கொரோனா ஊரடங்கு காரணமாக மார்ச் 21ஆம் தேதி 3 மணி முதல் மெரினா உள்ளிட்ட கடற்கரைகளில் பொது மக்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. தற்போது ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வணிக வளாகங்கள் உள்ளிட்டவை திறக்க அனுமதிக்கப்பட்ட நிலையில் கடற்கரைகளுக்குச் செல்ல போலீசார் அனுமதிக்கவில்லை. எனினும், மெரினா கடற்கரைக்கு மக்கள் சென்ற வண்ணம் இருந்த நிலையில், அனுமதியை மீறி கடற்கரையின் மணல் பரப்புக்கு சென்றால் அபராதம் விதிக்கப்படும் என்று போலீசார் எச்சரித்து வந்தனர். இதனால் மக்கள் பட்டினம்பாக்கம் கடற்கரையோரப் பகுதிகளில் குவியத் தொடங்கினர்.

இதனிடையே, மீனவர்களின் பாதுகாப்பு மற்றும் வாழ்வாதாரத்தை உறுதிப் படுத்த மத்திய மாநில அரசுகளுக்கு உத்தரவிட வேண்டும் என மீனவர் நலன் அமைப்பைச் சேர்ந்த பீட்டர் ராயன் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கில் மெரினா கடற்கரையைச் சுத்தமாகப் பராமரிப்பது மற்றும் லூப் சாலையில் உள்ள மீன் அங்காடியை முறைப்படுத்துவது குறித்தும் விசாரணை நடந்து வருகிறது. இவ்வழக்கு மீண்டும் கடந்த செப்டம்பர் 29 நீதிபதிகள் வினித் கோத்தாரி மற்றும் கிருஷ்ணன் ராமசாமி ஆகியோர் அமர்வில் விசாரணைக்கு வந்தது.

அப்போது, `ஊரடங்கில் பல்வேறு துறைகளுக்கும் தளர்வுகள் வழங்கப்பட்டுள்ளதைச் சுட்டிக்காட்டிய நீதிபதிகள் மெரினா கடற்கரையில் பொதுமக்கள் அனுமதிக்கப்பட்டுள்ளனரா?' என்று கேள்வி எழுப்பினர்.

இதற்கு, `அனுமதி அளிக்கவில்லை' என்று தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்ட நிலையில், கடற்கரையில் பொது மக்களை அனுமதிப்பது என்பது அரசின் கொள்கை முடிவு என்பதால் இந்த விவகாரத்தில் நீதிமன்றம் அழுத்தம் தர முடியாது என்று நீதிபதிகள் குறிப்பிட்டனர். அதே சமயம் பொது மக்களை அனுமதிப்பது தொடர்பாகத் தமிழக அரசும் சென்னை மாநகராட்சியும் என்ன முடிவு எடுத்துள்ளது என்று கேள்வி எழுப்பிய நீதிபதிகள் இது தொடர்பாக அக்டோபர் 5ஆம் தேதி பதிலளிக்க உத்தரவிட்டனர்.

மேலும் மெரினாவிலிருந்து அகற்றப்பட்ட கடைகளுக்குப் பதிலாக புதிய கடைகளை வைக்க உரிமம் வழங்குவது குறித்த பணிகள் எந்த அளவில் உள்ளன என்பதைப் பற்றியும் அறிக்கையாகத் தாக்கல் செய்ய உத்தரவிட்ட நீதிபதிகள் வழக்கை ஒத்திவைத்தனர். இதற்கிடையில் சென்னை மெரினா கடற்கரையில் மீன் விற்பனையை முறைப்படுத்துவது, மெரினா கடற்கரையை சுத்தப்படுத்துவது தொடர்பான வழக்கு, நீதிபதிகள் வினீத் கோத்தாரி மற்றும் ரமேஷ் அடங்கிய அமர்வில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது, தமிழக அரசுத் தரப்பில் ஆஜரான கூடுதல் தலைமை வழக்கறிஞர், மெரினா கடற்கரையில் தள்ளுவண்டி கடைகள் அமைப்பது தொடர்பான டெண்டர் இருமுறை திறக்கப்படவில்லை எனவும், நவம்பர் 9ம் தேதி இந்த டெண்டர்கள் திறக்கப்படும் எனவும் மூன்று கம்பெனிகள் டெண்டர் கோரியுள்ளதாகவும் தெரிவித்தார். 

மெரினாவை பொதுமக்களுக்கு திறப்பதை பொறுத்தவரை, தமிழகத்தில் ஊரடங்கை அக்டோபர் 31 வரை நீட்டித்து உத்தரவிடப்பட்டுள்ளதாகவும், பூங்காக்கள், கடற்கரைகள், திரையரங்குகள் திறக்க தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

இதையடுத்து, தள்ளுவண்டி கடைகளுக்கான டெண்டர் கோரியது, மீன் சந்தை திறப்பது, மெரினாவை திறப்பது உள்ளிட்டவை தொடர்பாக நவம்பர் 11ம் தேதிக்குள் அறிக்கை அளிக்க அரசுத்தரப்புக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை தள்ளிவைத்தனர்.