போலீஸ் விசாரணைக்கு பயந்து தீக்குளித்த தனியார் நிறுவன ஊழியர் பரிதாபமாக இறந்தார். இதைத்தொடர்ந்து அ.தி.மு.க.வினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

pongal gift

தமிழக அரசு வழங்கிய பொங்கல் தொகுப்பில் இருந்த புளியில் பல்லி இருப்பதாக தகவல் வெளியானது. அந்த அவதூறு தகவலை பரப்பியதாக திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி நகரம் சரவணப்பொய்கை திருக்குளம் அருகே வசித்து வரும் 65 வயதான நந்தன் என்பவர் மீது அந்த பகுதியை சேர்ந்த ரேஷன் கடை விற்பனையாளர் சரவணன் திருத்தணி போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இதனால் மனமுடைந்த நந்தனின் மூத்த மகனும் தனியார் நிறுவன ஊழியருமான குப்புசாமி தனது தந்தை மீது பொய்யான வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது எனவும் தங்களை விசாரணைக்கு அழைப்பார்களே என்று புலம்பி வந்ததாக தெரிவிக்கப்பட்டது.  இதனால் மனவருத்தத்தில் இருந்த குப்புசாமி நேற்று முன்தினம் தனது உடலில் பெட்ரோல் ஊற்றி தீ வைத்து கொண்டார். அவரை திருத்தணி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

இந்நிலையில் குப்புசாமி மேல் சிகிச்சைக்காக சென்னை கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி நேற்று அதிகாலை உயிரிழந்தார். இதை அறிந்த அவரது உறவினர்கள் மற்றும் அ.தி.மு.க.வினர் 500-க்கும் மேற்பட்டோர் திருத்தணி நகர அ.தி.மு.க. அமைப்பு செயலாளரும் முன்னாள் எம்.பி.யுமான கோ. அரி தலைமையில் திருத்தணி-சித்தூர், திருத்தணி-அரக்கோணம் சாலைகளில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மேலும் அப்பாவி நந்தன் மீது வழக்கு போட காரணமாக இருந்த திருத்தணி போலீஸ் இன்ஸ்பெக்டர், ஆர்.டி.ஓ. குடிமைப்பொருள் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர். மறியலில் ஈடுபட்ட அனைவரையும் கைது செய்து மாலை 4 மணியளவில் விடுவித்தனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பரபரப்பு நிலவியது. அந்த பகுதியில் 100-க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டனர்.