“ 'தி பேமிலி மேன் 2' தொடரை உடனே நிறுத்தாவிட்டால், அமேசானை உலகத் தமிழர்கள் புறக்கணிப்போம்” என்று, அமேசானுக்கு இயக்குநர் பாரதிராஜா, சீமான், வேல்முருகன் அகியோர் கடும் எச்சரிக்கை விடுத்து உள்ளனர்.

இது தொடர்பாக இயக்குநர் பாரதிராஜா வெளியிட்டு அறிக்கையில், “எங்கள் இனத்திற்கு எதிரான ‘தி பேமிலி மேன் 2’ இணையத் தொடரை நிறுத்த தமிழர்களும் தமிழ்நாட்டு அமைச்சர் உள்ளிட்ட அனைவரும் கோரிக்கை வைத்த பிறகும் கூட, இந்திய அரசு இந்த தொடரை நிறுத்த உத்தரவு பிறப்பிக்காமல், மௌனம் காப்பது எங்களுக்கு மிகுந்த மனவேதனை அளிக்கிறது” என்று, தனது கவலையை வெளிப்படுத்தி உள்ளார். 

“தமிழீழப் போராளிகளின் விடுதலை போராட்டக்களத்தையும், அவர்களின் வரலாற்றையும் அறியாத தகுதியற்ற நபர்களால், தமிழின விரோதிகளால் இந்த தொடர் எடுக்கப்பட்டிருக்கிறது என்பதைத் தொடரின் காட்சிகள் உணர்த்துகின்றன என்றும், அறமும் வீரமும் தன்னலமற்ற ஈகமும் செறிந்த போராட்ட வரலாற்றைக் கொச்சைப்படுத்தும் நோக்கத்தோடும் தமிழினத்தின் மீது மிகுந்த வன்மத்தோடும் தொடரை உருவாக்கியிருப்பதை வன்மையாகக் கண்டிக்கிறேன்” என்றும், ஆவேசமாகக் குறிப்பிட்டு உள்ளார். 

“இத்தொடரை உடனே நிறுத்த மத்திய தகவல் ஒலிபரப்பு அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் உத்தரவிடவேண்டும் என்றும். இத்தொடரில் தமிழ், முஸ்லீம், வங்காளி என குறிப்பிட்ட இனமக்களுக்கு எதிரான மன நிலையோடு தொடர்ச்சியாக எடுக்கப்படுவதை அனைவரும் அறிவீர்கள்” என்றும், சுட்டிக்காட்டி உள்ளார்.

“தி பேமிலி மேன் 2 தொடரை ஒளிபரப்பும் அமேசான் நிறுவனம் தாமாக முன்வந்து உடனடியாக ஒளிபரப்பை நிறுத்த வேண்டும் என்றும். எங்கள் வேண்டுகோளைப் புறக்கணித்துத் தொடர்ந்து OTT தளத்தில் வெளிவந்தால், அமேசான் நிறுவனத்தின் அனைத்து விதமான வர்த்தகத்தையும் புறக்கணிக்கும் போராட்டத்தில் உலகெங்கிலும் பரந்து வாழும் தமிழர்கள் பங்கெடுப்பதைத் தவிர்க்கவோ தடுக்கவோ இயலாது என்பதைக் கோடிட்டுக்காட்ட விரும்புகிறேன்” என்றும் பாராதிராஜா எச்சரிக்கை விடுத்து உள்ளார்.

அதே போல், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், அமேசான் பிரைம் தலைமை அதிகாரி அபர்ணா புரோகித்திற்கு கடிதம் எழுதி உள்ளார். 

அதில், “தமிழர்களைச் சீண்டும் வகையில் திட்டமிட்டு வன்மத்தோடு எடுக்கப்பட்டுள்ள 'தி பேமிலி மேன் 2' இணையத் தொடர் ஒளிபரப்பை உடனடியாக நிறுத்த வேண்டும்” என்றும், வலியுறுத்திக் கேட்டுக்கொண்டு உள்ளார்.

“ 'தி பேமிலி மேன் 2' இணையத் தொடரின் ஒளிபரப்பை நிறுத்தாவிட்டால், அமேசானை உலகத் தமிழர்கள் புறக்கணிப்போம்” என்றும், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் எச்சரித்து உள்ளார்.

அவரைப் போலவே, தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ 'பேமிலி மேன் 2' தொடர் தமிழர்கள் மீதான வன்மத்துடன் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது வெளிப்படையாகத் தெரிவதாக” குற்றம்சாட்டி உள்ளார்.

“தமிழ் ஈழ விடுதலைப் போரில் உயிர் நீத்த போராளிகளைக் கொச்சைப்படுத்தி இருப்பதாகவும், தமிழர்களின் வரலாற்றைத் திரித்துக் கூறுவது பெரும் குற்றம் என்றும்” அவர் சுட்டிக்காட்டி உள்ளார். 

குறிப்பாக, “இந்த படத்தின் தயாரிப்பாளர், இயக்குநர், படக்குழுவினர் பகிரங்கமாக மன்னிப்பு கோர வேண்டும்” என்றும், வேல்முருகன் எச்சரிக்கையும் விடுத்து உள்ளார்.