முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் மாவட்ட கலெக்டர்கள், காவல்துறை, வனத்துறை அலுவலர்கள் மாநாடு இன்று தொடங்கி 3 நாட்கள் நடைபெற உள்ளது.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான மாவட்ட கலெக்டர்கள், காவல்துறை, வனத்துறை அலுவலர்கள் பங்கேற்கும் 3 நாட்கள் மாநாடு இன்று தலைமைச் செயலகத்தில் தொடங்குகிறது. 10,11 மற்றும் 12-ம் தேதி ஆகிய 3 நாட்களில் நடக்கும் இந்த மாநாட்டில் அமைச்சர்கள் மற்றும் அரசு உயர் அலுவலர்களும் கலந்து கொள்வார்கள்.

இந்நிலையில் தமிழக அரசு கடந்த 10 மாதங்களில் புதிய அறிவிப்புகளையும், திட்டங்களையும் அறிமுகப்படுத்தி செயல்படுத்தி வருகிறது. கவர்னர் உரை, முதலமைச்சரின் செய்தி வெளியீடுகள், சட்டமன்றத்தில் வெளியிட்ட அறிவிப்புகள், நிதிநிலை அறிக்கை, வேளாண்மை நிதிநிலை அறிக்கையில் வெளியிடப்பட்ட அறிவிப்புகள் என மொத்தம் 1,704 அறிவிப்புகள் இதுவரை வெளியிடப்பட்டு உள்ளன. அவற்றில் 80 சதவீதத்திற்கும் மேலான அறிவிப்புகளுக்கு அரசாணை வெளியிடப்பட்டு, செயல்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளன.

மேலும் மீதமுள்ள அறிவிப்புகளில் செயல்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ள பல்வேறு வளர்ச்சி திட்டங்களின் செயல்பாட்டை, கலெக்டர்கள் மூலமாக அறிந்து கொள்வதற்காகவும், அவற்றை மேலும் சிறப்பாகவும், விரைவாகவும் செயல்படுத்துவது குறித்து ஆலோசித்து உரிய அறிவுரைகளை வழங்குவதற்கும் இந்த மாநாடு நடைபெறுகிறது. இந்த மாநாட்டில் மாவட்ட நிர்வாகம், சட்டம் ஒழுங்கு, மாவட்ட வளர்ச்சிப்பணிகள் குறித்த விரிவான ஆய்வை முதலமைச்சர் மேற்கொள்வார். வேறு சிறப்பான திட்டங்களை கொண்டு வருவதற்கான நடவடிக்கை எடுப்பது குறித்தும் இந்த கூட்டத்தில் ஆலோசிக்கப்பட உள்ளது.

அதனைத்தொடர்ந்து சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையில் 10-வது மாடியில் இந்த மாநாடு இன்று காலை 10 மணிக்கு தொடங்குகிறது. 10 மணியில் இருந்து பிற்பகல் 1 மணி வரை கலெக்டர்கள், போலீஸ் அதிகாரிகள் இணைந்து பங்கேற்கும் கூட்டம் நடைபெறும். மாலை 4 முதல் 6.30 மணி வரை போலீஸ் அதிகாரிகளுக்கான கூட்டமும், விருது வழங்கும் நிகழ்ச்சியும் நடைபெறும். நாளை காலை 10 மணி முதல் பிற்பகல் 1 மணி வரையிலும், மாலை 4 முதல் 6.30 மணி வரையிலும் கலெக்டர்கள் மட்டும் பங்கேற்கும் மாநாடு நடத்தப்படும்.

நாளை மறுநாள் காலை 10 மணி முதல் பிற்பகல் 1 மணி வரையில் கலெக்டர்கள் மட்டும் பங்கேற்கும் கூட்டமும், மாலை 4 முதல் 6 மணி வரை கலெக்டர்கள் மற்றும் வனத்துறை அதிகாரிகள் இணைந்து பங்கேற்கும் கூட்டமும் நடைபெறும். மாலை 6 மணிக்கு மேல் விருதுகள் வழங்கப்படும்.