``தமிழகத்தில் நெல் கொள்முதல் நிலையங்கள் போதுமான அளவில் இல்லை. இதனால் விவசாயிகள் மிகவும் பாதிக்கப்படுகிறார்கள். போதுமான நெல் கொள்முதல் நிலையங்களை அதிகரிக்க அரசுக்கு உத்தரவிட வேண்டும்" எனக்கோரி சூரியபிரகாசம் என்பவர் உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.

இதுதொடர்பாக சென்னையைச் சேர்ந்த சூரியப்பிரகாசம் என்பவர், `விவசாயிகளிடமிருந்து நெல்லை விரைவாக பெறுவதற்கு நெல் கொள்முதல் நிலையங்களை அதிகப்படுத்த வேண்டும். நெல் கொள்முதல் நிலையங்களில் விவசாயிகள் விவசாயிகளுக்கு அடிப்படை வசதிகளை செய்து தரவேண்டும். நெல்லை பாதுகாப்பதற்கான வசதிகளை செய்ய வேண்டும்' என்று மனுவில் கூறியிருந்தார். அவர் மேலும் அந்த மனுவில், `நெல் கொள்முதல் நிலையங்களுக்கு நெல் மூட்டைகளைக் கொண்டு வரும் விவசாயிகளிடம் அதிகாரிகள் ஒரு மூட்டைக்கு ரூ.40 லஞ்சம் வாங்குகிறார்கள்' என்று குறிப்பிட்டு இருந்தார்.

இந்த வழக்கு நேற்று (நவம்பர் 3), விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழக அரசு சார்பில் ஒரு பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், 8 குழுக்கள் அமைத்து தமிழக முழுவதும் நெல் கொள்முதல் நிலையங்களில் 1825 ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு முறைகேட்டில் ஈடுபட்ட 105 அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டது.

இதில் தீர்ப்பு வழங்கிய சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை நீதிபதிகள், `ஊழல் அதிகாரிகளுக்கு தூக்கு தண்டனை வழங்கப்பட்டால்தான் லஞ்சம் பெறுவது போன்ற குற்றங்கள் சரி செய்யப்படும்' என்று  கருத்து தெரிவித்தது, சமூக வலைதளங்களில் பரவலாக பகிரப்பட்டு வருகிறது.

இந்த வழக்கில், சூர்யபிரகாஷின் மனுவுக்கு பதிலளிக்கும் வகையில், ``நெல் கொள்முதல் நிலையங்களில் லஞ்சம் பெறவில்லை. ஆகவே அதிகாரிகள் லஞ்சம் பெறுகிறார்கள்" என்ற கருத்து பொய்யானது என்று தமிழக அரசின் பதில் மனுவில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதற்கு நீதிபதிகள், ``முறைகேட்டில் ஈடுபட்ட 105 அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுத்திருந்தால் லஞ்சம் பெறுவது எப்படி பொய்யானதாக இருக்கும்?" என்று கேள்வி எழுப்பினர். மேலும், ``இது போன்ற தவறான தகவல்களை நீதிமன்றத்தில் அளிக்கக் கூடாது" என்று தமிழக அரசுக்கு அறிவுறுத்தினார்கள். மேலும் அதிகாரிகள் லஞ்சம் பெறுவதை நிறுத்திக் கொள்ள வேண்டும். விவசாயிகள் இரவு பகலாக வேதனைகளை அனுபவித்து விவசாயம் செய்து நெல் கொள்முதல் நிலையங்களுக்குக் கொண்டு வந்தால், வாங்குவதற்கு வக்கில்லாமல் விவசாயிகளிடம் லஞ்சம் என்ற பெயரில் பிச்சை எடுத்து வருகின்றனர்.

லஞ்சம் வாங்குவது சாதாரண விஷயமாகவும் லஞ்சம் வாங்காதவர்களைச் சமூகத்தில் பிழைக்கத் தெரியாதவன் என்றும் கேலி செய்கின்றனர். சமூகத்தில் லஞ்சம் என்பது புற்றுநோயைவிடக் கொடிய நோயாகப் பரவிக்கொண்டிருக்கின்றது" என்றும் நீதிபதிகள் அறிவுறுத்தினார்கள்.

அதைத்தொடர்ந்துதான், நீதிபதிகள், ``ஊழலில் ஈடுபடும் அதிகாரிகள் லஞ்சம் வாங்கும் அதிகாரிகளுக்கு தூக்கு தண்டனை வழங்கப்பட வேண்டும். அப்படி தூக்கு தண்டனை வழங்கப்பட்டால்தான் லஞ்சம் பெறுவது போன்ற குற்றங்கள் சரிசெய்யப்படும். மேலும், அனைத்து அதிகாரிகளுக்கும் இந்த கருத்து பொருந்தாது. நீதிமன்றம் அனைத்து அதிகாரிகளை கருத்தில் கொண்டு இந்த கருத்தை பதிவு செய்யவில்லை. லஞ்சம் பெற்று ஊழலில் ஈடுபடும் அதிகாரிகளை கண்டித்து இந்த கருத்தை பதிவு செய்கிறோம். நமது நாட்டில் விவசாயம் பெருமளவு பாதிக்கப்பட்டு இருக்கிறது. விவசாயம் அனாதை ஆக்கப்பட்டுவிட்டது" என்று சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையின் நிர்வாக நீதிபதி கிருபாகரன் நீதிபதி புகழேந்தி அமர்வு தெரிவித்திருக்கிறது.