கணவருடன் சேர்த்து வைக்கக் கோரி நடுரோட்டில் உருண்டு புரண்டு அழுத பெண் வழக்கறிஞர், வரதட்சணை கேட்கும் கணவருக்கு எதிராகப் போராட்டம் நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

கன்னியாகுமரி மாவட்டம் திருத்துவபுரத்தைச் சேர்ந்த 28 வயதான பிரியதர்ஷினி, அந்த பகுதியில் வழக்கறிஞராக பணியாற்றி வருகிறார். இவருக்கும், முளகுமூடு பகுதியைச் சேர்ந்த உதவி பேராசிரியர் ராஜ ஷெரின் என்பவருக்கும் கடந்த ஆண்டு திருமணம் நடைபெற்றது.

திருமணத்தின் போது, பெண் வீட்டார் சார்பில் 101 சவரன் நகையும், 5 லட்ச ரூபாய் பணத்தோடு, 2 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்களும் வரதட்சணையாகக் கொடுக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

திருமணமான தொடக்கத்தில், மனைவியிடம் பாசமாகவும், கனிவாகவும் நடந்து கொண்ட ராஜ ஷெரின், பின்னர் சில பெண்களுடனான தவறான தொடர்பு காரணமாக, மனைவியை விட்டு ஒதுங்கி இருந்ததாகக் கூறப்படுகிறது.

அத்துடன், தவறான பெண்களின் சகவாசத்தால், அதிக அளவில் பணத்தை இழந்து கடனில் சிக்கிய ராஜ ஷெரினும், அவனது குடும்பத்தினரும் கடன் அதிகரித்து உள்ளது. இந்த கடனை சமாளிக்க பிரியதர்ஷினியை பெற்றோர் வீட்டில் இருந்து மேலும் 100 சவரன் நகைகளையும், சொத்துகளை எழுதி வாங்கி வரச் சொல்லிக்
கொடுமைப்படுத்தத் தொடங்கி உள்ளனர்.

ஆனால், இதனை ஏற்றுக்கொள்ள மறுத்த அந்த பெண்ணை உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் கடுமையாக துன்புறுத்தியதாகக் கூறப்படுகிறது. அத்துடன், இது 

குறித்து தனது கணவரிடம் அவர் நியாயம் கேட்டுள்ளார். ஆனால், அவர் எந்த பதிலும் கூறாமல் இருந்ததால், கணவனின் குடும்பத்தினர் தரும் கொடுமைகள் குறித்தும், கணவன் ராஜ ஷெரின் குறித்தும், மனைவி பிரியதர்ஷினி மார்த்தாண்டம் காவல் நிலையில் புகார் அளித்தார். 

பின்னர், சட்ட ஆலோசகர் அறிவுரையின் பேரில், அங்குள்ள கோணம் அருகே தனியாக வீடு ஒன்றை எடுத்து ராஜ ஷெரினும் - பிரியதர்ஷினியும் தனிக் குடித்தனம் நடத்தி வந்தனர்.

இந்த நிலையில் தான், “சென்னையில் தனக்கு அதிக ஊதியத்தில் வேலை கிடைத்துள்ளது என்றும், அங்கு வேலையில் சேர்ந்தவுடன் உன்னை சென்னைக்கு அழைத்துச் செல்கிறேன்” என்றும், தன் மனைவி பிரியதர்ஷினியிடம் கூறிவிட்டு, வீட்டை விட்டுச் சென்ற ராஜ ஷெரின், அதன் பிறகு மீண்டும் வீட்டுக்கிற்கு வரவில்லை.

அதன் தொடர்ச்சியாக, தொலைபேசி மூலம் பல முறை தொடர்பு கொள்ள முயன்ற பிரியதர்ஷினி, சில நாட்களாக கடும் மன உளைச்சலுக்கு ஆளாகி சாப்பாடு கூட சாப்பிடாமல் இருந்து வந்திருக்கிறார். 

பின்னர், நேற்று இரவு தனது கணவனை தேடி அவரது பெற்றோர் வீட்டுக்குச் சென்ற பிரியதர்ஷினி, கணவனைப் பார்த்து நியாயம் கேட்டு உள்ளார். அதற்கு, ராஜ ஷெரின் குடும்பத்தினருடன் சேர்ந்து வீட்டை விட்டு வெளியே தள்ளி கதவை சாத்திவிட்டதாகக் கூறப்படுகிறது. 

இதனால், எடுத்து என்ன செய்வது என்று தெரியாமல் தவித்த பிரியதர்ஷினி, கணவர் வீட்டுக்கு முன் நின்று கதறி, கதறி அழுது, “உங்களுக்கு இன்னும் எவ்வளவு பணம் வேண்டுமானாலும் என் பெற்றோரிடம் இருந்து வாங்கி வருகிறேன் என்றும், என்னைத் தயவு செய்து ஏற்றுக் கொள்ளுங்கள்” என்றும், உள் பக்கமாகப் பூட்டிக்கொண்ட வீட்டுக்கு முன்பாக பிரியதர்ஷினி கதறி அழுது உள்ளார். 

பின்னர், அங்கு வந்த போலீசார், அவரை சமாதானம் செய்ய முயன்ற நிலையில், அப்போது பெய்த மழைக்கு நடுவிலும், வீட்டின் முன்பு இருந்த நடுரோட்டில் உருண்டு, புரண்டு தனது கணவரை தன்னுடன் சேர்த்து வைக்ககோரி போலீசாரிடம் வழக்கறிஞர் பிரியதரிஷினி மன்றாடி உள்ளார்.

இதனையடுத்து, போலீசார் பிரியதர்ஷினியை சமாதானப்படுத்தி விசாரணை நடத்தினர். அப்போது, “வீட்டிற்குள் இருந்த கணவன் ராஜ ஷெரின், பின் வாசல் வழியாகத் தப்பி ஓடிவிட்டதாகவும், அவரை கண்டுபிடித்து விசாரணை நடத்தி நியாயம் கிடைக்கச் செய்கிறோம்” என்றும், போலீசார் உறுதி அளித்தனர். இதனால், அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.