தமிழகத்தில் பல்வேறு புதிய தளர்வுகளுடன் வரும் 30-ஆம் தேதி வரை பொது முடக்கம் நீட்டிக்கப்பட்டுள்ளது. அதன்படி, வரும் 16-ஆம் தேதி முதல் 9ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரையில் பள்ளிகளை திறக்க தமிழக அரசு அறிவித்துள்ளது.

 

கொரோனா பரவலை தடுக்கும் வகையில் தமிழகத்தில் ஊரடங்கு அமலில் உள்ளது. தற்போது அமலில் உள்ள தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு கடந்த மாதம் முடிவடைந்தநிலையில், ஊரடங்கை வரும் நவம்பர் 30ம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். மேலும் பள்ளிகள் வரும் 16ம் தேதி முதல் செயல்படும் என்றும் தெரிவித்திருந்தார்.

 

இதில் 9, 10, 11 மற்றும் 12ம் வகுப்புகள் வரும் 16-ம்தேதி முதல் செயல்பட அனுமதி அளிக்கப்படும் என்றும், பள்ளி, கல்லுரி பணியாளர் விடுதிகளும் வரும் 16ந்தேதி முதல் செயல்பட அனுமதி அளிக்கப்படும் என்றும் தெரிவித்தார். மேலும் அனைத்துக் கல்லூரிகள், ஆராய்ச்சி நிறுவனங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களும் வரும் 16 ஆம் தேதி முதல் செயல்பட அனுமதி அளிக்கப்படுவதாக தெரிவித்தார்.

 

தமிழகத்தில் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளைத் திறக்க இரண்டு வார காலம் அவகாசம் உள்ள நிலையில், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் இன்று தலைமைச் செயலகத்தில் ஆலோசனை நடத்தி வருகிறார்.

 

பள்ளிகளை திறக்கும்போது எடுக்க வேண்டிய முன்னேற்பாடுகள் குறித்து ஆலோசிக்கப்பட்டு வருகிறது.

 

வகுப்பறைகளில் கிருமிநாசினியை தெளித்து சுத்தப்படுத்துதல், மாணவர்கள் பாதுகாப்பாக வந்து செல்வதை உறுதி செய்தல் உள்ளிட்ட ஏற்பாடுகள் குறித்தும் ஆலோசனை நடைபெற்று வருகிறது.

 

தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற இந்த ஆலோசனை கூட்டத்தில் பள்ளிக்கல்வித்துறை முதன்மைச் செயலாளர் தீரஜ்குமார் பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் கண்ணப்பன் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

 

மாணவர்களின் பாதுகாப்பு நலன் கருதி சமூக இடைவெளியுடன் கூடிய இருக்கைகள் அமைப்பது, மாணவர்களுக்கு தேவையான பிற பாதுகாப்பு தேவைகளை உறுதிசெய்வது என அனைத்தையும் தயார் நிலையில் வைப்பது, அனைவரும் முகக்கவசம் அணிந்து வருவதற்கான நடவடிக்கைகள் தொடர்பாகவும் விரிவாக ஆலோசிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

 

இந்த ஆலோசனை கூட்டத்தில் எடுக்கப்படும் முடிவுகள், விரைவில் தெரிவிக்கப்படும்.