“45 வது சென்னை புத்தகக் கண்காட்சியை ஜனவரி 6 ஆம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்” என்று, பபாசி அறிவித்துள்ளது. 

தமிழகத்தின் தலைநகர் சென்னையில் ஆண்டு தோறும் தென்னிந்திய புத்தக விற்பனையாளர்கள் மற்றும் பதிப்பாளர்கள் சங்கம் சார்பில் புத்தக திருவிழா நடத்தப்படுவது வழக்கம். அதன்படி, வரும் 2022 ஆம் ஆண்டுக்கான புத்தகக் கண்காட்சியை வரும் ஜனவரி 6 ஆம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குத்து விளக்கு ஏற்றி புத்தகக் காட்சியைத் தொடங்கி வைக்கிறார்” என்று, பபாசி கூறியுள்ளது.

இங்கு நடத்தப்படும் புத்தகக் கண்காட்சியில் ஒவ்வொரு ஆண்டும் 10 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள், இந்த சென்னை புத்தகக் கண்காட்சிக்கு வந்து பயனடைந்து வருகின்றனர். 

அந்த வகையில் தான், வரும் 22 ஆம் ஆண்டு சென்னையில் 45 வது புத்தகக் கண்காட்சியை ஜனவரி 6 ஆம் தேதி முதல், 23 ஆம் தேதி வரை நடைபெற உள்ளதாக பபாசி அறிவித்திருக்கிறது..

அதன்படி, “இந்த புத்தகக் கண்காட்சியில் வாரநாட்களில் மதியம் 3 மணி முதல் இரவு 8.30 மணி வரை புத்தகக் காட்சி நடைபெறும்” என்றும், அறிவிக்கப்பட்டு உள்ளது.

அத்துடன், “விடுமுறை நாட்களில் காலை 11 மணி முதல் இரவு 8.30 வரை புத்தகக் கண்காட்சி நடைபெறும்” என்றும், அறிவிக்கப்பட்டு உள்ளது. 

முக்கியமாக, இந்த புத்தகக் காட்சியில் மாணவர்களுக்கு அனுமதி இலவசம் என்றும், பொதுமக்களுக்கு 10 ரூபாய்  நுழைவுக் கட்டணம் வசூலிக்கப்படும்” என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

மேலும், இங்கு அனைத்து புகழ்பெற்ற நூலாசிரியர்கள் மற்றும் பதிப்பாளர்கள், தமிழ் மற்றும் ஆங்கில மொழிகளில் வெளியிடும் இலக்கியம், கலை, அறிவியல், கணிதம், தொழில் நுட்பம், வரலாறு, பொது அறிவு, உணவு, விளையாட்டு, உடல் நலம் போன்ற பல்வேறு துறை சார்ந்த புத்தகங்கள் இங்கு கிடைக்கும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன. 

இது தொடர்பாக பேசிய பபாசி நிர்வாகிகள், “சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் வரும் 2022 ஆம் ஆண்டுக்கான புத்தக கண்காட்சி நடைபெறுகிறது என்றும், விடுமுறை நாட்களில் காலை 11 மணி முதல் இரவு 8:30 மணி வரையிலும், வேலை நாட்களில் மதியம் 3 மணி முதல் இரவு 8:30 மணி வரையிலும் கண்காட்சி நடைபெறும்” என்றும், குறிப்பிட்டனர்.

“ஜனவரி 6 ஆம் தேதி மாலை 6 மணியளவில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குத்து விளக்கை ஏற்றி வைத்து, இந்த புத்தக கண்காட்சியைத் தொடங்கி வைக்கிறார் என்றும், அவருடன் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பங்கேற்க உள்ளார்” என்றும், கூறினார்கள்.

முக்கியமாக, “இந்த விழாவில் 2022 ஆம் ஆண்டுக்கான முத்தமிழ் அறிஞர் கலைஞர் பொற்கிழி விருதுகளையும் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் படைப்பாளர்களுக்கு வழங்கி கவுரவிக்க இருக்கிறார் என்றும், கூறினார்கள்.

இதே போல், “பபாசி வழங்கும் விருதுகளையும் முதல்வர் வழங்க உள்ளார் என்றும், புத்தக காட்சியில் சிறப்புத் தடுப்பூசி முகாம் நடத்தப்படும் என்றும், வாசகர்கள் அனைவருக்கும் முகக்கவசம் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது” என்றும், பபாசி நிர்வாகிகள் கூறியுள்ளனர்.

“கடந்த ஆண்டை போலவே இந்த ஆண்டும் 800 அரங்குகள் அமைக்கப்படும் என்றும், தெரிவிக்கப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.