DEATH

மரத்தில் மோதி ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதாக நேரில் பார்த்தவர்கள் தகவல் தெரிவித்து உள்ளனர். ராணுவ ஹெலிகாப்டர் குன்னூர் மலைப்பகுதியில் தாழ்வாக பறந்ததாகவும், சிறிது நேரத்தில் மரத்தில் மோதி எரிந்த நிலையில் விழுந்தததாகவும் நேரில் பார்த்தவர்கள் தெரிவிக்கின்றனர். 

இந்த விபத்தில் பிபின் ராவத் மற்றும் அவரது மனைவியும் உயிரிழந்ததாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஹெலிகாப்டரில் சென்ற 14 பேரில் குரூப் கேப்டன் வருண் சிங் மட்டும் உயிர் பிழைத்துள்ளார். படுகாயமடைந்த அவர், வெலிங்டன் ராணுவ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவரது உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

விபத்தில் உயிரிழந்த முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் மற்றும் 13 பேருக்கு, குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் நரேந்திர மோடி, பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், உள்துறை அமைச்சர் அமித் ஷா, வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

ஹெலிகாப்டர் விபத்து குறித்து பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் மக்களவையில் நாளை அறிக்கை தாக்கல் செய்ய உள்ளார். அதிநவீன தொழில்நுட்பம் மற்றும் பாதுகாப்பு வசதிகளை கொண்ட போதிலும் ராணுவ ஹெலிகாப்டர் எப்படி விபத்துக்குள்ளானது என்பதில் மர்மம் நீடிக்கிறது. 

இதுகுறித்து விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும், விரைவில் விபத்திற்கான காரணம் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படும் என்றும் பாதுகாப்பு துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இந்நிலையில் இந்தியாவின் முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் பயணித்த ஹெலிகாப்டர் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன. அதில் ஹெலிகாப்டர் MI-17V5 ரகத்தைச் சேர்ந்தது. ரஷ்ய நிறுவனமான கசன் ஹெலிகாப்டர்ஸிடமிருந்து இந்தியா இதனை வாங்கியது. 

BIPIN RAWAT DEATH

இது ராணுவ ஆயுதங்கள், வீரர்களை ஏற்றிச் செல்லும் வகையில் வடிவமைக்கப்பட்டது. உலகில் இருக்கும் அதிநவீன ஹெலிகாப்டர்களில் இதுவும் ஒன்று. இதனை தீயணைப்புப்பணி, பாதுகாப்புப் பணி, கண்காணிப்பு, மீட்புப்பணி ஆகியவற்றுக்கும் பயன்படுத்த முடியும்.  கடுமையான மழை பெய்யும் பகுதி, கடற்பகுதி, பாலைவனம் ஆகியவற்றிலும் இந்த ரக ஹெலிகாப்டர்கள் சிறப்பாக பறக்கும் தன்மை கொண்டவை. 

கதவுகளை இழுவை மூலம் திறப்பது போன்று வடிவமைக்கப்பட்டுள்ளது. பாராசூட் உபகரணங்கள், தேடுதல் விளக்குகள், எப்எல்ஐஆர் சிஸ்டம், எமர்ஜெனிஸ் ப்ளோட்டிங் சிஸ்டம் உள்ளன. 36 ராணுவ வீரர்கள், 4.50 டன் பொருட்களை சுமந்து செல்லும் திறன் படைத்தது. இந்த ஹெலிகாப்டரில் ஷட்டர்ன் வி ரக துப்பாக்கிகள், எஸ்-8 ரக ராக்கெட்டுகள், 23எம்எம் எந்திர துப்பாக்கிகள், பிகேடி எந்திர துப்பாக்கி, ஏகேஎம் எந்திரதுப்பாக்கி மூலம் எதிரிகளை சுடமுடியும் தாக்க முடியும். 

எதிரிகளின் இருப்பிடத்தை ராக்கெட் வீசி அழிப்பது, வாகனங்களை அழிப்பது, குறிவைத்து தாக்குதல், நகரும் இலக்குகளை சரியாகத் தாக்குவது போன்றவற்றை இந்த ஹெலிகாப்டர் மூலம் செய்யலாம். இந்த ஹெலிகாப்டரில் ஃபோம் பாலியுரேதேன் எனும் வேதிப்பொருள் எரிபொருள் டேங்கில் நிரப்பப்பட்டிருக்கும். இது ஹெலிகாப்டர் வெடித்துச் சிதறும்போது, பெரிய விபத்து ஏற்படாமல் தடுத்துவிடும். 

இது மணிக்கு அதிகபட்சமாக 250 கி.மீ வேகத்திலும், சராசரியாக 580 கி.மீ தொலைவும், அதிகபட்சமாக 1,065 கி.மீ தொலைவையும் எரிபொருள் மூலம் கடக்க முடியும். அதிகபட்சமாக 6 ஆயிரம் மீட்டர் உயரம் வரை பறக்க முடியும். இத்தகைய அதிநவீன ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதன் காரணம் குறித்து தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.