சென்னையில் 2 நாட்களாக கொட்டி தீர்க்கும் கனமழையால், வட சென்னை பகுதியில் மழை வெள்ளம் பாதிக்கப்பட்ட இடங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று 2 வது நாளாள நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்.

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தீவிரமாக பெய்து வருகிறது. இதனால், சென்னை உள்பட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது.

சென்னையில் கடந்த 2 நாட்களாக கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. இதன் காரணமாக, அங்கு பல்வேறு இடங்களில் உள்ள சாலைகளில் மழை நீர் தேங்கி உள்ளன. 

அத்துடன், பல இடங்களில் வீட்டிற்குள் வெள்ளநீர் புகுந்துள்ளதால் மக்கள் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதனால், சென்னை மாநகரமே வெள்ளக்காடாக மாறியுள்ளது. சென்னையின் முக்கிய சாலைகளில் எல்லாம் மழை நீர் வெள்ளம் போல் காட்சி அளித்து ஓடுகிறது. இதனால், சாலைகளில் செல்ல முடியாமல் வாகனங்கள் பலவும் நீரில் ஊர்ந்து சென்று வருகின்றன.

இந்த நிலையில் சென்னையில் மழையால் ஏற்பட்ட பாதிப்புகளை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று 2 வது நாளாக நேரில் சென்று ஆய்வு செய்து வருகிறார். இந்த ஆய்வின் போது, முதலமைச்சருடன் அமைச்சர்கள் மற்றும் உயர் அதிகாரிகள் உடன் சென்று ஆய்வு செய்து வருகின்றனர்.

அதாவது, சென்னையில் நேற்று முன் தினம் முதல் இடைவிடாமல் விடிய விடிய கன மழை பெய்தது. இந்த மழை நேற்று காலையிலும் நீடித்ததால் சென்னையில் உள்ள முக்கிய சாலைகளில் மழை நீர் வடியாமல் வெள்ளம் போல் பெருக்கெடுத்து ஓடியது.

இதனால், அங்குள்ள தாழ்வான பகுதிகளில் மழைநீர் சூழ்ந்ததால் வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்து கொண்டது. சாலைகளில் உள்ள மழைநீர் வடிகால் நிரம்பி சாலையின் மேலே வழிந்தோடியது. இவற்றுடன், பாதாள சாக்கடையும் மழைநீருடன் கலந்து ரோட்டில் பெருக்கெடுத்து ஆறாக ஓடிக்கொண்டு இருக்கிறது.

இந்நிலையில், முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வெள்ளம் பாதித்த பகுதிகளுக்கு நேரில் சென்று நேற்றைய தினம் பார்வையிட்டார். முதலில் அவர் எழும்பூர் பகுதியில் தேங்கிய மழைநீரை பார்வையிட்டார். அதனைத் தொடர்ந்து வட சென்னை பகுதிகளையும் பார்வையிட்டு, பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான எல்லா உதவிகளையும் செய்ய அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

மேலும் புரசைவாக்கம், டவுட்டன், கே.என்.கார்டன், பட்டாளம், நியூபேலஸ் ரோடு, ஓட்டேரி நல்லாங்கால்வாய், அயனாவரம் நெடுஞ்சாலை, பாடி மேம்பாலம், சத்யாநகர், கொளத்தூர் பாபா நகர், ஜி.கே.எம்.காலனி, ஜவகர் நகர், பெரம்பூர் பேப்பர் மில் ரோடு உள்ளிட்ட பகுதிகளையும் நேற்று ஒரே நாளில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பார்வையிட்டார்.

அப்போது, மாநகராட்சி ஊழியர்கள் வெள்ளத்தை அப்புறப்படுத்தும் பணிகளையும் முதலமைச்சர் ஆய்வு செய்தார். 

முக்கியமாக, வெள்ளம் சூழ்ந்த பகுதிகளில் நடந்து சென்றும் முதலமைச்சர் பார்வையிட்டார். அத்துடன், பாதிக்கப்பட்ட மக்களுக்காக அமைக்கப்பட்ட வெள்ள நிவாரண முகாம்களையும் முதலமைச்சர் ஸ்டாலின் ஆய்வு செய்தார். அவருடன் அமைச்சர் பி.கே. சேகர்பாபு, மாநகராட்சி கமி‌ஷனர் ககன் தீப்சிங் பேடி மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள், காவல் துறை உயர் அதிகாரிகள் உள்ளிட்டோரும் உடன் இருந்தனர்.