மாநகராட்சி வார்டு உறுப்பினர்கள்  தேர்தலில் தி.மு.க. 21 மாநகராட்சிகளிலும் அதிக வார்டுகளை வென்று முன்னிலை உள்ளது. 

dmk

தமிழகத்தில் 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 489 பேரூராட்சிகளுக்கு நேற்றுமுன்தினம் தேர்தல் நடந்தது. மொத்தம் உள்ள 12 ஆயிரத்து 838 தொகுதிகளுக்கு 57 ஆயிரத்து 778 பேர் தேர்தலில் போட்டியிட்டனர்.

தேர்தலில் ஒட்டுமொத்தமாக 60.70 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளது. மாநகராட்சிகளில் 52.22 சதவீதம், நகராட்சிகளில் 68.22 சதவீதம், பேரூராட்சிகளில் 74.68 சதவீதம் வாக்குகள் பதிவானது. ஓட்டுப்பதிவு முடிந்ததும் நேற்றுமுன்தினம் மாலை மின்னணு எந்திரங்கள் அனைத்தும் தமிழகம் முழுவதும் அமைக்கப்பட்டுள்ள 268 வாக்கு எண்ணிக்கை மையங்களுக்கு கொண்டு செல்லப்பட்டன. அந்த மையங்களில் உள் பகுதியிலும், வெளி பகுதியிலும் சி.சி.டி.வி. கேமராக்கள் பொருத்தப்பட்டு 24 மணி நேரமும் கண்காணிக்கப்பட்டது.

இந்நிலையில் மதியம்  நிலவரப்படி தி.மு.க. 21 மாநகராட்சிகளிலும் அதிக வார்டுகளை வென்று முன்னிலை பெற்று இருந்தது. 138 நகராட்சிகளில் 130  நகராட்சிகளை கைப்பற்றும் வகையில் தி.மு.க. வெற்றி வாய்ப்புடன் உள்ளது. அ.தி.மு.க. 6 நகராட்சிகளில் மட்டுமே முன்னிலை பெற்று இருந்தது. 489 பேரூராட்சிகளில் 405 பேரூராட்சிகளின் முன்னிலை நிலவரம் வெளியானது. அதில் தி.மு.க. கூட்டணி 389 பேரூராட்சிகளை கைப்பற்றும் வகையில் முன்னிலை பெற்று சாதனை படைத்துள்ளது.

அ.தி.மு.க.வுக்கு 20 பேரூராட்சிகளில் மட்டுமே வெற்றி பெறும் வாய்ப்பு கிடைத்துள்ளது. பா.ஜனதா-3, பா.ம.க-3, நாம் தமிழர் ஒரு இடத்தில் வெற்றி வாய்ப்புடன் உள்ளது. மொத்தத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் தி.மு.க. 90 சதவீத வெற்றிகளை ருசித்துள்ளது. குறிப்பாக மாநகராட்சியில் மட்டுமின்றி நகராட்சி, பேரூராட்சிகளிலும் அதிக வார்டுகளை தி.மு.க. கூட்டணி கைப்பற்றி எதிர்க்கட்சிகளை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளன.

கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம், விஜயகாந்தின் தே.மு.தி.க. வெற்றி கணக்கை எதிர்பார்த்த அளவுக்கு எட்டவில்லை. பா.ம.க.வுக்கு நகராட்சி, பேரூராட்சிகளில் மட்டும் செல்வாக்கு உள்ள பகுதிகளில் வெற்றி கிடைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.