“800 திரைப்படம் நிச்சயம் வெளியாகும்” என்று, இலங்கை கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன் உறுதிப்படத் தெரிவித்து உள்ளார்.

அதாவது, இலங்கை தமிழரான கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரனின் வாழ்க்கை வரலாறு கதையானது, “800” என்ற பெயரில் தமிழில் திரைப்படமாக்கப்பட்டு வந்தது. 

இந்த படத்தில் முத்தையா முரளிதரனாக நடிகர் விஜய் சேதுபதி நடித்து வந்தார். 

இலங்கை தமிழராகவே இருந்தாலும் கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன், இலங்கை தமிழர்களுக்கு எதிரான போரின் போது, “தமிழன் என்பதை மறந்து, அவர் சிங்களர்கள் பக்கம் நின்று, இலங்கையின் போரை நியாயப்படுத்திப் பேசவும், அது குறித்து செயல்படவும் செய்ததாக” கடும் விமர்சனங்கள் எழுந்தன. 

இதனால், முத்தையா முரளிதரன் வாழ்க்கை வரலாற்றுப் படத்தில் நடிக்க வேண்டாம் என்று,  நடிகர் விஜய் சேதுபதிக்கு பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்தனர்.

இது தொடர்பாக தொடக்கத்தில், நடிகர் விஜய் சேதுபதி தரப்பில் இருந்து எந்த பதிலும் அளிக்கப்படாத நிலையில், முதன் முதலாக முத்தையா முரளிதரன், தனது தரப்பு விளக்கத்தை அளித்தார். 

அதில், “என்னைத் தமிழினத்திற்கு எதிரானவன் போல சித்தரிப்பது வேதனையாக இருக்கிறது என்று, பள்ளிக் காலம் முதலே தமிழ் வழியில் படித்துவந்தவன், எனக்குத் தமிழே தெரியாது என்பது தவறான செய்தி. இலங்கைத் தமிழரானது எனது தவறா?” என்றும், முத்தையா முரளிதரன் கவலையுடன் கேள்வி எழுப்பியிருந்தார்.

மேலும், “7 வயது முதல் போர் நிறைந்த சூழலில் இருந்த நான், எப்படி கிரிக்கெட் அணியில் இடம் பெற்று சாதித்தேன் என்பது குறித்த படம் தான் “800” என்றும், முத்தையா முரளிதரன் விளக்கம் அளித்தார். 

“சிலர் அறியாமையாலும் சிலர் அரசியல் காரணத்திற்காகவும், என்னைத் தமிழினத்திற்கு எதிரானவர் என்பது போல சித்தரிப்பது வேதனையளிக்கிறது” என்றும், முத்தையா முரளிதரன் அப்போது தெரிவித்திருந்தார்.

அதன் தொடர்ச்சியாக, இலங்கை ஊடகம் ஒன்றுக்கு நடிகர் விஜய் சேதுபதி அளித்த பேட்டியில், “இப்போது முன் வைக்கப்படும் அனைத்து கேள்விகளுக்கும் “800” திரைப்படம் பதில் அளிக்கும்” என்று தெரிவித்திருந்தார். அத்துடன், “800” படத்தில் நடிப்பதில் உறுதியாக இருக்கின்றேன் என்று விஜய் சேதுபதி மனம் திறந்து பேசினார்” இது இன்னும் சர்ச்சைகளுக்கு வித்திட்டது.

இது தொடர்பான பிரச்சனை இன்னும் பெரிதாக வெடித்து கிளம்பவே, இதனையடுத்து, “800 படத்தில் நடிக்க வேண்டாம்” என்று, நடிகர் விஜய் சேதுபதிக்கு முத்தையா முரளிதரன் கோரிக்கை விடுத்தார்.

இது தொடர்பாக முத்தையா முரளிதரன் அறிக்கை ஒன்றையும் வெளியிட்டு உள்ளார். அதில், “எனது வாழ்க்கை வரலாறு படமான “800” படத்தில் இருந்து  விலகிக்கொள்ளுங்கள்” என்று விஜய் சேதுபதிக்கு முத்தையா முரளிதரன் வேண்டுகோள் விடுத்தார்.

பின்னனர், “நன்றி வணக்கம்” என்று, முத்தையா முரளிதரன் அறிக்கையுடன் விஜய் சேதுபதி தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டு உள்ளார். இதனால், விஜய் சேதுபதியின் “நன்றி வணக்கம்” பதிவானது, “800" படத்தில் இருந்து விலகுவதாகவே பொருள் கொள்ளப்பட்டது.

இந்த நிலையில், இலங்கையின் தொலைக்காட்சி ஒன்றிற்கு தற்போது பேட்டியளித்துள்ள முத்தையா முரளிதரன், “ '800' திரைப்படத்தில் நடிகர் விஜய் சேதுபதி நடிக்கமாட்டார் என்று அவர் உறுதிபடத் தெரிவித்ததாகவும், அவருக்கு அதிக அழுத்தங்கள் வந்த காரணத்தினால், படத்தில் இருந்து நின்று விடுமாறு தாம் வேண்டுகோள் விடுத்ததாகவும்” குறிப்பிட்டார்.

அத்துடன், “கொரோனா காலம் முடிந்த பிறகு எனது சுயசரிதையை கருவாகக் கொண்ட '800' திரைப்படம் நிச்சயம் திரைக்கு வரும்” என்றும், முத்தையா முரளிதரன் உறுதிப்டத் தெரிவித்தார்.