நீட் தேர்வு அச்சத்தால் தமிழகத்தில், கடந்த சனிக்கிழமையன்று (நீட் தேர்வுக்கு முந்தைய நாள்) ஒரே நாளில் மூன்று மாணவர்கள் தற்கொலை செய்தனர். கடும் எதிர்ப்பிற்கு இடையே நடைபெற்ற நீட் தேர்வை எதிர்கொள்ளும் பயத்தில், தமிழகத்தில் வரிசையாக அடுத்தது மாணவர்கள் தற்கொலை செய்து வருகிறார்கள்.

மாணவர்களின் தொடர் தற்கொலை தமிழகத்தையே உலுக்கியது. ``மத்திய அரசு கொண்டு வந்த நீட்தேர்வு மீதான அச்சத்தின் காரணமாக தமிழக மாணவர்கள் தற்கொலை செய்து கொள்வது தொடர்கதையாகி வருகிறது" என்று பலரும் குற்றம் கூறி வருகின்றனர். அரியலூர் அனிதாவை தொடர்ந்து தற்போது நாமக்கல் மோதிலால் வரை இதுவரை பத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.

இதனிடையே மருத்துவப் படிப்பில் இடம் பெறுவது தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் கிருத்திகா என்ற மாணவி வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கில், நீட் தேர்வால் ஏற்படும் மரணங்களை தடுக்க தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். தேர்வை எழுதுவதற்கு முன்பாக மாணவர்களுக்கு உரிய பயிற்சி வழங்கி தேர்வு பயத்தை போக்க வேண்டும். சிபிஎஸ்இ தேர்வு வாரியம் உள்ளிட்ட அமைப்புகள் நடத்தும் தேர்வுகளை எதிர்கொள்ளும் வகையில் மாணவர்களுக்கு பயிற்சி கொடுக்க வேண்டும் என்று நீதிபதி கிருபாகரன் ஏற்கனவே உத்தரவு பிறப்பித்திருந்தார்.

இந்த சூழலில் இந்த ஆண்டு நீட் தேர்வு எழுத இருந்த மாணவர்களில் நான்கு பேர் தற்கொலை செய்துகொண்டது தமிழகத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இது தொடர்பாக வழக்கறிஞர் சூரிய பிரகாசம் நீதிபதி கிருபாகரன், நீதிபதி வேல்முருகன் அமர்வு முன்பு முறையிட்டார்.

அப்போது, இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு கிருத்திகா தொடர்ந்த வழக்கில் பிறப்பித்த உத்தரவை தமிழக அரசு செயல்படுத்தவில்லை. அதனாலேயே மாணவர்களின் தற்கொலைகள் தொடர்ந்து வருகிறது. மாணவர்களின் தற்கொலைகளை தடுக்கும் விவகாரத்தில் தமிழக அரசு தோல்வி அடைந்துவிட்டது. எனவே நீதிமன்ற உத்தரவை செயல்படுத்தாத தமிழக அரசு மீது அவமதிப்பு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.

இதை விசாரித்த நீதிபதிகள் நீட் தேர்வு பயத்தால் தற்கொலை செய்துகொள்ளும் மாணவர்களின் குடும்பங்களுக்கு இழப்பீடு, அரசு வேலை வழங்குவது என்பது தற்கொலைகளை ஊக்குவிப்பது போல் உள்ளதாக அதிருப்தி தெரிவித்தனர்.

இதுபோன்ற செயல்களை நிறுத்த வேண்டும் என்று கூறியதுடன், நீதிமன்ற உத்தரவை செயல்படுத்தாத தமிழக அரசுக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர வழக்கறிஞர் சூரிய பிரகாசத்துக்கு நீதிபதிகள் அனுமதி வழங்கினர்.