அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணியின் வங்கிக் கணக்கு முடக்கப்பட்டு உள்ள நிலையில், லஞ்ச ஒழிப்புத்துறை சோதனையில் முக்கிய ஆவணங்கள் 

கைப்பற்றப்பட்டு உள்ளதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன.

கடந்த அதிமுக ஆட்சியில் அமைச்சராக இருந்த போது, வருமானத்திற்கு அதிகமான சொத்து சேர்த்த புகாரில் எஸ்.பி. வேலுமணி வீட்டில், லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனை நடத்தினர்.

அதாவது, சென்னை மற்றும் கோவை மாநகராட்சிகளில் ரூ.811 கோடிக்கு டெண்டர் ஒதுக்கீட்டில் முறைகேடு நடைபெற்றதாக அளித்த புகாரின் பேரில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி உள்பட 7 பேர் மீதும், 10 நிறுவனங்கள் மீதும் ஊழல், மோசடி உள்ளிட்ட 7 பிரிவுகளில் லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

அதன் அடிப்படையில், கடந்த 10 ஆம் தேதி எஸ்.பி. வேலுமணி வீடு, அவரது சகோதரர்கள் மற்றும் நெருங்கிய உறவினர்கள், நண்பர்கள் வீடு உள்பட 60 இடங்களிலும் ஒரே நேரத்தில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் அதிரடி சோதனை நடத்தினர். 

இதில், பல்வேறு முக்கிய ஆவணங்கள் மற்றும் 13 லட்சம் ரூபாய் ரொக்கம் கைப்பற்றப்பட்டன. 

குறிப்பாக, எஸ்.பி.வேலுமணிக்கு நெருங்கிய நண்பரான சந்திரபிரகாசுக்கு சொந்தமான கே.சி.பி என்ஜினீயர்ஸ் நிறுவனம், மதுக்கரை அடுத்த பாலத்துறையில் உள்ள வி.எஸ்.ஐ.எம். சான்ட்குவாரியில் நேற்று 2 வது நாளாக மீண்டும் சோதனை நடத்தப்பட்டது. 

இந்த சோதனை நள்ளிரவு 12 மணி வரை நீடித்தது. இந்த 2 இடங்களில் நடத்தப்பட்ட சோதனையிலும், பல்வேறு முக்கிய ஆவணங்களை லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கைப்பற்றி உள்ளனர். 

இந்த சோதனையின் போது, ஒப்பந்தப் பணிகளுடன் மாநகராட்சி தலைமை பொறியாளர் உள்ளிட்ட அதிகாரிகளின் குடியிருப்புகளையும் சீரமைத்துக் கொடுக்கப்பட்ட ஆவணங்களையும் லஞ்ச ஒழிப்புத்துறையினர் அதிரடியாகப் பறிமுதல் செய்து உள்ளதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன. 

அதே போல், இதே போன்று திருப்பூர் மாவட்டம் பச்சாபாளையம் பகுதியில் உள்ள கே.சி.பி நிறுவனத்தின் குவாரியிலும் நேற்று பிற்பகல் முதல் சோதனை  நடத்தப்பட்டது.

மேலும், அதிமுக ஆட்சியில் முறைகேடாக ஒதுக்கியதாக ஏற்கனவே வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், டெண்டர் முறைகேடு வழக்கில் அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணியின் வங்கி கணக்கு மற்றும் லாக்கர்கள் அதிரடியாக முடக்கப்பட்டு உள்ளன.. 

இந்த இடங்களில் இருந்து கைப்பற்றப்பட்ட ஆவணங்களின் அடிப்படையில், அடுத்தகட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் தற்போது திட்டமிட்டு வருவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

அதே நேரத்தில், இந்த சோதனை நடக்கப் போவது முன்கூட்டியே வேலுமணி தரப்புக்குத் தெரியவந்ததாகவும், அதன் காரணமாக, பல்வேறு முக்கிய ஆவணங்கள் 60 இடங்களில் சோதனை நடத்தியும் கிடைக்கவில்லை என லஞ்ச ஒழிப்பு போலீசார் தரப்பில் கூறப்படுவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.