ஓட்டலில் ஆஃப் பாயில் வர தாமதமானதால், ஆத்திரமடைந்த போலீஷ்காரர் ஒருவர், ஓட்டலை அடித்து நொறுக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தஞ்சாவூர் நாஞ்சிக்கோட்டை சாலை ஈபி காலனியை சேர்ந்த ஆயுதப்படை தலைமை காவலரான பாலசுப்ரமணியமும், திருவிடைமருதூர் காவல் நிலையத்தில் பணியாற்றும் காவலர் அருண்குமாரும், அவர்களது நண்பர் விஜியும் நாஞ்சிக்கோட்டை சாலையில் உள்ள செயல்பட்டு வரும் ஓட்டலில் சாப்பிடச் சென்று உள்ளனர்.

அப்போது, சாப்பிட்டுக்கொண்டிருந்த அவர்கள் சர்வரிடம் ஆப்பாயில் கேட்டிருக்கிறார்கள்.

ஆனால், ஆஃப் பாயில் வர சற்று கால தாமதம் ஆனதால், கோபம் அடைந்த போலீசார் உட்பட அந்த 3 பேரும் ஓட்டலில் சப்ளையர் பணி செய்த 15 வயது சிறுவனைத் திட்டி தீர்த்து உள்ளனர்.

பின்னர், கோபத்தின் உச்சமாக, சப்ளையரான அந்த 15 வயது சிறுவன்மீது அவர்கள் ஆஃப் பாயிலை கொட்டி உள்ளனர். 

இதனைப் பார்த்து ஓடி வந்த ஓட்டல் ஓனர் ராம்குமார், அவர்களைத் தட்டிக்கேட்டிருக்கிறார்.

இதனால், அந்த போலீஸ்காரர் உட்பட அவர்களது நண்பர்களுக்கு ஈகோ எழுந்துள்ளது. இதனால், இன்னும் ஆத்திரம் அடைந்த அந்த 3 பேரும் சேர்ந்து ஓட்டலின் உள்ள இருந்த பொருட்களை எல்லாம் அடித்து உடைத்து முற்றிலுமாக சூறையாடி உள்ளனர்.

குறிப்பாக, அந்த 3 பேரும் தாக்கியதில், அந்த ஓட்டல் உரிமையாளரின் மனைவியின் கையில் காயம் ஏற்பட்டு உள்ளது.

இதனால், கடும் அதிர்ச்சியடைந்த ஓட்டல் ஓனர் ராம்குமார், அங்குள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

இந்த தாக்குதல் சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்த தஞ்சை தமிழ் பல்கலைக்கழக போலீசார், தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். 

இந்த விசாரணையின் ஒரு பகுதியாக, ஓட்டலை சூறையாடிய போலீசான பாலசுப்பிரமணியன், அருண்குமார் மற்றும் அவர்களது நண்பர் விஜி ஆகியோர் மீது வழக்குப் பதிவு செய்து, அவர்களிடம் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

முக்கியமாக, ஓட்டலை சூறையாடி போலீசார் இருவரையும் பணியிடை நீக்கம் செய்ய எஸ்.பி. உத்தரவிட்டிருக்கிறார். மேலும், போலீசாரின் கூட்டாளியான விஜி, தற்போது தலைமறைவாக உள்ளதால், அவரை கைது செய்யும் முனைப்பில் போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர். இச்சம்பவம், அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.