நிர்வாகிகளுக்கு இடையே நிலவி வரும் கடும் அதிருப்திக்கு மத்தியில் “ஒற்றைத் தலைமையா? இரட்டைத் தலைமையா?” என்கிற பெரும் விவாதங்களுக்கு இடையே அதிமுக செயற்குழு இன்று கூடுகிறது.

அதிமுகவிலிருந்து அக்கட்சியின் மூத்த தலைவர் அன்வர் ராஜா அதிரடியாக நீக்கப்பட்டுள்ள சூழலில், இன்று அக்கட்சியின் செயற்குழு கூட்டம் நடைபெறுகிறது.

அதாவது, தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள் ஆண்டுதோறும் ஒரு முறை பொதுக்குழுவையும், 2 முறை செயற்குழுவையும் கூட்ட வேண்டும் என்கிற விதி இருக்கிறது. 

அந்த வகையில் தான், அதிமுக பொதுக் குழு மற்றும் செயற்குழு கூட்டம் கடந்த ஜனவரி மாதம் 9 ஆம் தேதி நடைபெற்றது.

தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு முன்பாக நடைபெற்ற இந்த கூட்டத்தில், கூட்டணி குறித்து ஆலோசிக்கப்பட்டது. 

இந்த நிலையில் தான், அதிமுக செயற்குழு கூட்டம் 2 வது முறையாக இன்று நடைபெறுகிறது. 

அதன் படி, சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் இன்று காலை 10 மணிக்கு இந்த செயற்குழு கூட்டம் நடைபெறுகிறது.

இந்த கூட்டத்தில், அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் தலைமை தாங்குகின்றனர். 

இவர்கள் இருவரின் தலைமையில் நடைபெறும் இந்த கூட்டத்தில் மாநில நிர்வாகிகள், மாவட்ட செயலாளர்கள், எம்.பி.க்கள், எம்எல்ஏக்கள், செயற்குழு உறுப்பினர்கள் என 270 பேர் கலந்துகொள்ள உள்ளனர்.

மேலும், இன்றைய செயற்குழு கூட்டத்தில், அதிமுகவில் காலியாக உள்ள “அதிமுக அவைத்தலைவர் பதவிக்கு யாரை தேர்வு செய்வது?” என்பது குறித்து ஆலோசிக்கப்பட உள்ளதாகவும் கூறப்படுகிறது. 

அதே நேரத்தில், அதிமுகவில் ஏற்கனவே “ஒற்றை தலைமை” என்ற குரல்கள் முழக்கங்களாக எழுந்து உள்ளது வலுபெற்று வருகிறது.

அதன்படி, கடந்த வாரம் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக நடைபெற்ற அதிமுக நிர்வாகிகள் கூட்டத்தில் கடும் கூச்சல், குழப்பம் ஏற்பட்டது. 

அப்போது, முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக கருத்து தெரிவித்த முன்னாள் எம்.பி. அன்வர் ராஜாவை, கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் கடுமையாக கண்டித்ததால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. 

அதே போல், துணை ஒருங்கிணைப்பாளர் வைத்திலிங்கத்தையும் அவர் சாடியதாகவும் கூறப்படுகிறது. இதனால், அன்றைய கூட்டத்தில் அதிமுகவினர் மத்தியில் பெரும் சலசலப்பு ஏற்பட்டது.

இதனால், அதிமுகவில் ஏற்கனவே அக்கட்சியினர் நிர்வாகிகளுக்கு இடையே நிலவிவரும் கடும் அதிருப்திக்கு மத்தியில் தான், அதிமுக செயற்குழு கூட்டமம் இன்றைய தினம் கூடுகிறது. இதனால், இன்றைய கூட்டத்தில் இன்னும் பல்வேறு விவகாரங்கள் அக்கட்சியினரிடையே மீண்டும் சலசலப்பை ஏற்படுத்தும் என்றே கூறப்படுகிறது.

குறிப்பாக, இன்றைய கூட்டத்தில் சசிகலா விவகாரம் தொடர்பாக பேசப்படும் என்றும் தகவல்கள் கூறகின்றனர். இதன் காரணமாக, இன்றைய அதிமுகவின் செயற்குழு கூட்டத்தில் பெரும் பரபரப்புக்கும், விறுவிறுப்புக்கும் பஞ்சம் இருக்காது என்றே எதிர்பார்க்கப்படுகிறது.