வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தென் மாவட்டங்களில் இன்றும் நாளையும் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது.

IMD chennai

தமிழகத்தில் கடந்த மாதத்தின் கடைசி வாரத்தில் கடலோர, உள், டெல்டா மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் அதி கனமழையும், சில இடங்களில் கனமழையும் கொட்டியது. அதன் தொடர்ச்சியாக நேற்று முன்தினம் ஆண்டு தொடக்கத்தின் முதல் நாளில் டெல்டா மாவட்டங்களில் பல இடங்களில் மழை வெளுத்து வாங்கியது. இதனால் டெல்டா பகுதிகளில் விவசாய நிலங்கள் நீரில் மூழ்கிப்போய் இருக்கின்றன. நேற்றும் தமிழகத்தில் தென் மற்றும் வட மாவட்டங்களில் மழை பெய்தது.

இந்நிலையில் தென் தமிழக கடற்கரையை ஒட்டியும், மன்னார் வளைகுடா மற்றும் தென்மேற்கு வங்கக்கடலை ஒட்டிய இலங்கை பகுதியிலும் நிலவி வரும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சிகள் காரணமாக, இன்று தென் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் மிதமான மழையும், ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலும் வறண்ட வானிலையும் இருக்கும். அதேபோல் நாளை தென் தமிழக கடலோர மாவட்டங்களில் சில இடங்களில் இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்றும், ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும் என்றும் ஆய்வு மையத்தின் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் தமிழகத்தில் நேற்று காலை 8.30 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் பேராவூரணி 22 செ.மீ., ஈச்சன்விடுதி 21 செ.மீ., முத்துப்பேட்டை, பட்டுக்கோட்டை தலா 18 செ.மீ., அதிராம்பட்டினம் 16 செ.மீ., திருமயம், ஆலங்குடி தலா 13 செ.மீ., புதுக்கோட்டை 12 செ.மீ., நத்தம், மதுக்கூர், வம்பன் கே.வி.கே. தலா 11 செ.மீ., திண்டுக்கல், அரிமளம், கிளானிலை, திருக்குவளை தலா 10 செ.மீ., மணல்மேடு, பொன்னமராவதி, மயிலாடுதுறை, தஞ்சாவூர் தலா 9 செ.மீ., திருத்துறைப்பூண்டி, அன்னவாசல், காட்டுமன்னார்கோவில் தலா 8 செ.மீ., சீர்காழி, பெரம்பலூர், ஜெயங்கொண்டம், அரியலூர், வேதாரண்யம், திருப்பூண்டி, வலங்கைமான், திருவாரூர், நாகப்பட்டினம், குடவாசல், கோடியக்கரை, காரையூர், லால்பேட்டை தலா 7 செ.மீ. உள்பட சில இடங்களில் மழை பெய்திருக்கிறது.