தருமபுர ஆதீன விவகாரத்தில் ஆதீனங்களுடன் பேசி விரைவில் நல்ல முடிவை முதலமைச்சர் அறிவிப்பார் என இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு தெரிவித்துள்ளார். 

தருமபுரம் ஆதீனத்தில் பட்டினப் பிரவேச நிகழ்வானது இந்த மாத இறுதியில் நடைபெறவுள்ளது. இந்த நிலையில், திராவிடர் கழகத்தினரின் எதிர்ப்பையடுத்து, தருமபுரம் ஆதீனத்தில் நடைபெறவுள்ள பட்டினப் பிரவேச நிகழ்வில் ஆதீன கர்த்தரைப் பல்லக்கில் அமர்த்தி பக்தர்கள் சுமந்து செல்ல தடைவிதித்து மயிலாடுதுறை வருவாய்க் கோட்டாட்சியர் பாலாஜி உத்தரவிட்டிருந்தார். தமிழக அரசின் இந்த நடவடிக்கைக்கு பரவலாக எதிர்ப்புகள் கிளம்பியுள்ளன. 

இந்த நிலையில் இந்த விவகாரம் குறித்து தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அவரது டுவிட்டர் பதிவில் கருத்து தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது: எட்டு வயது சம்பந்தரை எண்பது வயது நாவுக்கரசர் சுமந்தார். 'பத்தராய்ப் பணிவார்கள் எல்லார்க்கும் அடியேன் பரமனையே பாடுவார் அடியார்க்கும் அடியேன் சித்தத்தைச் சிவன்பாலே வைத்தார்க்கும் அடியேன்!' தமிழ் பண்பாட்டை சுமப்போம். மே 22-ல் தருமபுரத்தில் சந்திப்போம்” என்று தெரிவித்துள்ளார்.

அதனைத்தொடர்ந்து தருமபுரம் ஆதீனம் பட்டினப் பிரவேச விவகாரம் குறித்து இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு விளக்கம் அளித்துள்ளார். இது குறித்து அவர் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது: முதலமைச்சரின் உத்தரவு படி இந்து சமய அறநிலையத் துறை பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. கடந்த ஆண்டு 112 அறிவிப்புகளை வெளியிட்டிருந்தோம். ஆனால், அதற்கும் கூடுதலாக பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது. 

மேலும் வரும் 22-ம் தேதி தான் தருமபுரம் ஆதீனம் பட்டினிப் பிரவேசம் நடைபெறுகிறது. தருமபுரம் பட்டினப்பிரவேசம் நிகழ்ச்சி குறித்து அனைத்து மனமும் ஒருங்கிணைந்து செயல்படும் வகையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நல்ல முடிவை எடுப்பார். தருமபுரம் ஆதீனத்துடன் அறநிலையத்துறை சார்பில் பேச்சுவார்த்தை நடைபெறுகிறது. பட்டினப் பிரவேசம் நிகழ்ச்சியை நடத்துவது தொடர்பாக விரைவில் சுமூக முடிவு எடுக்கப்படும்.

தமிழகத்தில் அமைதியான சூழல், அனைவரும் விரும்பும் வகையில் செயல்படும் அரசு திமுக. முதலமைச்சவர் மு.க.ஸ்டாலின் ஆன்மிகம், இறை வழிபாட்டிற்கு எதிராக கருத்து கூறவில்லை என்று தெரிவித்தார்.