“வங்க‌க்கடலில் மையம் கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று மாலை சென்னை அருகே கரையை கடக்கும்” என்று, சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.

வடகிழக்கு பருவமழை இந்த ஆண்டு இயல்பை விட சற்று அதிகமாக கொட்டித் தீர்த்து வருகிறது. இதனால், தமிழகத்தின் தலைநகர் சென்னையில் கடந்த 2015 ஆம் ஆண்டு பெய்த மழையை போல் கொட்டி தீர்த்து வருகிறது. 

அத்துடன், தமிழ்நாட்டில் பருவ மழை தொடங்கியது முதல் தமிழகத்தில் எப்போதும் பெய்யும் இயல்பான மழை அளவை விட, மிக அதிக அளவிலான கனமழை பதிவாகி வருவதாக வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

மேலும், வங்க கடலில் சமீபத்தில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாகவே, கடந்த சில நாட்களாகவே தமிழகம் எங்கும் பரவலாக கன மழை பெய்து வருகிறது. 

அதிலும் குறிப்பாக, தமிழகத்தின் குறிப்பிட்ட சில மாவட்டங்களில் மட்டும் அதிக கனமழை வெளுத்து வாங்குகிறது. அதன் தொடர்ச்சியாகவே,  தற்போது வங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி, தாழ்வு மண்டலமாக தற்போது வலுப்பெற்று உள்ளது.

இந்த நிலையில் தான், “வங்க‌க்கடலில் மையம் கொண்டு உள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம், இன்று மாலை சென்னை அருகே கரையை கடக்கும்” என்று, சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. 

சென்னையில் இருந்து கிழக்கு தென் கிழக்கு திசையில் சுமார் 170 கிலோ மீட்டர் தொலைவிலும், புதுச்சேரியில் இருந்து கிழக்கு திசையில் 170 கிலோ மீட்டர் தொலைவிலும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் மையம் கொண்டு இருப்பதாகவும், வானிலை ஆய்வு மையம் சுட்டிக்காட்டி உள்ளது.

குறிப்பாக, “சென்னையில் இருந்து 170 கிலோ மீட்டர் தூரத்தில் மையம் கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலமானது, மேற்கு மற்றும்  வட மேற்கு திசையில் நகர்ந்து இன்று மாலை சென்னை அருகே கரையை கடக்கும்” என்று, சென்னை வானிலை ஆய்வு மையம் கணித்து உள்ளது. 

இதன்காரணமாக, “காற்றழுத்த தாழ்வு மண்டலம் சென்னை அருகே கரையை கடக்கும் போது, சென்னையில் இன்று 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசும் என்பதால், பொது மக்கள் யாரும் வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம்” என்றும், சென்னை வானிலை ஆய்வு மையம் புதிய எச்சரிக்கையும் ஒன்றையும் விடுத்து உள்ளது.

அதே போல், வங்க‌க்கடலில் மையம் கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக, சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நேற்று இரவு முதல் தொடர்ந்து இடைவிடாமல் விடிய விடிய காற்றுடன் கூடிய கன மழை பெய்து வருகிறது. 

இப்படியாக, இரவு முழுவதும் பெய்த தொடர் கன மழையால், சென்னை மாநகர் முழுவதும் உள்ள பல்வேறு சாலைகள் மற்றும் சுரங்க பாதைகள் வெள்ளத்தில் முழ்கி பொது மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலுமாக முடங்கிப் போய் உள்ளது.