“சங்க உறுப்பினர்களுக்கு ஏதேனும் தீங்கு ஏற்பட்டால் நான் முதல் ஆளாக களத்தில் நின்று எதிர்ப்பேன்” என்று, தயாரிப்பாளர் சங்கத் தலைவரும், இயக்குனருமான பாரதிராஜா எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இது தொடர்பாக, தமிழ்நாடு திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத் தலைவர் பாரதிராஜா இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில். “தமிழ்நாட்டில் புற்றீசல்கள் போல் தயாரிப்பாளர்களுக்கு சங்கம் உருவானது துரதிஷ்டமானது” என்று, குறிப்பிட்டுள்ளார்.

“ஆனால், மற்ற மாநிலங்களில் இது போல் கிடையாது” என்றும், அவர் வேதனை தெரிவித்து உள்ளார்.

“அதற்குக் காரணம், தலைமை பொறுப்புகளில் இருந்தவர்களின் புரிதலில் ஏற்பட்ட குழப்பங்களே என்று நான் நம்புகிறேன்” என்றும், அவர் கூறியுள்ளார். 

“பழைய சங்கங்கள் கால மாற்றத்தை உணர்ந்து, கொள்கைகளைக் கட்டமைத்துக் கொள்ள வேண்டும் என்றும், அல்லது மற்ற சங்கங்களுடன் இணைந்து செயல்படக் கற்றுக்கொள்ள வேண்டும்” என்றும், இயக்குனர் இமயம் பாரதிராஜா வலியுறுத்தி உள்ளார்.  

“இதை விடுத்து விட்டு, மற்ற சங்கங்களையும், அதில் உள்ளவர்களையும் அடக்கி ஆள நினைப்பது, திரைத்துறையையே நிர்மூலமாக்கிவிடும்” என்றும், அவர் வேதனை தெரிவித்து உள்ளார். 

“இதற்கு சான்றாக டிஎப்பிசி (TFPC) புதிய நிர்வாகம் பல சீர்கேடான விஷயங்களை முன்னெடுத்து வருகிறது என்றும், முந்தைய டிஎப்பிசி நிர்வாகம் இரு வேறு சங்கங்களுடன் இணக்கமாக இருந்து, தயாரிப்பாளர்களுக்குச் சேவையாற்றி வந்துள்ளது, இதனை புதிய நிர்வாகம் கற்றுக்கொள்ள வேண்டும்” என்றும், இயக்குனர் இமயம் பாரதிராஜா வலியுறுத்தி உள்ளார்.

“டிஎப்ஏபிஏ TFAPA-ல் உள்ள உறுப்பினர்கள் பெரும்பான்மையானோர் இந்த 3 சங்கங்களிலும் உறுப்பினர்களாக உள்ளனர். உறுப்பினருக்குச் சேவையாற்றுதே சங்கங்களின் பணி, இதனை டிஎப்பிசி (TFPC) உணர வேண்டும்” என்றும், அவர் கேட்டுக்கொண்டு உள்ளார். 

“தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்களுக்கு டிஎப்பிசி என்றுமே ஒரு தாய்ச்சங்கமாகும்” என்றும், அவர் குறிப்பிட்டு உள்ளார். 

“டிஎப்ஏபிஏ உறுப்பினர்களை தனித்தனியாக அழைத்து மிரட்டியும், அவர்களின் படங்களுக்கு இடைஞ்சல் ஏற்படுத்த முற்படுவதையும் அறிந்தேன். அவ்வாறு, நடந்தால், டிபிஎப்சி பல கூறுகளாக உடையும் என்றும், இதற்குக் காரணமாக புதிய நிர்வாகம் இருக்கும்” என்றும், அவர் ஆவேசமாகக் கூறி உள்ளார். 

குறிப்பாக, “உறுப்பினர்களுக்கு ஏதேனும் தீங்கு ஏற்பட்டால், முதல் ஆளாக நின்று நான் எதிர்ப்பேன் என்பதையும் எச்சரிக்கையாக இங்கே பதிவு செய்கிறேன்” என்றும், இயக்குனர் இமயம் பாரதிராஜா, தனது அறிக்கையில் சுட்டிக்காட்டி உள்ளார்.