காதலியை பார்க்க வந்த அதிரடிப்படை போலீஸ்காரரை தாக்கிய சிலர், அவரை கட்டாய தாலி கட்ட வைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

தமிழகத்தில் வேலூர் மாவட்டத்தில் தான் இப்படி ஒரு அதிர்ச்சி சம்பவம் அரங்கேறி இருக்கிறது.

வேலூர் மாவட்டம் ஊசூரை அடுத்த அத்தியூர் பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் கிருஷ்ணன். இவரது மகன் 26 விஜி என்ற இளைஞர், தமிழ்நாடு சிறப்பு காவல் துறையான அதிரடி படைப்பிரிவில் போலீஸ்காரராக வேலை பார்த்து வருகிறார்.

இந்த சூழலில் தான், அதிரடி படைப்பிரிவில் போலீஸ்சான விஜிக்கும், அங்குள்ள அணைக்கட்டு தாலுகா ஒடுகத்தூரை அடுத்து உள்ள ஓ.ராஜபாளையம் பகுதியைச் சேர்ந்த சேகர் என்பவரின் மகள் 22 வயதான சாந்தரூபி என்ற இளம் பெண்ணுக்கும், கடந்த 3 மாதத்துக்கு முன்பு திருமணம் நடந்து உள்ளது.

ஆனால், அதிரடிப் படை போலீஸ்சான திருமணம் ஆன விஜியும், அங்குள்ள பள்ளிகொண்டாவை அடுத்த கந்தனேரி பகுதியைச் சேர்ந்த எம்.சி.ஏ. படித்து முடித்த ஒரு இளம் பெண்ணும் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்த சூழ்நிலையில் தான், அதிரடி படை போலீஸ்சான விஜிக்கு திருமணம் ஆனதைத் தெரியாத அந்த அளம் பெண், நேற்று முன் தினம் இரவு கந்தனேரி வீட்டில் தன்னை சந்திக்கும்படி காதலன் விஜியிடம் கூறியிருக்கிறார்.

இதனால், காதலன் விஜி, அந்த பெண் வீட்டுக்கு இரவு 11 மணி அளவில் சென்று உள்ளார்.

அதன் தொடர்ச்சியாக, அவர்கள் இருவரும் தனிமையில் பேசிக் கொண்டிருந்து உள்ளனர். 

இதனைப் பார்த்த அந்த இளம் பெண்ணின் அண்ணன் தம்பிகள், காதலன் விஜியை சரமாரியாகத் தாக்கியதுடன், “உடனே என் தங்கையைத் திருமணம் செய்து கொள்ளவில்லை என்றால், உன்னைக் கொன்று விடுவேன்” என்று பயங்கரமாக மிரட்டி, கட்டாயப்படுத்தி உடனடியாக கட்டாய தாலி கட்ட வைத்து உள்ளனர். 

அப்போது, இளம் பெண்ணின் அண்ணன் தம்பிகள் தாக்கியதில், படு காயமடைந்த விஜி, சிகிச்சைக்காக அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

இது தொடர்பாக, பாதிக்கப்பட்ட விஜி, அங்குள்ள பள்ளிகொண்டா காவல் நிலையத்தில் புகார் அளித்த நிலையில், இளம் பெண்ணின் அண்ணன் மற்றும் தம்பி ஆகிய இருவரிடமும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதனிடையே, ஒரு போலீஸ்காரரை தாக்கி இரவோடு இரவாகக் கட்டாய தாலி கட்ட வைத்த சம்பவம், அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.