சென்னையில் ஒரே தெருவில் 10 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதை அடுத்து நீண்ட நாட்களுக்குப் பிறகு மீண்டும் கொரோனா கட்டுப்பாட்டு பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தென் ஆப்பிரிக்காவில் கடந்த மாதம் 24 ஆம் தேதி முதன்முதலாக கண்டறியப்பட்ட ஒமிக்ரான் வைரஸ் ஒரே மாதத்தில் 100-க்கும் மேற்பட்ட நாடுகளில் மின்னல் வேகத்தில் பரவி உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. 

இந்தியாவிலும் கடந்த 2 ஆம் தேதி கர்நாடகா மாநிலம் பெங்களூருவில் 2 பேருக்கு ஒமிக்ரைன் வைரஸ் முதன்முதலாக கண்டறியப்பட்டது. இதையடுத்து இந்தியாவிலும் அதிவேகத்தில் 27 நாட்களில் இதுவரை 20-க்கும் மேற்பட்ட மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரேதங்களில் ஒமிக்ரான் வைரஸ் பரவியுள்ளது. 

Chennai Ashok Nagar containment zoneஇன்று காலை நிலவரப்படி இந்தியாவில் இந்த ஒமிக்ரான் தொற்றுக்கு ஆளானோர் மொத்த எண்ணிக்கை தற்போது 781 ஆக உயர்ந்துள்ளது. நாட்டிலேயே அதிக எண்ணிக்கையாக டெல்லியில் 238 பேருக்கும், மகாராஷ்டிரா மாநிலத்தில் 167 பேருக்கும் ஒமிக்ரான் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. 

தமிழகத்தில் ஏற்கனவே 34 பேருக்கு ஒமிக்ரான் வைரஸ் பாதித்துள்ள நிலையில் நேற்று மேலும் 11 பேருக்கு இந்த தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் ஒமிக்ரான் தொற்றுக்கு ஆளானோர் மொத்த எண்ணிக்கை 45 ஆக உயர்ந்துள்ளது. 

இதற்கிடையில் கொரோனா தொற்று பரவல் சென்னையில் அதிகரிக்க தொடங்கி உள்ளது இந்நிலையில் சென்னையில் ஒரே தெருவில் 10 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டதையடுத்து, அந்த தெரு கட்டுப்பாட்டு பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

அதன்படி சென்னையில் எல்.ஜி.ஜி.எஸ். காலனி அசோக் நகர் 19-வது தெருவில் கடந்த சில தினங்களுக்கு முன்பு ஒருவருக்கு கொரோனா தொற்று கண்டுபிடிக்கப்பட்டது. அடுத்தடுத்து மேலும் சிலருக்கு தொற்று உறுதியானது. 

இதை அடுத்து அந்த தெருவில் 83 பேருக்கு மாதிரிகள் எடுத்து பரிசோதிக்கப்பட்டது. அதில் அந்த தெருவில் மட்டும் 10 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியானது. இதனால் அந்த தெரு தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

நுழைவாயிலில் தடுப்பு வேலிகள் அமைத்து உள்ளே யாரையும் அனுமதிக்கவில்லை. அந்தப் பகுதி முழுவதும் சுகாதாரத் துறையின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளது.

சென்னையில் கொரோனா தொற்று வேகமாக பரவி வருவதால் மீண்டும் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளை ஏற்படுத்த வேண்டிய நிலை உருவாகியுள்ளது. 

Chennai Ashok Nagar Containment Zoneசென்னை மாநகராட்சி எல்லைக்கு உட்பட்ட 39,537 தெருக்களில் 507 தெருக்களில் தொற்று பாதிப்பு இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இதனால் ஒரே தேர்வை சேர்ந்த 3 பேருக்கு அதிகமானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்தால் அந்த பகுதி தனிமைப்படுத்தப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டு வருகிறது.

கொரோனா பரவல் காரணமாக மருத்துவ கட்டமைப்பை மேம்படுத்தும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும், பெரிய அளவில் மக்கள் அச்சப்பட வேண்டாம் எனவும் அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

கொரோனாவால் பாதிக்கப்பட்ட எல்.ஜி.ஜி.எஸ். காலனி 19-வது தெரு, நோய் கட்டுபாட்டு பகுதியாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. 

இதனிடையே தனிமைப்படுத்தப்பட்ட பகுதியில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆய்வு மேற்கொண்டு வருகிறார்.