சைதாப்பேட்டை கோர்ட்டில் நடிகர் விஜய்சேதுபதி மீது வழக்கு கிரிமினல் அவதூறு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்.

vijaysethupathi

திரைப்பட நடிகர் விஜய் சேதுபதி  படப்பிடிப்பிற்காக  கடந்த மாதம் 2-ம் தேதி  விமானம் மூலம் பெங்களூர் சென்றுள்ளார். அப்போது, விமான நிலையத்தில் இருந்த சிலர் விஜய் சேதுபதியை கேலி செய்துள்ளனர். இதனால் அந்த நபர்களுக்கும், விஜய் சேதுபதிக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து  விமான நிலைய போலீசார் இருதரப்பினரையும் சமாதானம் செய்து விஜய் சேதுபதியை பாதுகாப்பாக அழைத்துச் செல்லப்பட்டார்.

அப்பொழுது  வாக்குவாதத்தில் ஈடுபட்ட நபர், யாரும் எதிர்பாராத விதமாக திடீரென ஓடி வந்து விஜய் சேதுபதியின் முதுகில் காலால் எட்டி உதைத்துள்ளார். இதில், விஜய் சேதுபதி நிலைதடுமாறிய நிலையில், தாக்குதல் நடத்திய நபரை போலீசார் உடனடியாக அப்புறப்படுத்தினர். இந்த சம்பவம் குறித்து விமான நிலைய போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.

இந்நிலையில் சென்னை சைதாப்பேட்டையை சேர்ந்தவர் மகாகாந்தி. நடிகரான இவர், சைதாப்பேட்டை பெருநகர 9-வது கோர்ட்டில் ஒரு மனு தாக்கல் செய்து உள்ளார். அவர் கூறியதாவது: நான் மருத்துவ பரிசோதனைக்காக மைசூர் செல்ல கடந்த நவம்பர் மாதம் 2-ம் தேதி இரவு பெங்களூரு விமான நிலையம் சென்றேன். அங்கு எதிர்பாராதவிதமாக நடிகர் விஜய்சேதுபதியை சந்தித்தேன். திரைத்துறையில் அவரது சாதனைகளை பாராட்டி வாழ்த்து தெரிவிக்க சென்றேன். ஆனால் எனது வாழ்த்துக்களை ஏற்க மறுத்த விஜய்சேதுபதி  பொதுவெளியில் என்னை இழிவுபடுத்தி பேசியதுடன் என்னையும்  எனது சாதி பற்றியும் தவறாக பேசினார்.

இதனால் விமான நிலையத்தில் இருந்து வெளியேறிய என் மீது அவருடைய மேலாளர் ஜான்சன் தாக்கியதுடன், காதில் அறைந்தார். இதில் எனது செவித்திறன் பாதிக்கப்பட்டு இருப்பதாக டாக்டர்கள் தெரிவித்தனர். உண்மை இவ்வாறு இருக்க மறுநாள் தான் தாக்கப்பட்டதாக விஜய்சேதுபதி தரப்பில் ஊடகங்களில் என்மீது  அவதூறு பரப்பினார்கள். திரைத்துறையில் உள்ள சக நடிகரை பாராட்ட சென்ற என்னை தாக்கியதுடன் அதை உண்மைக்கு புறம்பாக செய்தியாக்கிய நடிகர் விஜய்சேதுபதி மற்றும் அவரது மேலாளர் ஜான்சன் ஆகியோர் மீது கிரிமினல் அவதூறு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதில் கூறியிருந்தார். இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் நடிகர் மகாகாந்தி மீது மான நஷ்ட ஈடு வழக்கு தொடர உள்ளதாக நடிகர் விஜய்சேதுபதியின் வழக்கறிஞர் நர்மதா சம்பத் தெரிவித்துள்ளார். பெங்களூரு விமான நிலைய சம்பவத்தில் எந்த புகாரும் வேண்டாம் என காவல்நிலையத்தில் எழுதி கொடுத்து விட்டு தற்போது விஜய்சேதுபதி மீது அவதூறு வழக்கு தொடர்ந்துள்ளதாக நடிகர் விஜயசேதுபதி தரப்பில் தெரிவித்துள்ளார்.