ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்ய அவசர சட்டத்தை உடனடியாக பிறப்பிக்க வேண்டும் என்று டாக்டர் ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார்.

online gambling

தமிழகத்தில் ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்வதற்கான அவசர சட்டத்தை உடனடியாக பிறப்பிக்க வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழ்நாட்டில் ஆன்லைன் சூதாட்டத்திற்கு விரைவில் முற்றுப்புள்ளி வைக்கப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சட்டப்பேரவையில் தெரிவித்திருக்கிறார். முதலமைச்சரின் இந்த உத்தரவாதம் வரவேற்கத்தக்கது. ஆனால் ஆன்லைன் சூதாட்டம் முடிவு கட்டுவதற்கான தமிழக அரசின் அணுகுமுறை அரசும், மக்களும் எதிர்பார்க்கும் தீர்வை வழங்காது என்பது தான் எதார்த்தம் ஆகும் என்று தெரிவித்தார்.

மேலும் இந்நிலையில் ஆன்லைன் ரம்மி ஆட்டத்தில் ஒருபுறத்தில் மனிதர்கள் ஆடினால் மறுபுறத்தில் ஆடுபவை மென்பொருள் மூலம் வடிவமைக்கப்பட்ட ரோபோக்கள். ஆன்லைன் ரம்மி விளையாடும் போது முதலில் ஒரு சில ஆட்டங்களில் மனிதர்கள் வெற்றி பெறுவர். அதனால் தொடர்ந்து வெற்றி பெறலாம் என்று நம்பும் மனிதர்கள் அடுத்தடுத்து பணம் கட்டி விளையாடும் போது அவர்களுக்கு தோல்வியே பரிசாக கிடைக்கும் . மேலும் அதற்கேற்ற வகையில் தான் ஆன்லைன் சூதாட்டங்களின் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது என்பதை ஆதாரங்களுடன் விளக்கி ஆன்லைன் ரம்மி என்பது திறமை சார்ந்த விளையாட்டு அல்ல என்று நிரூபிக்கும் வகையில் சட்டம் இயற்ற வேண்டும். அந்த சட்டம் தான் நீதிமன்றங்களால் ஏற்கப்படும். இதை சென்னை உயர்நீதிமன்றமும் அதன் தீர்ப்பில் குறிப்பிட்டு, புதிய சட்டம் இயற்ற அறிவுறுத்தியது.

இதனைத்தொடர்ந்து அதற்கு மாறாக உச்ச நீதிமன்றத்தை அணுகுவதால் எந்த பயனும் விளையாது. தமிழக அரசின் ஆன்லைன் சூதாட்டத் தடை சட்டத்தை ரத்து செய்து உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்ததற்கு அடுத்த நாளே, திருத்தப்பட்ட சட்டத்தை இயற்ற வேண்டும் என்று வலியுறுத்தினேன். தமிழக அரசின் சட்ட அமைச்சரும் அதை ஏற்றுக் கொள்ளும் வகையில், புதிய சட்டத்தை இயற்ற முதலமைச்சர் ஆணையிட்டிருப்பதாக தெரிவித்தார். ஆனால் அடுத்த சில வாரங்களில் ஆன்லைன் சூதாட்டத் தடை சட்டம் ரத்து செய்யப்பட்டதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் அரசு மேல்முறையீடு செய்வதாக அமைச்சர் அறிவித்தார்.

மேலும் இத்தகைய சூழலில் உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசின் மேல்முறையீடு மீது தீர்ப்பு வரும் வரை ஆன்லைன் சூதாட்டத்தில் மக்கள் பணத்தை இழக்கவும், தற்கொலை செய்து கொள்ளவும் அனுமதிக்க முடியாது. ஆன்லைன் சூதாட்டத் தடை சட்டம் செல்லாது என்று அறிவிக்கப்பட்டதற்கு பிந்தைய 5 மாதங்களில் மட்டும் ஆன்லைன் சூதாட்ட அரக்கன் 2 குழந்தைகள் உட்பட 12 உயிர்களை பலி கொண்டிருக்கிறான்.

மேலும் இனி தமிழ்நாட்டில் ஆன்லைன் சூதாட்டத்தில் ஒருவர் கூட பணத்தை இழக்கக்கூடாது ஓர் உயிர் கூட பறி போகக்கூடாது ஒரு குடும்பம் கூட நடுத்தெருவுக்கு வந்து விடக் கூடாது என்பது தான் தமிழக அரசின் நிலையாக இருக்க வேண்டும். அத்தகைய நிலையை ஏற்படுத்துவதற்காக தமிழகத்தில் ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்வதற்கான அவசர சட்டத்தை உடனடியாக பிறப்பிக்க வேண்டும். மார்ச் மாதம் மீண்டும் கூடும் பேரவையில் அதற்கான சட்டத்தை கொண்டு வந்து நிறைவேற்ற வேண்டும் பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் வலியுரித்துள்ளார்.