கொரோனா ஊரடங்கு காரணமாக, போலீசாருக்கான வழிகாட்டு முறைகள் தற்போது வெளியிடப்பட்டு உள்ளன.

தமிழகத்தில் ஒமைக்ரான் வகை கொரோனா மிக தீவிரமாக பரவி வருகிறது.

இதனால், தமிழகத்தில் பரவி வரும் கொரோனா வைரசை தடுக்கும் விதமாக, நேற்று முதல் இரவு நேர ஊரடங்கை தமிழக அரசு அமல்படுத்தி உள்ளது. 

அதன்படி, இரவு 10 மணி முதல் அதிகாலை 5 மணி வரை இந்த ஊரடங்கு அமலில் இருந்து வருகிறது. இந்த நிலையில் தான், நேற்று முதல் நாளில் சென்னையில் மட்டும் பணி முடிந்து இரவு 10 மணிக்கு மேல் வீடு திரும்பிய சுமார் 5 ஆயிரத்திறகும் மேற்பட்டோரிடம் அபராதம் விதிக்கப்பட்டதாகவும் போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இந்த நிலையில் தான், இந்த இரவு நேர ஊரடங்கு நேரத்தில் போலீசார் கடைபிடிக்கவேண்டிய வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக டிஜிபி சைலேந்திரபாபு தற்போது வெளியிட்டு உள்ளார்.

அதன்படி,

-  மத்திய மற்றும் மாநில அரசுத் துறை அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள், நீதிமன்றம் மற்றும் நீதிந்துறை தொடர்பான பணிகளில் ஈடுபடுவோர், உள்ளாட்சி அமைப்புகளில் பணிபுரிவோர், வங்கி பொதுப் போக்குவரத்து, உள்ளிட்டவர்கள் அலுவலுக்காக பயணம் மேற்கொள்ள அடையாள அட்டையை பார்வையிட்டு அனுமதிக்க வேண்டும்.

- பால் விநியோகம் மின்சாரம், தகவல் தொடர்பு, தினசரி பத்திரிக்கை விநியோகம், மருந்துகள் மற்றும் மருத்துவம் சார்ந்த அனைத்து சேவைகள், ATM மையங்கள், சரக்கு மற்றும் எரிபொருள் வாகனங்களில் பணிபுரிவோர் என அத்தியாவசியப் பணிகளான அடையாள அட்டையை பார்வையிட்டு அனுமதிக்க வேண்டும்.

- சரக்கு வாகனத்தில் கொண்டு செல்லப்படும் விவசாய விலைபொருட்கள், காய்கறி, பழங்கள், கறிகோழிகள், முட்டை போன்ற வாகனங்களை எக்காரணம் கொண்டும் தடை செய்யக்கூடாது. 

- மாநிலம் விட்டு மாநிலம் செல்லும் சரக்கு வாகனங்களுக்கும் இது பொருந்தும் என்றும், தெரிவிக்கப்பட்டுள்ளது.

- தகவல் தொழில் நுட்ப சேவை, உற்பத்தி தொழிற்சாசலகள் உள்ளிட்ட நிறுவனப்பணியாளர்கள் அடையாள அட்டை காண்பித்து பயணம் செய்ய அனுமதிக்க வேண்டும்.

-  வரும் 9 ஆம் தேதி முழு ஊரடங்கு நடைமுறையில் உள்ளபோது, உணவகங்களில் பார்சல் சேவைகள் மட்டும் காலை 7 மணி முதல், இரவு 10 மணி வரை அனுமதிக்கப்படும்.

- உணவு டெலிவரி செய்யும் மின்வணிக நிறுவனப் பணியாளர்களை மேற்குறிப்பிட்ட நேரங்களில் செயல்பட அனுமதிக்க வேண்டும்.

- மத்திய மற்றும் மாநில அரசுப் பணியாளர் தேர்வாணையம், நிறுவனங்களின் நுழைவுத் தேர்வு மற்றும் வேலை வாய்ப்புக்கான நேர்முகத் தேர்வுகளுக்கு செல்வோர் அழைப்பு கடிதத்தை காட்டினால், அனுமதிக்க வேண்டும். 

- வரும் 9 ஆம் தேதி அன்று மத்திய அரசுப் பணியாளர் தேர்வணையம் நடத்தும் குடிமைப்பணிகளுக்கான தேர்வுகள் நடக்கவுள்ளதை கவனத்தில் கொள்ள வேண்டும்.

- விமானம், ரயில் மற்றும் பேருந்து நிலையங்களுக்கு செல்லும் பயணிகளையும், விமானம், ரயில் மற்றும் பேருந்து நிலையங்களில் இருந்து வீடுகளுக்கு செல்லும் பயணிகளையும் அனுமதிக்க வேண்டும். 

- சொந்த மற்றும் வாடகை வாகனங்களை பயன்படுத்திக் கொள்ள அனுமதி உண்டு.

- கிராமப்புறப் பகுதிகளில் விவசாயிகள், விவசாயப் பணிக்காக செல்பவர்களை அனுமதிக்க வேண்டும். 

- அவசர காரணங்களுக்காக வெளியூர் செல்வோர், பணிமுடிந்து சொந்த ஊருக்கு திரும்புவோரை பயணம் செய்ய அனுமதிக்க வேண்டும்.

- வாகனச் சோதனையின்போது வாகன ஓட்டிகளிடம் கனிவாகவும், மனித நேயத்துடனும் நடந்து கொள்ள வேண்டும்.

- வாகனத்தை சோதனை செய்ய வேண்டியிருந்தால், கையுறை அணிந்திருக்க வேண்டும். 

- போலீசார் அனைவரும் அடிக்கடி கைகளை கிருமிநாசினி கொண்டு சுத்தம் செய்ய வேண்டும்.

- இரவு வாகனச் சோதனை வெளிச்சம் உள்ள இடங்களில் நடத்த வேண்டும்.

- காவலர்கள் தடுப்பாண்கள் அமைத்து ஒளிரும் மேற்சட்டை அணிந்து பாதுகாப்பாக இரவு நேரங்களில் பணியாற்ற வேண்டும் என்றும், காவல்துறை தலைமை இயக்குநர் அறிவிப்பு வெளியிட்டு உள்ளார்.

இதனிடையே, சென்னையில் மாஸ்க் அணியாத 5 ஆயிரத்து 223 பேரிடமிருந்து கிட்டதட்ட 10.44 லட்சம் ரூபாய் பணம் வசூல் செய்யப்பட்டு உள்ளதாக, காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.