ரஜினியை எம்.ஜி.ஆர். அடித்தது உண்மையா? நடந்தது என்ன?
By Aruvi | Galatta | 01:13 PM
ரஜினியை எம்.ஜி.ஆர். அடித்தது உண்மையா? என்ற கேள்விக்கு எம்.ஜி.ஆரின் மெய்க்காப்பாளர் பதில் அளித்துள்ளார்.
நடிகர் ரஜினிகாந்த்தை கடந்த 1979 ஆம் ஆண்டு ராமாவரம் தோட்டத்திற்கு வரவழைத்து, எம்.ஜி.ஆர் அடித்ததாக, அவ்வப்போது செய்தி பரப்பப்பட்டு வந்தது.
இந்நிலையில், இது தொடர்பாக எம்.ஜி.ஆரின் மெய்க்காப்பாளர் கே.பி.ராமகிருஷ்ணன் தற்போது முதன் முதலாக வாய் திறந்துள்ளார்.
முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆரின் திரையுலகம் தொடங்கி, அவரின் அரசியல் பயணம் வரை, கடந்த 40 ஆண்டுகளுக்காக அவரோடு பயணம் செய்தவர் கே.பி.ராமகிருஷ்ணன்.
எம்.ஜி.ஆர். அரசியலுக்கு வந்த பிறகு, அவருக்குத் துணையாக, அவரின் பாதுகாப்புப் பணியை பார்த்துக்கொண்டவர் தான் இந்த கே.பி.ராமகிருஷ்ணன்.
எம்.ஜி.ஆர் - ரஜினி விவகாரம் குறித்து அவர் தற்போது வெளியிட்டுள்ள வீடியோவில், “கடந்த 1979 ஆம் ஆண்டு ரஜினியை, எம்.ஜி.ஆர் அவர்கள் ராமாவரம் தோட்டத்திற்கு வரவழைத்து அடித்ததாகக் கூறப்படும் தகவல் முற்றிலும் தவறானது.
மாறாக, அவர்கள் இருவரும் சந்தித்து சினிமா குறித்து பேசிக்கொண்டிருந்தனர். ரஜினியை விரைவில் திருமணம் செய்துகொள்ளும்படியும், சினிமாவில் எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்றும், உங்களுக்கு சினிமாவில் மிகப் பெரிய எதிர்காலம் இருக்கிறது என்றும் எம்.ஜி.ஆர் அவர்கள் அறிவுரை கூறி, புகழாரம் சூட்டனார்” என்றும் கே.பி.ராமகிருஷ்ணன் தெரிவித்தார்.
இதன் மூலம், ரஜினியை எம்.ஜி.ஆர். அடித்ததாகப் பரப்பப்பட்டு வந்த தகவலுக்கு தற்போது முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.