நெடுஞ்சாலைத் துறை சார்பில் ரூ.310.92 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள 9 பாலங்களை  தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் இன்று தலைமைச் செயலகத்தில், நெடுஞ்சாலைத் துறை சார்பில் செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவண்ணாமலை, வேலூர், விழுப்புரம், கோயம்புத்தூர், மதுரை, திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களில் 310 கோடியே 92 இலட்சம் ரூபாய் செலவில் கட்டி முடிக்கப்பட்டுள்ள ஆறு இரயில்வே மேம்பாலங்கள், ஒரு இரயில்வே கீழ்ப்பாலம், ஒரு உயர்மட்டப் பாலம் மற்றும் ஒரு பல்வழிச் சாலை மேம்பாலம் ஆகிய ஒன்பது பாலங்களை திறந்து வைத்தார்.

அதனைத்தொடர்ந்து, காஞ்சிபுரம் மாவட்டம், சென்னை - பொன்னேரிக்கரை - காஞ்சிபுரம் சாலையில் இரயில்வே கடவு எண் 29-க்கு மாற்றாக 59 கோடியே 63 இலட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள இரயில்வே மேம்பாலம், மதுரை மாவட்டம், மதுரை - தொண்டி சாலை மற்றும் மதுரை சுற்றுச் சாலை சந்திப்பில் 53 கோடியே 12 இலட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள பல்வழிச்சாலை மேம்பாலம். கோயம்புத்தூர் மாவட்டம், பொள்ளாச்சி - பாலக்காடு சாலையில், இரயில்வே கடவு எண் 122-க்கு மாற்றாக பொள்ளாச்சி கிணத்துக்கடவு இரயில் நிலையங்களுக்கு இடையே 48 கோடியே 48 இலட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள இரயில்வே மேம்பாலம்; திருவண்ணாமலை மாவட்டம், பாண்டி - கிருஷ்ணகிரி சாலை இரயில்வே கடவு எண்.55-க்கு மாற்றாக தண்டரை - திருவண்ணாமலை இரயில் நிலையங்களுக்கு இடையே 38 கோடியே 74 இலட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள இரயில்வே மேம்பாலம்.

மேலும் செங்கல்பட்டு மாவட்டம், வண்டலூர் மற்றும் கூடுவாஞ்சேரி இரயில் நிலையங்களுக்கு இடையே கடவு எண் 36-க்கு மாற்றாக ஊரப்பாக்கம் சாலையில், 34 கோடியே 50 இலட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள இரயில்வே மேம்பாலம்; விழுப்புரம் மாவட்டம், கடலூர் - சித்தூர் சாலையில், இரயில்வே கடவு எண்.144-க்கு மாற்றாக 22 கோடியே 63 இலட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள இரயில்வே மேம்பாலம்; வேலூர் மாவட்டம், காட்பாடி - குடியாத்தம் சாலையிலிருந்து விரிஞ்சிபுரம் செல்லும் சாலையில், லத்தேரி மற்றும் விரிஞ்சிபுரம் இரயில்வே நிலையங்களுக்கு இடையே உள்ள கடவு எண் 59-க்கு மாற்றாக 22 கோடியே 26 இலட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள இரயில்வே மேம்பாலம்;

அதனைத்தொடர்ந்து கட்டப்பட்ட திருவண்ணாமலை மாவட்டம், தண்டரை - எரையூர் சாலையில் செய்யாறு ஆற்றின் குறுக்கே 17 கோடியே 4 இலட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள உயர்மட்டப் பாலம்; திருநெல்வேலி மாவட்டம், நாங்குநேரி - ஏர்வாடி - வள்ளியூர் - விஜயாபதி சாலையில் இரயில்வே கடவு எண்.82பி-க்கு மாற்றாக 14 கோடியே 52 இலட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள இரயில்வே கீழ்ப்பாலம்; என மொத்தம் 310 கோடியே 92 இலட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள ஒன்பது பாலங்களை முதலமைச்சர்  திறந்து வைத்தார்.

இந்நிலையில் இரயில்வே கடவுகளில் கட்டப்பட்டுள்ள பாலங்களால் இரயில்வே கடவுகளில் காத்திருப்பு நேரம் தவிர்க்கப்பட்டு, போக்குவரத்து நெரிசல் மற்றும் பயண நேரம் குறைவதுடன், பொதுமக்கள் மற்றும் பள்ளி மாணவர்கள் உரிய நேரத்தில் பாதுகாப்புடன் பயணம் செய்ய இயலும்.