அதிமுகவில் இருந்து முன்னாள் அமைச்சர் அன்வர் ராஜாவை அதிரடியாக நீக்கி ஓ.பன்னீர்செல்வம் - எடப்பாடி பழனிசாமி ஆகியோர் நடவடிக்கை எடுத்து உள்ளது தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

அதிமுக முன்னாள் அமைச்சரும், முன்னாள் எம்.பி.யும், அந்த கட்சியின் சிறுபான்மையினர் நலப்பிரிவு செயலாளருமான அன்வர் ராஜா, சமீபத்தில் அக்கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி குறித்து சில கருத்துகளை வெளியிட்டார். 

முக்கியமாக, முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை, அன்வர் ராஜா ஒருமையில் பேசும் ஆடியோ பதிவு ஒன்று வெளியாகி அதிமுக வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. 

அத்துடன், சசிகலாவுக்கு ஆதரவான நிலைப்பாட்டில் அன்வர் ராஜா இருந்து வந்ததாகவும் செய்திகள் பரவியது. 

மேலும், இந்த விசயங்கள் எல்லாம் கடந்த 24 ஆம் தேதி நடைபெற்ற அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்திலும் மிகப் வெளிப்படையாகவே, அன்வர் ராஜா வெளிப்படுத்தினார் என்றும் கூறப்படுகிறது. 

அப்போது நடைபெற்ற அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகத்துக்கும், அன்வர் ராஜாவுக்கும் இடையே கடும் வாக்குவாதமும் ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது.

இந்த வாக்குவாதம், அதிமுகவினர் இடையே கடும் விவாத பொருளாகவும் மாறிப்போனது. அந்த நேரத்தில், “அன்வர் ராஜா மீது கட்சி ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று, சில அதிமுக நிர்வாகிகள் வலியுறுத்தினர்.

இந்த நிலையில் தான், அதிமுகவில் இருந்து அன்வர் ராஜாவை நீக்கி, அக்கட்சியின் தலைமை அதிரடி நடவடிக்கையை தற்போது எடுத்து உள்ளது. 

இது தொடர்பாக அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் கூட்டாக வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “அதிமுகவின் கொள்கை, குறிக்கோள்களுக்கும், கோட்பாடுகளுக்கும் முரணான வகையில் செயல்பட்டதாலும், கட்சியின் கண்ணியத்துக்கு மாசு ஏற்படும் வகையில் நடந்து கொண்டதாலும், கட்சியின் கட்டுப்பாட்டை மீறி கட்சி நடவடிக்கைகள் குறித்து கட்சியின் தலைமையின் முடிவுக்கு மாறான கருத்துகளை தெரிவித்து, கட்சிக்கு களங்கமும், அவப்பெயரும் உண்டாகும் விதத்தில் செயல்பட்ட காரணத்தினாலும், ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த முன்னாள் அமைச்சரும், கட்சியின் சிறுபான்மையினர் நலப்பிரிவு செயலாளருமான அ.அன்வர்ராஜா, கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உள்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கி வைக்கப்படுகிறார்” என்று, தெரிவிக்கப்பட்டு உள்ளது.

மேலும், “கட்சியினர் யாரும் இவருடன் எவ்வித தொடர்பும் வைத்துக்கொள்ள கூடாது என கேட்டுக்கொள்கிறோம்” என்றும், அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் கூட்டாக அறிக்கை வெளியிட்டு உள்ளனர்.

அன்வர் ராஜா கட்சியில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டு உள்ளது, அதிமுகவினர் இடையே பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.

முக்கியமாக, அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டுள்ள அன்வர் ராஜாவுக்கு தற்போது 72 வயதாகும் நிலையில், அவர் திமுகவில் சேர உள்ளதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளன.

இதனிடையே, அதிமுக செயற்குழு கூட்டம் சென்னை ராயப்பேட்டையில் உள்ள அக்கட்சி தலைமை அலுவலகத்தில் இன்று நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.