திமுகவின் தேர்தல் பணிக்குழு செயலாளரும், முன்னாள் எம்.எல்.ஏவுமான வீரபாண்டி ஆ.ராஜா சேலத்தில் இன்று காலமானார். திமுகவினர் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

திமுகவின் முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகத்தின் இளைய மகன் வீரபாண்டி ராஜாவு, இன்றைய தினம் தனது பிறந்த நாளை முன்னிட்டு தனது தந்தை வீரபாண்டி ஆறுமுகத்தின் சிலைக்கு மாலை அணிவித்துவிட்டு வீடு திரும்பினார். 

அப்போது, அவர் திடீரென மயங்கி விழுந்து உள்ளார். இதனையடுத்து, அவரது குடும்பத்தினர் மற்றும் ஆதரவாளர்கள் பதறிப்போய், அவரை மீட்டு உடனடியாக அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர்.

அப்போது, அவரை பரிசோதித்த மருத்துவர்கள், “அவர் ஏற்கெனவே இறந்துவிட்டதாக” மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

ஏற்கெனவே, உடல் நலக்குறைவால் வீரபாண்டி ஆறுமுகத்தின் மூத்த மகன் செழியன் உயிரிழந்த நிலையில், தற்போது அவரது இளைய மகன் ராஜாவும் உயிரிழந்திருப்பது அவரது குடும்பத்திலும், அவரது ஆதரவாளர்கள் மத்தியிலும் பெரும் சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.

உயிரிழந்த வீரபாண்டி ராஜா, தற்போது திமுக தேர்தல் பணிக்குழு மாநிலச் செயலாளர்களில் ஒருவராக இருந்தார். வீரபாண்டி ராஜா மரணம், திமுக தொண்டர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இந்த நிலையில், வீரபாண்டி ராஜா மறைவுக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இரங்கல் தெரிவித்து உள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “சேலத்துச் சிங்கம் வீரபாண்டியாரின் மகனும், சேலம் மண்டலத்தில் கழகம் வளர்க்கும் வீரனாகவும் வலம் வந்தவர் அருமைச் சகோதரர் வீரபாண்டி ராஜா அவர்கள், இனிமையாய் பழகியும் அருமையான குணத்தாலும் அனைவரையும் ஈர்க்கும் பண்பு கொண்டவர் ராஜா” என்று, குறிப்பிட்டு உள்ளார். 

“எந்தப் பொறுப்பைக் கொடுத்தாலும் அதனைத் திறம்படச் செய்து முடிக்கக் கூடியவர் என்றும், இளைஞர் அணி மாவட்ட அமைப்பாளர், மாவட்டச் செயலாளர், தேர்தல் பணிக்குழுச் செயலாளர் எனக் கழகப் பொறுப்புகளில் சிறப்பாகச் செயல்பட்டதோடு சட்டமன்ற உறுப்பினராகவும் திறம்பட மக்கள் பணியாற்றியவர் சகோதரர் ராஜா” என்றும், அவர் நினைவுகூர்ந்து உள்ளார். 

“2 நாட்களுக்கு முன்னால் சேலத்துக்கு அரசு விழாவுக்குச் சென்றிருந்தபோது கூட வீரபாண்டி ராஜாவைச் சந்தித்தேன் என்றும், அப்போது அன்போடு பேசிக் கொண்டு இருந்தேன் என்றும், அந்த வெள்ளை உள்ளம் கொண்ட புன்சிரிப்பை மறக்க முடியவில்லை” என்றும், அவர் நினைவுகூர்ந்து உள்ளார்.

“இப்படியாக, மிக இளமைக் காலத்தில் செழியனை இழந்தோம். மருத்துவமனை வாசலில் தலைவர் கலைஞர் அவர்களே வாய் விட்டுக் கதறும் அளவுக்கு நம்மை விட்டுப் பிரிந்தார் அண்ணன் வீரபாண்டியார். இதோ இப்போது வீரபாண்டி ராஜா. 

வீரபாண்டியார் குடும்பத்துக்கு என்ன ஆறுதல் சொல்வது? என்னை நானே எப்படித் தேற்றிக் கொள்வது? வீரபாண்டி ராஜா போன்றோர் மறைவு தனிமனித மறைவு அல்ல, தூண் சாய்வது போல. எந்நாளும் அவர் புகழ் நிலைத்திருக்கும். கழகத் தொண்டர்கள் மனதில் எந்நாளும் ராஜா வாழ்வார்.

வீரபாண்டியார் குடும்பத்துக்கும் கழகச் செயல்வீரர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று,  முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், தனது இரங்கலை கூறியுள்ளார்.