நாமக்கல் கோவிந்தம்பாளையத்தில் முன்னாள்  அமைச்சர் தங்கமணி வீடு உள்ளிட்ட அவருக்கு சொந்தமான பல்வேறு இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் அதிரடி சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

கடந்த அதிமுக ஆட்சியில் மின்சாரத்துறை அமைச்சராக இருந்த தங்கமணி, வருமானத்திற்கு அதிகமாக சொத்துக்கள் சேர்த்ததாக அவர் மீது குற்றச்சாட்டு எழுந்தது.

இந்நிலையில் தான், அதிமுக முன்னாள் அமைச்சர் தங்கமணி வீடு மற்றும் அவருக்கு சொந்தமான இடங்களில் இன்று அதிகாலை முதலே லஞ்ச ஒழிப்புத்துறையினர் அதிரடியான சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

குறிப்பாக, அதிமுக முன்னாள் அமைச்சர் தங்கமணி வீடு மற்றும் அவருக்கு சொந்தமான மொத்தம் 69 இடங்களில் இந்த சோதனை நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. 

அதன்படி, சென்னையில் 14 இடங்களிலும், நாமக்கல் உள்பட 9 மாவட்டங்களிலும் இது தவிர கர்நாடகா மற்றும் ஆந்திரா மாநிலங்களிலும் முன்னாள் அமைச்சர் தங்கமணிக்கு தொடர்புடைய இடங்களில் இந்த சோதனை நடைபெற்று வருவதாகவும் தகவல் வெளியாகி உள்ளன.

மேலும், தங்கமணி கடந்த ஆட்சியில் அமைச்சராக இருந்த போது, அவர் வருமானத்திற்கு அதிமான சொத்து சேர்த்ததாக தகவல் கிடைத்ததின் அடைப்படையில் இது குறித்து அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு இந்த சோதனை நடைபெற்று வருவதாகவும் லஞ்ச ஒழிப்புத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

முக்கியமாக, அதிமுக முன்னாள் அமைச்சர் தங்கமணி, அவரது மகன் தரணிதரன், மனைவி சாந்தி மீதும் நாமக்கல் மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசார் ஊழல் வழக்குப் பதிவு செய்து உள்ளனர். 

மிக முக்கியமாக, தற்போது லஞ்ச ஒழிப்பு சோதனையில் சிக்கி உள்ள தங்கமணி, பிட்காயினில் அதிக முதலீடு செய்துள்ளதாகவும், இவற்றுடன் தங்கமணியின் மகன் பெரிய அளவில் முதலீடு செய்துள்ளதாகவும்,  சட்ட விரோதமாக சேர்த்த பணத்தில் பெருமளவை கிரிப்டோ கரன்சியில் முதலீடு செய்ததாகவும் எஃப்.ஐ.ஆரில் லஞ்ச ஒழிப்பு போலீசார் தகவல் தெரிவித்து உள்ளதாகவும் கூறப்படுகிறது.

ஏற்கனவே 4 அதிமுக முன்னாள் அமைச்சர்கள் வீடுகள் மற்றும் அவர்களுக்கு சொந்தமான இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடத்தியுள்ள நிலையில் இந்த சோதனை பட்டியலில் தற்போது தங்கமணியும் இணைந்து உள்ளார்.

இதனிடையே, தங்கமணிக்கு சொந்தமான இடங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனையில் ஈடுபட்டு வருவது அதிமுகவில் பெரிய அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தி நிலையில், அங்கு குவிந்த 100 க்கும் மேற்பட்ட அதிமுகவினர், திமுக மற்றும் காவல் துறையை கண்டித்து போராட்டம் நடத்தி வருகின்றனர். இதனால், போராட்டம் நடைபெறும் இடங்களில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.