கள்ளக் காதலியின் 13 வயது சிறுமியை 4 வதாக திருமணம் செய்து கொண்ட பஸ் கண்டக்டர் போக்சோ சட்டத்தின் கீழ் அதிரடியாகக் கைது செய்யப்பட்டு உள்ளார்.

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே தான் இப்படி ஒரு அதிர்ச்சி சம்பவம் அரங்கேறி இருக்கிறது.

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அடுத்து உள்ள பெரிய கருக்கை கிராமத்தைச் சேர்ந்த ராதாகிருஷ்ணன், அந்த பகுதியில் அரசுப் போக்குவரத்துக் கழக ஜெயங்கொண்டம் பணிமனையில் பஸ் கண்டக்டராக பணிபுரிந்து வருகிறார். 

முக்கியமாக, ராதாகிருஷ்ணன் ஏற்கனவே 3 பெண்களைத் திருமணம் செய்துகொண்ட நிலையில், இவரது 3 மனைவிகளுக்கும் குழந்தை பாக்கியம் இல்லை என்று கூறப்படுகிறது.

இதனால், “தனக்கு ஒரு குழந்தை வேண்டும்” என்ற ஆசையில், ராதாகிருஷ்ணனும், அவரது தாயார் ருக்மணியும் மிக தீவிரமாக இருந்திருக்கிறார்கள்.

இந்த சூழ்நிலையில் தான், கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த பரமேஸ்வரி என்பவருடன், ராதாகிருஷ்ணனுக்கு திடீரென்று பழக்கம் ஏற்பட்டு, அது நாளடைவில் கள்ளக் காதலாக மாறியிருக்கிறது.

இதனால், ராதாகிருஷ்ணனும் அந்த பெண்ணும் அடிக்கடி தனிமையில் சந்தித்துப் பேசி வந்திருக்கிறார்கள்.

அப்போது, அந்த கள்ளக் காதலியின் 13 வயது மகளைத் திருமணம் செய்து கொள்ள விரும்புவதாக ராதாகிருஷ்ணன் கூற, அதற்கு அந்த சிறுமியின் தாய் பரமேஸ்வரியும் சம்மதம் தெரிவித்திருக்கிறார்.

இதனையடுத்து, கடந்த 6 ஆம் தேதி அன்று, அங்குள்ள பெரிய கருக்கை கிராமத்தில் இருக்கும் ஒரு கோயிலில் வைத்து ராதாகிருஷ்ணனுக்கும், அந்த 13 வயது சிறுமிக்கும், அவரது தாயார் திருமணம் செய்து வைத்திருக்கிறார்.

இந்த திருமணத்தில் ராதாகிருஷ்ணன் தாய் ருக்மணியும் உடந்தையாக இருந்திருக்கிறார். 

மேலும், திருமணம் நடந்த அன்றே அவர்களுக்குள் முதலிரவும் நடந்து இருக்கிறது. 

ஆனால், இந்த முதலிரவிற்கு அந்த 13 வயது சிறுமி ஒத்துக் கொள்ளவில்லை என்றும், ஆனால் திருமணம் செய்துகொண்ட அந்த நபர் சிறுமியை கட்டாயப் படுத்தி அவரிடம் உறவு வைத்திருக்கிறார் என்கிற குற்றச்சாட்டும் முன்வைக்கப்பட்டு உள்ளது.

இதனால், அந்த 13 வயது சிறுமி தற்போது 5 மாதம் கர்ப்பமாக இருக்கிறார் என்றும் கூறப்படுகிறது.

இப்படியாக, 13 வயது சிறுமி கர்ப்பம் அடைந்திருப்பதை அறிந்த அக்கம் பக்கத்தினர், இது குறித்து அரியலூர் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு மையத்தில் புகார் அளித்து உ்ளளனர். இந்த புகாரையடுத்து அவர்கள் ஜெயங்கொண்டம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்து உள்ளனர்.

இதனையடுத்து, ஜெயங்கொண்டம் அனைத்து மகளிர் போலீசார், ராதாகிருஷ்ணனை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

அத்துடன், இந்த குழந்தை திருமணத்திற்கு உடந்தையாக அவரது தாயார் மீது வழக்குப் பதிவு செய்து அவர்களையும் போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றார்கள். இச்சம்பவம், அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.