முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜிக்கு 15 நாட்கள் நீதிமன்ற காவலில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார்.

 

rajendra balaji

கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் பால்வளத் துறை அமைச்சராக இருந்த கே.டி.ராஜேந்திரபாலாஜி மூலம் ஆவின் உள்ளிட்ட அரசின் பல்வேறு துறைகளில் வேலை வாங்கி தருவதாக கூறி 3 கோடி ரூபாய் பெற்றுக்கொண்டு பணியும் வழங்காமல் பணத்தையும் திருப்பி கொடுக்காமல் ஏமாற்றியதாக புகார் எழுந்தது. அவரது உதவியாளரிடமும் ரூ.1 கோடியே 60 லட்சம் கொடுத்திருந்ததாகவும் மேலும் கட்சி பணிகளுக்கு ரூ.1 கோடியே 50 லட்சம் என மொத்தம் ரூ.3 கோடியே 10 லட்சம் கொடுத்ததாகவும் தெரிவிக்கப்பட்டது. 

மேலும் இந்த பணத்தை திருப்பி தராமல் மோசடி செய்துவிட்டதாக கே.டி.ராஜேந்திர பாலாஜி மற்றும் அவரது உதவியாளர்கள் பாபுராஜ், பலராமன், முத்துப்பாண்டி ஆகிய 4 பேர் மீது மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் புகார் அளிக்கப்பட்டது. இதை தொடர்ந்து போலீசார் கடந்த மாதம் 15-ம் தேதி வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். இந்நிலையில் பண மோசடி புகாரில் அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியின் சகோதரி மகன்கள் வசந்தகுமார், ரமணன் மற்றும் கார் ஓட்டுநர் ராஜ் குமார் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதனை தொடர்ந்து முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி இந்த வழக்கில் தனக்கு முன்ஜாமீன் வழங்க கோரி ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை நேற்று காலை சென்னை ஐகோர்ட்டு தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. இதற்கிடையில் நேற்று காலை விருதுநகரில் நடந்த அ.தி.மு.க. ஆர்ப்பாட்டத்தில் பேசிய முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி அங்கிருந்து புறப்பட்டு சென்றுவிட்டார். இதனை தொடர்ந்து மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் அவரை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர். 

இந்நிலையில் முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியை பிடிக்க மேலும் 6 தனிப்படைகள் அமைக்கப்பட்டது. ஏற்கனவே 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ள நிலையில் அதன் எண்ணிக்கை தற்போது 6 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளதாக விருதுநகர் எஸ்.பி.மனோகரன் தகவல் அளித்துள்ளார். இந்நிலையில் ராஜேந்திர பாலாஜி கர்நாடகாவில் தனிப்படை போலீஸாரால்  கைது செய்யப்பட்டுள்ளார்.

மேலும் கைது செய்யப்பட்ட அவரை தனிப்படை போலீசார் நேற்று தமிழ்நாடு அழைத்து வந்தனர். பின்னர் ராஜேந்திரபாலாஜி விருதுநகர் போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டார். அதன்பின்னர் ராஜேந்திரபாலாஜி விசாரணைக்காக நேற்று இரவு விருதுநகர் மாவட்டத்திற்கு அழைத்து வரப்பட்டார். அங்கு மாவட்ட குற்றப்பிரிவு அலுவலகத்தில் அவர் ஆஜர்படுத்தப்பட்டார். அவரிடம் போலீசார் விடிய விடிய விசாரணை நடத்தினர்.

அதனைத்தொடர்ந்து  ராஜேந்திர பாலாஜி ஸ்ரீவில்லிபுதூரில் உள்ள குற்றவியல் கோர்ட்டில் நீதிபதி பரம்வீர் முன் இன்று ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது, தனக்கு ஜாமீன் வழங்க வேண்டும் என ராஜேந்திர பாலாஜி தரப்பில் வாதிட்டப்பட்டது. ஆனால், போலீசார் தரப்பில் ராஜேந்திர பாலாஜியை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதிக்க வேண்டும் என வாதிடப்பட்டது. இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி ராஜேந்திர பாலாஜிக்கு 15 நாட்கள் நீதிமன்ற காவல் விதித்து அதிரடி உத்தரவு பிறப்பித்தார். இதையடுத்து, வரும் 20-ம் தேதி வரை ராஜேந்திர பாலாஜியை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து ராஜேந்திர பாலாஜி சிறையில் அடைக்கப்பட்டார்.