நிவர் புயல் காரணமாக தமிழகத்தில் உள்ள சென்னை, திருவள்ளூர், நாகை, திருவாரூர், செங்கல்பட்டு உள்பட 13 மாவட்டங்களில் நாளை பொது விடுமுறை அறிவித்திருக்கிறார் தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி.

சென்னையில் கனமழை பெய்து வருவதால், 75 சதவீதம் நிரம்பியிருக்கும் செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து  பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ள நிலையில், அங்குள்ள நிலைமைகளை தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி நேரில் ஆய்வு செய்தார்.

இதுகுறித்து பேசிய முதல்வர், ``செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து உபரிநீர் வெளியேற்றப்படுவதை தொடர்ந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மற்றும் களப்பணிகள் குறித்து நேரில்சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டேன்.

மக்களுக்கு எவ்வித பாதிப்புமின்றி பணிகளை துரிதமாகவும் கவனமாகவும் மேற்கொள்ள அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளேன்" என்றார்.

இதன்பின்னர்தான் பொது விடுமுறைக்கான அறிவிப்பை அவர் வெளியிட்டார் இதுகுறித்து அவர் பேசும்போது, ``நிவர் புயல் காரணமாக தமிழகத்தில் சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், விழுப்புரம், தஞ்சை, மயிலாடுதுறை, அரியலூர், பெரம்பலூர், நாகை, திருவாரூர், கடலூர், வேலூர் ஆகிய 13 மாவட்டங்களுக்கு பொதுவிடுமுறை அறிவிக்கப்படுகிறது" என தெரிவித்தார்.

நிவர் புயல் காரணமாக தமிழகம் முழுவதும் இன்று பொதுவிடுமுறை அறிவிக்கப்பட்டிருக்கும் நிலையில், இன்று நள்ளிரவில் புயல் கரையைக் கடக்கவிருப்பதால், நாளை தமிழகத்தில் உள்ள 13 மாவட்டங்களுக்கு பொதுவிடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆளுங்கட்சியை போலவே, எதிர்க்கட்சியினரும் களத்திலிருந்து பணியாற்றி வருகின்றனர். இதுகுறித்து பேசிய திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், ``பேரிடரில் இருந்து மக்களைக் காப்போம்; கழகத் தோழர்கள் களமிறங்கி உதவுக!" என்று கூறி, கட்சியினரை பணிக்கு அழைத்திருக்கிறார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில், 

`` 'நிவர்' புயலின் தாக்கத்தால் தமிழகத்தின் பல மாவட்டங்களிலும் மக்களின் வாழ்விடங்கள் நீரால் சூழ்ந்துள்ளன. சென்னை மாநகரைப் பொறுத்தவரை தாழ்வான மற்றும் கடற்கரைப் பகுதிகளில் உள்ளவர்கள் பாதிப்புக்குள்ளாகும் அபாயம் உள்ளது. கடலோர மாவட்ட மக்களின் நிலையும் இதுதான்.

சென்னையில், திரு.வி.க. நகர், கொளத்தூர், வில்லிவாக்கம் தொகுதிகள் உட்பட, பெருமழையால் பாதிக்கப்பட்டுள்ள பல்வேறு பகுதிகளுக்கும் நேரில் சென்று ஆய்வு செய்தேன். மழைநீர் சூழ்ந்துள்ள பகுதிகளில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவுப் பொருட்கள் உள்ளிட்ட அத்தியாவசிய உதவிகளை வழங்கினேன். 

செம்பரம்பாக்கம் ஏரியின் கொள்ளளவு காரணமாக, அதனைத் திறந்துவிடப் பொதுப்பணித்துறை முடிவெடுத்து திறந்து விட்டிருப்பதால், அடையாறு ஆற்றின் கரையோரம் வசிக்கும் மக்களை 2015-ஆம் ஆண்டு வெள்ளப் பேரிடர் போன்ற சூழல் மிரட்டி வருகிறது. மக்களின் பாதுகாப்பு நடவடிக்கைககளில் அரசு தீவிரக் கவனம் செலுத்த வேண்டும்.

எப்போதும் மக்கள் பணியாற்றும் பேரியக்கமான தி.மு.கழகத்தின் கழக நிர்வாகிகளையும் - மக்களுக்குத் தேவையான உதவிகளையும் - பேரிடர் பாதுகாப்புப் பணிகளில் ஈடுபடும் அதிகாரிகளுக்குத் தேவையான ஒத்துழைப்புகளையும் வழங்கிட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

இப்போது முதலில் நமக்குத் தேவை மக்களைப் பாதுகாப்பான இடங்களில் தங்க வைத்து - அவர்களுக்குத் தேவையான உதவிகளைச் செய்வது என்பதை மனதில் கொண்டு தீவிரப் பணிகளில் ஈடுபட வேண்டும்.

ஏறத்தாழ 9 மாதங்களாக கொரோனா தொற்று அச்சுறுத்தி வரும் நிலையில், இந்தப் புயல் - மழைச் சூழல் அந்த நோய்த் தொற்றின் இரண்டாம் அலைக்குக் காரணமாகிவிடக்கூடாது.  தமிழக அரசும், மக்கள் நல்வாழ்வுத்துறையும் உரிய மருத்துவ முறைகளைக் கையாண்டு, மக்களைக் காத்திட வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறேன்" என்று கூறியுள்ளார்.