முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கார் மீது செருப்பு வீசப்பட்ட பரபரப்பு காட்சிகள் இணையத்தில் வெளியாகி பெரும் வைரலாகி வருகிறது.

மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெ.ஜெயலலிதாவின் 5 ஆம் ஆண்டு நினைவு தினம் நேற்றைய தினம் அனுசரிக்கப்பட்டது.

இதனால், ஜெயலலிதாவின் நினைவு தினத்தை முன்னிட்டு நேற்றைய தினம் காலையில் அதிமுக, அமமுக தொண்டர்கள் மற்றும் சசிகலா ஆதரவாளர்கள் தமிழகம் முழுவதும் ஜெயலலிதாவின் உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்கள். 

அந்த வகையில் சென்னை மெரினா கடற்கழைரயில் இருக்கும் ஜெயலலிதாவின் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்துவதற்காக ஏராளமான அதிமுகவினர், அமமுகவினர், சசிகலா ஆதரவாளர்கள் ஒரே நேரத்தில் அங்கு குவிந்தனர். 

அதன்படி, காலை 10.15 மணிக்கு மேல் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி மற்றும் எம்.எல்.ஏக்கள், அதிமுக நிர்வாகிகள் பலரும் ஜெயலலிதாவின் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினர்.

அப்போது, ஜெயலலிதாவின் நினைவிடத்தில் அவர்கள் அனைவரும் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். 

இதையடுத்து, ஓபிஎஸ் மற்றும் எடப்பாடி ஆகியோர் அவர்களது காரில் அங்கிருந்து புறப்பட்டு செல்ல காரில் ஏறினார்கள். அப்போது, காமராஜர் சாலை அண்ணா சதுக்கம் காவல் நிலையம் சந்திப்பு அருகே இருவரது வாகனத்தையும் டிடிவி.தினகரன் மற்றும் சசிகலா ஆதரவாளர்கள் திடீரென்று வழி மறித்து நின்றதுடன், அவர்கள் இருவருக்கும் எதிர்ப்பு தெரிவித்து கண்டன முழக்கங்களையும் அவர்கள் எழுப்பினர். 

இதைப் பார்த்த அங்கு நின்ற சக அதிமுக தொண்டர்கள் உடனே அங்கு வந்து அமமுகவினருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். 

இதனால், அங்கு சுமார் 20 நிமிடமாக இருவரது காரையும் வழி மறித்து “டிடிவி தினகரன் வாழ்க.. சசிகலா வாழ்க..” என்ற முழக்கங்கள் எதிரொலித்த வண்ணம் இருந்தன. 

அதே நேரத்தில் இது குறித்து அங்கு விரைந்து வந்த போலீசார், இரு தரப்பினரையும் சமாதானம் செய்து, இரு தரப்பினரின் காரையும் அங்கிருந்து அனுப்பி வைத்தனர். 

அப்போது, எடப்பாடி பழனிசாமியின் கார் புறப்பட தயாரான நிலையில், அவர் சென்ற கார் மீது அமமுகவினர் செருப்பை தூக்கி வீசினர். இதனால், அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இதனையடுத்து, இச்சம்பவம் தொடர்பாக அண்ணா சதுக்கம் காவல் நிலையத்தில் அதிமுக சார்பில் புகார் அளிக்கப்பட்டது. 

அதன் படி, “காரை மறித்து தாக்க தூண்டியதாக டிடிவி தினகரன் மீதும், தாக்கியதற்காக அமமுகவினர் 100 பேர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றும், அதிமுக தரப்பில் புகார் அளிக்கப்பட்டது. அதன் பேரில், அமமுகவினர் மீது 4 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப் பதிவு செய்னர். 

இந்த சம்பவம் குறித்து பேசிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், “இரு தரப்பினரிடையே கலவரம் ஏற்படுத்த வேண்டும் என்பதற்காகவே திமுக அரசு இவ்வாறு சதி செய்துள்ளதாக” குற்றம்சாட்டினார்.

இதனிடையே, முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கார் மீது செருப்பு வீசப்பட்ட பரபரப்பு காட்சிகள், தற்போது இணையத்தில் வெளியாகி பெரும் வைரலாகி வருவது குறிப்பிடத்தக்கது.