“மு.க.ஸ்டாலின் இந்து கடவுள் முன் உறுதிமொழி எடுக்க வேண்டும்” என்று, முதலமைச்சருக்கு எதிராக வழக்கு தொடர்ந்தவர், அடுத்த 5 ஆண்டு காலம் பொது நல வழக்குகள் தொடர தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னையைச் சேர்ந்த வழக்கறிஞர் ஸ்ரீதரன் என்பவர், சென்னை உயர் நீதிமன்றத்தில் ஒரு பொது நல மனு தாக்கல் செய்தார். 

அந்த மனுவில், “தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், ஒரு நாத்திகர் என்பதால், இந்து சமய அறநிலையத் துறையின் ஆலோசனைக் கூட்டங்களுக்கு தலைமை வகிக்க தடை விதிக்க வேண்டும்” என்று, கோரியிருந்தார்.

மேலும், “இந்து மதத்தை பின்பற்றுவதாக, இந்து கடவுள் முன் உறுதிமொழி எடுத்த பிறகே, இப்படியான கூட்டங்களுக்கு மு.க. ஸ்டாலின் தலைமை வகிக்க முதல்வருக்கு உத்தரவிட வேண்டும்” என்றும், தனது மனுவில் கோரியிருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சிவ் பானர்ஜி மற்றும் நீதிபதி ஆதிகேசவலு அடங்கிய அமர்வு, “இந்தியா, ஒரு மதச்சார்பற்ற நாடு என்றும், இந்திய அரசியல் சட்டம், குடிமக்களுக்கு கருத்து சுதந்திரத்தை வழங்கியுள்ளதாகவும்” குறிப்பிட்டனர். 

அத்துடன், “முக்கிய பதவிகளை வகிப்பவர்கள், பதவியேற்கும் போது, கடவுள் பெயரிலோ, அரசியல் சட்டத்தின் பெயரிலோ பதவியேற்க அரசியல் சட்டம் அனுமதி வழங்கி உள்ளது” என்றும், சுட்டிக்காட்டினர்.

“உலகில் உள்ள எந்த மதமும், குறுகிய மனப்பான்மையை போதிக்கவில்லை என்றும், பிற மதத்தினரை புண்படுத்த கூறவில்லை” என்றும், நீதிபதிகள் கூறினார்கள்.

“மனுதாரரின் மத உணர்வு ஏற்கத்தத்தல்ல என்றும், இந்த வழக்கு விசாரணைக்கு உகந்ததல்ல என்றும், இந்த வழக்கில் பொதுநலன் எதுவும் இல்லை” என்றும், சுட்டிக்காட்டினர்.  

முக்கியமாக, “உள்நோக்கத்துடன் இந்த வழக்கு தொடரப்பட்டு உள்ளது என்றும், இது போன்ற வழக்குகளை அனுமதிக்க முடியாது” என்றும், நீதிபதிகள் குறிப்பிட்டனர்.

“இந்தியா மதச்சார்பற்ற நாடு என்பதால், இங்கு அனைத்து மதத்தினரும் சமமானவர்கள் என்றும், ஒரு மதத்தினர் மற்ற மதத்தினரை மதிக்க வேண்டும்” என்றும்,  கூறிய நீதிபதிகள், இந்த வழக்கை தள்ளுபடி  செய்து அதிரடியாக உத்தரவிட்டனர்.

குறிப்பாக, “இந்த வழக்கை தொடர்ந்த மனுதாரருக்கு அபராதம் எதுவும் விதிக்கவில்லை என்றும், அதே நேரத்தில் இந்த மனுவை தாக்கல் செய்தவர் அடுத்த 5 ஆண்டுகளுக்கு எந்த நீதிமன்றத்திலும் அந்த நீதிமன்றத்தின் உத்தரவை பெறாமல், பொது நல வழக்குகளை தொடரக்கூடாது” என்றும், அதிரடியாக உத்தரவிட்டனர். நீதிபதிகளின் உத்தரவு, தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

இதனிடையே, தமிழக கோவில்களில் அர்ச்சகர் நியமனம் தொடர்பான அறிவிப்பை எதிர்த்த வழக்கில், தற்போதைய நிலையே நீடிக்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.