சத்தியாகிரக போராட்டத்தால் அநீதிக்கு எதிராக வெற்றி பெற்ற விவசாயிகளுக்கு வாழ்த்துகள் என வேளாண் சட்டங்கள் ரத்து குறித்து காங்கிரஸ் எம்.பி., ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

rahulபிரதமர் நரேந்திர மோடி இன்று காலை 9 மணிக்கு குருநானக் ஜெயந்தியை முன்னிட்டு பல்வேறு விவகாரங்கள் குறித்து நாட்டு மக்களுக்கு  உரையாற்றினார். அப்போது அவர் மத்திய அரசு கொண்டுவந்த 3 வேளாண் சட்டங்களை வாபஸ் பெற முடிவு செய்துள்ளோம். இது தொடர்பாக வரும் நாடாளுமன்ற கூட்டத்தொடரில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று தெரிவித்தார்.


அதனைத்தொடர்ந்து பேசிய பிரதமர் நரேந்திர மோடி  2014-ம் ஆண்டு முதல் விவசாயிகளுக்கு சேவை செய்வதையே முக்கிய நோக்கமாக கொண்டிருக்கிறோம். விவசாயிகளின் வேதனைகளை அறிந்தவன் என்பதால் தான், அவர்களுக்கான வளர்ச்சித் திட்டங்களை செயல்படுத்தி வருகிறேன். மேலும் விவசாயிகளின் பிரச்சினைகளை தீர்க்க பல்வேறு திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன என்று தெரிவித்தார் .

மேலும் சரியான விதைகள், உரம், பயிர்க் காப்பீடு என சிறு விவசாயிகளுக்கான திட்டங்கள் அமல்படுத்தப்பட்டுள்ளன. மத்திய அரசின் திட்டங்களால் வேளாண் பொருட்களின் உற்பத்தி பல மடங்கு உயர்ந்துள்ளது எனவும் பயிர் சேதத்திற்காக விவசாயிகளுக்கு ஒரு லட்சம் கோடி ரூபாய் நிவாரணம் வழங்கப்பட்டுள்ளது என தெரிவித்தார் .

இந்நிலையில் வேளாண் துறைக்கான நிதி ஒதுக்கீடு 5 மடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளது. கிராமப்புற சந்தைகளையும் வலுப்படுத்தி உள்ளோம். விளை பொருட்களுக்கான நியாயமான விலையை தற்போது விவசாயிகள் பெற்று வருகின்றனர். விவசாயிகளின் நலனுக்காகவே 3 வேளாண் சட்டங்கள் கொண்டுவரப்பட்டன. 3 வேளாண் சட்டங்கள் குறித்து பாராளுமன்றத்தில் விரிவாக விவாதிக்கப்பட்டுள்ளது என  பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார் .

வேளாண் சட்டங்களின் நலனை ஒரு தரப்பு விவசாயிகளுக்கு எங்களால் புரிய வைக்க முடியவில்லை.  எனவே, மத்திய அரசு கொண்டு வந்த 3 வேளாண் சட்டங்களையும் வாபஸ் பெற முடிவு செய்துள்ளோம். இந்த மாதம் தொடங்கும் பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில், 3 வேளாண் சட்டங்களையும் திரும்ப பெறுவதற்கான நடைமுறையை தொடங்குவோம். விவசாயிகள் தங்கள் போராட்டத்தை கைவிட வேண்டும். டெல்லி எல்லைகளில் போராட்டம் நடத்துவதற்காக கூடியுள்ள விவசாயிகள் வீடுகளுக்கு திரும்ப வேண்டும். வேளாண் சட்டங்களுக்கு ஆதரவளித்த விவசாய சங்கங்களுக்கு நன்றி தெரிவிக்கிறேன் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார் .

இந்நிலையில் ராகுல் காந்தி தனது டுவிட்டர் பக்கத்தில், "விவசாயிகள் சத்தியாகிரகம் ஆணவக்காரர்களை தலைகுனியச் செய்துள்ளது. அநீதிக்கு எதிரான இந்தப் போராட்டத்திற்கு கிடைத்த வெற்றிக்காக விவசாயிகளுக்கு வாழ்த்தை  தெரிவித்துக்கொள்கிறேன் " என இந்தியில் பதிவிட்டு வாழ்த்தை தெரிவித்தார்.


இதனைத்தொடர்ந்து உங்கள் கட்சி தலைவர்கள் விவசாயிகளை அவமதித்தனர். விவசாயிகளை பயங்கரவாதிகள், தேசத்துரோகிகள், அடியாட்கள் என கூறினர். விவசாயிகளை  கட்டையால் தாக்கப்பட்டு கைது செய்யப்பட்டனர். மேலும்  தேர்தல் தோல்வியை உணரத் தொடங்கிவிட்டதால் பிரதமர் மோடி வேளாண் சட்டங்களை வாபஸ் பெற்றுள்ளதாக பிரியங்கா காந்தி தெரிவித்துள்ளார்.

மேலும்  மூன்று வேளாண் சட்டங்களை மத்திய அரசு திரும்பப் பெற்றது இலட்சக்கணக்கான விவசாயிகளுக்குக் கிடைத்த மாபெரும் வெற்றியாகும் மத்திய அரசு மண்டியிட்டது என மதிமுக பொது செயலாளர் வைகோ அறிக்கையில் தெரிவித்தார்.