சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரத்தில் இருக்கும் மாவட்டங்களில், ஏரிகள் வேகமாக நிரம்பி வருவதால், வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கடந்த அக்டோபர் மாதம் முதல் வடகிழக்கு பருவமழை துவங்கி, தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலும் கனமழை பெய்து வருகிறது. மேலும், தென்கிழக்கு வங்க கடல் முதல், தமிழக கடலோரப் பகுதி வரை வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுவதன் காரணமாகவும், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் மழை பெய்து வருகிறது. 

தொடர் மழை காரணமாக, சென்னையை சுற்றியுள்ள ஏரிகளுக்கு நீர்வரத்து அதிகரித்து காணப்படுகிறது. இதன்காரணமாக, திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள 58 ஏரிகள், 100 சதவிகிதம் முழு கொள்ளளவை எட்டியுள்ளது. திருவள்ளூர் மாவட்டத்தில் பொதுப்பணித் துறை கொசஸ்தலை வடிநில கோட்டத்தின் கீழ் 336 ஏரிகள் இருக்கிறது. 

இந்த ஏரிகளில் 58 ஏரிகள், 100 சதவிகிதம் நிரம்பியுள்ளது. மேலும் 37 ஏரிகள் 76 சதவிகிதமும், 50 ஏரிகள் 51 சதவிகிதமும், 107 ஏரிகள் 50 சதவிகிதமும், 79 ஏரிகள் 25 சதவிகிதமும் நிரம்பியுள்ளதாக பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

lake

பூண்டி நீர்தேக்கத்தில் மொத்த உயரமான 35 அடியில் ,தற்போது நீர்வரத்து அதிகரித்துள்ளதால், நீர்மட்டம் 33.98 அடியாக உயர்ந்துள்ளது. மொத்த கொள்ளளவான 3ஆயிரத்து 231 மில்லியன் கனஅடி நீரில், தற்போது, 2 ஆயிரத்து 786 மில்லியன் கனஅடி நீர் உள்ளது. நீர்வரத்து வினாடிக்கு 2 ஆயிரத்து 244 கன அடியாக உள்ள நிலையில், 4 ஆயிரத்து 883 கனஅடி நீர் திறந்து வெளியேற்றப்பட்டு வருகிறது.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் பொதுப்பணித்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள 381 ஏரிகளில், 138 ஏரிகள் முழு கொள்ளளவை எட்டியுள்ளது. 88 ஏரிகள் 70 சதவீதத்துக்கு மேலும்,48 ஏரிகள் 50 சதவீதத்துக்கு மேலும், நிரம்பி உள்ளது என பொதுப்பணித்துறை அதிகாரிகள் கூறியுள்ளனர்.

செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் ஏரியின் முழு கொள்ளளவான 23.3 அடி நிரம்பி, உபரி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. இதனால் ஏரியின் கரையோரத்தில் வசிக்கும் 21 கிராம மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. 

மதுராந்தகம் ஏரியில் மொத்த கொள்ளளவான 3ஆயிரத்து 645 மில்லியன் கன அடியில், தற்போது 2ஆயிரத்து 942 மில்லியன் கனஅடி நீர் இருப்பு உள்ளது. நீர்வரத்து விநாடிக்கு 710 கன அடியாக உள்ள நிலையில், ஏரியிலிருந்து வினாடிக்கு 2 ஆயிரத்து 144 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.

lake5

அதேபோல, சென்னையின் முக்கிய குடிநீர் ஆதாரமாக விளங்கும் புழல் ஏரி, அதன் மொத்த உயரமான 21.20 அடியில், தற்போது 19.52 அடியாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது. மொத்த கொள்ளளவான 3 ஆயிரத்து 300 மில்லியன் கனஅடி நீரில், தற்போது 2 ஆயிரத்து 916 கனஅடி நீர் இருப்பு உள்ளது. நீர்வரத்து விநாடிக்கு ஆயிரத்து 357 கனஅடியாக உள்ள நிலையில், 2 ஆயிரம் கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது.

சோழவரம் ஏரியில், அதன் மொத்த உயரமான 18.86 அடியில் தற்போது, 18 அடியாக உயர்ந்துள்ளது. மொத்த கொள்ளளவான ஆயிரத்து 81 மில்லியன் கனஅடியில், 908 மில்லியன் கனஅடி நீர் இருப்பு உள்ளது. நீர்வரத்து வினாடிக்கு 520 கன அடியாக உள்ள நிலையில், ஆயிரத்து 200 கனஅடி நீர் திறந்து வெளியேற்றப்பட்டு வருகிறது.