சென்னைக்கும், புதுச்சேரிக்கும் இடையே நேற்று அதிகாலை கரையை கடந்த நிலையில், வளிமண்டலத்தில் நிலவும் மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் இன்று  6 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

rainதமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. இதனால் பல  மாவட்டத்தில் கடந்த வாரம் முதல்  கனமழை பெய்தது. மழையால் குளம், குட்டைகள், ஏரிகள் நிரம்பின. ஆறுகளிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் பயிர்ச்சேதம் ஏற்பட்டது. பல இடங்களில் வீடுகளும் இடிந்து விழுந்து சேதம் அடைந்தன. அதன் பிறகு மழை ஓய்ந்ததால் தேங்கியிருந்த மழைநீர் வடிந்து வந்தது. 


இந்நிலையில் அந்தமான் கடல் பகுதியில் கடந்த 13-ந் தேதி உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி, தாழ்வு மண்டலமாக வலுவடைந்து, நேற்று முன்தினம் நள்ளிரவு 1.30 மணி முதல் சென்னைக்கும், புதுச்சேரிக்கும் இடையே கரையை கடக்க தொடங்கியது. தாழ்வு மண்டலத்தின் முக்கிய பகுதி அதிகாலை 3 மணி முதல் 4 மணி வரை கடந்தது என்றும், முழு பகுதியும் அதிகாலை 5.30 மணிக்குள் கரையை கடந்துவிட்டது என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருக்கிறது. கரையை கடந்ததும் தாழ்வு மண்டலம், தாழ்வு பகுதியாக வலு குறைந்து, தெற்கு ஆந்திரா மற்றும் தமிழக பகுதிகளின் வளிமண்டலத்தில் மேலடுக்கு சுழற்சியாக நிலவி வருகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் இன்று  முதல் 23-ந் தேதி வரை சில இடங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அதனைத்தொடர்ந்து 6 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது. நீலகிரி, ஈரோடு, கிருஷ்ணகிரி, சேலம், அரியலூர், பெரம்பலூர் ஆகிய 6 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும், ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் அனேக இடங்களில் மிதமான மழையும் இன்று பெய்யக்கூடும் என தெரிவித்தது .

மேலும் நாளை அரியலூர், பெரம்பலூர், கள்ளக்குறிச்சி, கடலூர், டெல்டா மாவட்டங்கள் மற்றும் காரைக்காலில் ஓரிரு இடங்களில் கனமழையும், ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் போன்ற  இடங்களில் மிதமான மழையும் பெய்ய வாய்ப்பு இருக்கிறது எனவும்  நாளை மறுதினமும்  23-ம்  தேதியும் தென் மாவட்டங்கள், உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும், ஏனைய மாவட்டங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்காலில் போன்ற  இடங்களில் மிதமான மழையும் பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு தெரிவித்தது.

சென்னையை பொறுத்தவரையில், இன்று வானம் லேசான மேக மூட்டத்துடன் காணப்படும் என்றும், நகரில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்பு இருக்கிறது என்றும் ஆய்வு மைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும் 5 இடங்களில் அதி கனமழை பெய்யும். நேற்று முன்தினம் காலை 8.30 மணி முதல் நேற்று காலை 8.30 மணி வரையிலான 24 மணி நேரத்தில், தமிழகத்தில் 5 இடங்களில் அதி கனமழையும், 37 இடங்களில் மிக கன மழையும், 66 இடங்களில் கன மழையும் பெய்து இருக்கிறது.

இதன் தொடர்ச்சியாக அடுத்த வாரம் தமிழகத்தில் இயல்பை விட சற்று மழை அதிகம் பதிவாகும் என்றும்  இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்து இருக்கிறது. அதற்கான காரணம் குறித்து ஆய்வு மைய அதிகாரிகளிடம் கேட்டபோது, கிழக்கு வங்க கடல் பகுதியில் ஒரு மேலடுக்கு சுழற்சி ஒன்று உருவாகிறது என்றும், இதன் காரணமாக 26 மற்றும் 27-ம் தேதிகளில் தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு உள்ளது என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது .