மதுரையில் மேம்பாலம் இடிந்து விழுந்து விபத்து தொடர்பாக 3 பேர் மீது மதுரை தல்லாகுளம் போலீசார் வழக்குப் பதிவு செய்து உள்ளனர்.

மதுரை செட்டிக்குளம் இடையே நத்தம் சாலையில் புதிதாக கட்டப்பட்டு வரும் மேம்பால பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.

இந்த மேம்பால பணியின் போது, அதன் ஒரு பகுதியானது நேற்றைய தினம் திடீரென இடிந்து விழுந்து விபத்துக்கு உள்ளானது.

எதிர்பாராத விதமாக ஏற்பட்ட இந்த விபத்தில், உத்தரப் பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த ஆகாஷ் சிங் என்ற தொழிலாளி சிக்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். 

இந்த விபத்து குறித்து விரைந்து வந்த போலீசார், மீட்பு பணியில் ஈடுபட்டனர். பின்னர், விபத்து நடந்த பகுதியை ஆய்வு செய்த மதுரை மாவட்ட ஆட்சியர் அனிஷ் சேகர், “இந்த விபத்து எப்படி ஏற்பட்டது என்பது குறித்து விசாரணையை நடத்தி வருவதாக” தெரிவித்தார்.

அத்துடன், “இது தொடர்பான விசாரணை முடிவடையும் வரை, இந்த பாலப் பணிகளை நிறுத்தி வைக்கும்படி உத்தரவிட்டுள்ளோம்” என்றும், அவர் தெரிவித்தார்.

மேலும், மேம்பால கட்டுமான பணிகளின் போது ஏற்பட்ட விபத்து குறித்து, காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து, தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

குறிப்பாக, இந்த மேம்பால பணிகளை மேற்கொள்ளும் நிறுவனத்தின் திட்ட பொறுப்பாளர் உள்ளிட்ட 3 பேர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்தனர்.

இது தொடர்பாக நடத்தப்பட்ட விசாரணையில், “மேம்பால கட்டுமான பணியின் போது, இயந்திரங்களை உரிய பாதுகாப்பில்லாமல் பயன்படுத்தியதும், அதனல் காரணமாக, அந்த இயந்திரங்கள் திடீரென்று பழுதாகி இந்த விபத்து நடைபெற்றதும்” தெரிய வந்தது.

இதனையடுத்து, இந்த விபத்தினால் உயிரிழப்பு ஏற்படுத்தியது உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் போலீசார், 3 பேர் மீது தற்போது வழக்குப் பதிவு செய்து, அது குறித்து விசாரணையைத் தொடர்ந்து நடத்தி வருகின்றனர். 

முக்கியமாக, இந்த மேம்பால கட்டுமான பணிக்கு ஹைட்ராலிக் இயந்திரங்களை வழங்கிய நிறுவனத்தின் பொறுப்பாளர் பாஸ்கரன் என்பவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதனால், அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.