“ஜனவரி 12 ஆம் நாள் ஆண்டுதோறும் இனி புலம் பெயர்ந்த உலகத் தமிழர் நாளாக கொண்டாடப்படும்” என்று, முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அளிவித்து உள்ளார்.

இது தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், “உலகளாவிய இனம் ஒன்று உண்டென்றால், அது தமிழினம் தான்” என்று, பெருமையோடு குறிப்பிட்டு உள்ளார். 

“தொன்மை மிக்க இந்த தமிழினம், பரவிய நாடுகளின் பட்டியல் பெரிது என்றும், தொல் பழமை நாகரிகப் பாரம்பரியம் உள்ள சில இனங்களில் தமிழினமும் ஒன்று” என்றும், தமிழின் அருமை பெருமைகளை நினைவுகூர்ந்து உள்ளார். 

“அப்படி கடல் கடந்து, நாடுகள் கடந்து வாழும் வெளிநாடுவாழ் தமிழினத்துக்கு நம்பிக்கை தரும் வகையில் ஒரு முக்கிய அறிவிப்பு வெளியிடப்படுகிறது என்றும், உலகின் பெரும்பான்மை நாடுகளில் வாழும் இனமாக நம்முடைய தமிழினம் தான் இருக்கிறது” என்றும், புகழாராம் சூட்டி உள்ளார்.

அத்துடன், “30 க்கும் மேற்பட்ட நாடுகளில் அதிக எண்ணிக்கையிலும், 60 க்கும் மேற்பட்ட நாடுகளில் குறைந்த எண்ணிக்கையிலும் தமிழர்கள் வாழ்கிறார்கள்” என்றும், முதலமைச்சர் சுட்டிக்காட்டி உள்ளார். 

“வணிகம் செய்வதற்காகச் சென்றார்கள், வாழ்வதற்காகச் சென்றார்கள், வேலைகள் தேடிச் சென்றார்கள், கடற்கோள்களில் இருந்து தப்புவதற்காகச் சென்றார்கள்,  தப்பிச் செல்வதற்காகச் சென்றார்கள், புதிய இடங்களை அறிவதற்காகச் சென்றார்கள், இப்படிப் பலருக்கும் பல நோக்கங்கள் இருந்திருக்கும் என்றும், இத்தகைய இடப்பெயர்வுகள் காலம் காலமாக நடந்து வருகின்றன” என்றும், அவர் குறிப்பிட்டு கூறியுள்ளார். 

மேலும், “எங்கே தமிழர்கள் வாழ்ந்தாலும், அவர்களுக்கு தமிழ்நாடு தான் தாய் வீடு” என்றும், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

'அவர்கள் மீது அன்பு செலுத்துவது மட்டுமல்ல, அரவணைப்பதும், பாதுகாப்பதும் தாய்த்தமிழ்நாட்டின் கடமையாகும் என்றும், இப்படி பல்வேறு நாடுகளுக்குச் சென்று வாழும் தமிழ் மக்களின் பிரச்சனைகளைத் தீர்க்கவும், உதவிகளைச் செய்யவும் தமிழ்நாடு அரசு முன்வந்துள்ளது” என்றும், தெரிவித்து உள்ளார். 

“புலம்பெயர்ந்து வாழும் தமிழர்களின் உளப்பூர்வமான மற்றும் பல்வேறு தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக வெளிநாடுவாழ் தமிழர் நலச்சட்டம் 2011 ஆம் ஆண்டு மார்ச் 1 ஆம் நாள் கழக அரசால் இயற்றப்பட்டுள்ளது என்றும், புலம்பெயர் தமிழர் நலவாரியம் ஒன்றை உருவாக்கி அவர்களுக்கு நலத் திட்டங்களை செயல்படுத்துவோம்” என்றும், அவர் குறிப்பிட்டுள்ளார்.

குறிப்பாக, “ஆட்சி மாற்றம் ஏற்பட்டதன் காரணமாக நம்மால் அமைக்க முடியவில்லை என்றும், அடுத்து வந்த ஆட்சியாளர்களும் இதனை அமைக்கவில்லை என்றும், இந்த நிலையில் தான் புலம்பெயர் தமிழர் நல வாரியம்’ அமைக்கப்படுகிறது என்றும், அரசு மற்றும் புலம்பெயர்ந்த தமிழர் பிரதிநிதிகள் பதிமூன்று பேரைக் கொண்டு இந்த வாரியம் அமைக்கப்படும்” என்றும், முதல்வர் அறிவித்துள்ளார். 

“ 5 கோடி ரூபாய், புலம்பெயர் தமிழர் நலநிதி என மாநில அரசின் முன்பணத்தைக் கொண்டு உருவாக்கப்படும் என்றும், மூலதனச் செலவினமாக 1 கோடியே 40 இலட்சம் ரூபாய் மற்றும் தொடர் செலவினமாக, நலத்திட்டங்கள் மற்றும் நிர்வாக செலவினங்களுக்காக 3 கோடி ரூபாய் ஆண்டுதோறும் ஒதுக்கப்படும்” என்றும், முதல்வர் கூறியுள்ளார்.

மிக முக்கியமாக, “பல்வேறு நாடுகளில் உள்ள தமிழர்களை ஒருங்கிணைக்கும் விதமாகவும், அவர்களின் பங்களிப்பை அங்கீகரிக்கும் விதமாக வெளிநாடுகளில் உள்ள தமிழ் சங்கங்களுடன் இணைந்து ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 12 ஆம் நாள் புலம்பெயர்ந்த உலகத்தமிழர் நாளாக கொண்டாடப்படும்” என்றும், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.