“உலகப்புகழ் பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு வரும் 16 ஆம் தேதிக்கு பதிலாக 17 ஆம் தேதிக்கு அதிரடியாக மாற்றப்பட்டுள்ளதாக” மதுரை மாவட்ட ஆட்சியர் அறிவித்து உள்ளார்.

உலகப்புகழ் பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டிக்கான முகூர்த்தக்கால் நேற்று முன் தினம் மாலை நடப்பட்டதைத் தொடர்ந்து, மதுரையில் பொங்கல் விழா, தற்போது களைகட்டத் தொடங்கி உள்ளது.

அதன்படி, மதுரை அவனியாபுரத்தில் வருகின்ற 14 ஆம் தேதி ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்தப்படுகின்றன. அதன் தொடர்ச்சியாக, வரும் 15 ஆம் தேதி பாலமேடு ஜல்லிக்கட்டு நடைபெறுகிறது.

அதன் தொடர்ச்சியாகவே, “16 ஆம் தேதி அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறும்” என்று, ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால், தற்போது 16 ஆம் தேதிக்கு பதிலாக 17 ஆம் தேதிக்கு அதிரடியாக மாற்றப்பட்டுள்ளதாக” மதுரை மாவட்ட ஆட்சியர் அறிவித்து உள்ளார்.

அதாவது, மதுரையில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்துவது குறித்து, மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

இந்த ஆலோசனை கூட்டத்தில், தமிழக வணிக வரி துறை அமைச்சர் மூர்த்தி, மாநகராட்சி ஆணையர் கார்த்திகேயன், மாவட்ட ஆட்சியர் அனிஷ் சேகர் மற்றும் காவல் துறை உயர் அதிகாரிகள் உள்ளிட்டோர் பலரும் கலந்து கொண்டனர்.

இந்த ஆலோசனை கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் மூர்த்தி, “மதுரை அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு போட்டிகள் மாநகராட்சி ஆணையர் கார்த்திகேயன் தலைமையில் நடைபெறும்” என்று, அறிவித்தார்.

அத்துடன், “பாலமேடு மற்றும் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டிகள் மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெறும்” என்றும்,  அமைச்சர் மூர்த்தி கூறினார்.

ஆனால், “அவனியாபுரம், பாலமேடு மற்றும் அலங்காநல்லூர் ஆகிய 3 இடங்களில் கலந்து கொள்ளும் போட்டியாளர்கள், ஓர் இடத்தில் கலந்து கொண்டால் மற்றோர் இடத்தில் அவர்களுக்கு பங்கேற்று மாடுகளை பிடிக்க அனுமதி இல்லை என்றும், இப்படியாக ஒவ்வொரு போட்டியிலும் தலா 700 மாடுகளுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்படும்” என்றும், அறிவிப்பும் விடுக்கப்பட்டது.

இதனால், “காளைகள் மற்றும் வீரர்களுக்கு ஆன்லைன் மூலம் பதிவு செய்யலாம் என்றும், இ சேவை மையங்களில் பதிவு செய்யலாம்” என்றும், அறிவிக்கப்பட்டது. 

“மாடுபிடி வீரர்கள், மாட்டின் உரிமையாளர்களுக்கு காலை, மதியம் 2 வேளை உணவு வழங்கப்படும் என்றும், தற்காலிக கழிப்பறை வசதியும் ஏற்பாடு செய்யப்படும்” என்றும், தெரிவிக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து, ஜல்லிக்கட்டு போட்டிகளுக்கான ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டு அதி விரைவாக நடைபெற்று வருகின்றன.

இந்த நிலையில் தான், மதுரை மாவட்ட ஆட்சியர் அனிஷ் சேகர், தற்போது ஒரு புதிய அறிவிப்பை வெளியிட்டு உள்ளார். 

அதில், “தமிழகத்தில் வருகிற 16 ஆம் தேதி ஞாயிற்று கிழமையில் முழு ஊரடங்கு அமலில் இருக்கும் என்பதால், இந்த ஊரடங்கை முன்னிட்டு அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டிகள், திட்டமிடப்பட்ட 16 ஆம் தேதிக்குப் பதிலாக, அதற்கு அடுத்த நாளான 17 ஆம் தேதி நடைபெறும்” என்று, அறிவித்து உள்ளார்.

மேலும், “அலங்காநல்லூர் விழா குழுவினருடன் நடந்த ஆலோசனைக் கூட்டத்திற்குப் பிறகே, இந்த முடிவு எடுக்கப்பட்டு உள்ளதாகவும்” தகவல்கள் வெளியாகி உள்ளன.

எது, எப்படி இருந்தால், அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு காளைகள் சீறிப்பாய காத்திருப்பது உறுதியே!