9 மாவட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தலில் விஜய் மக்கள் இயக்கத்தைச் சேர்ந்த 77 பேர் வெற்றி பெற்றுள்ளதாக அந்த அமைப்பினர் தெரிவித்து உள்ளனர்.

தமிழகத்தில் 9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தல் வாக்கு எண்ணிக்கையானது நேற்று காலை 8 மணி முதல் தொடங்கிய நிலையில், நள்ளிரவையும் தாண்டி, தற்போது வரை சில இடங்களில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

சரியாக 138 மாவட்ட கவுன்சிலர், 1,375 ஒன்றிய கவுன்சிலர், 2,779 கிராம ஊராட்சி தலைவர், 19,686 கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிகளுக்கு கடந்த 6 மற்றும் 9 தேதிகளில் வாக்குப் பதிவு நடைபெற்றது. இந்த தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணியானது 74 மையங்களில்  நடைபெற்றது.

இந்த தேர்தலில் ஊரக உள்ளாட்சி தேர்தலில் விஜய் மக்கள் இயக்கத்தினர் இந்த முறை களமிறங்கி சுயேட்சியாக போட்டியிட்டனர். 

அத்துடன், நடிகர் விஜய்யின் அனுமதியுடன் அவரது புகைப்படத்தினை அச்சிட்டு விஜய் மக்கள் இயக்கத்தினர் இந்த முறை தேர்தல் பிரச்சாரம் செய்து வந்தனர்.

அதன் படி, விஜய் மக்கள் இயக்கம் சார்பில் ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர், கிராம ஊராட்சித் தலைவர், கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் இடங்கள் என்று பல்வேறு இடங்களிலும் வேட்பாளர்கள் போட்டியிட்டனர்.

அதன் படி, விஜய் மக்கள் இயக்கத்தின் சார்பில் போட்டியிட்டவர்களில் தற்போது 77 பேர் தேர்வு செய்யப்பட்டு உள்ளதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.

அதாவது, ஊரக உள்ளாட்சித் தேர்தலில் நடிகர் விஜயின் மக்கள் இயக்கத்தினர் 9 மாவட்டங்களிலும் 169 இடங்களில்  சுயேட்சையாக போட்டியிட்டனர்.

அதன் படி, மாமண்டூர் ஊராட்சிக்கு உட்பட்ட வடப்பாடி 4 வது ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு விஜய் மக்கள் இயக்கத்தின் சார்பில் போட்டியிட்ட ரீனா புருஷோத்தமன் வெற்றி பெற்று உள்ளார்.  

அதே போல், மாமண்டூர் 2 வது ஊராட்சியில் 2 வது வார்டு உறுப்பினர் பதவிக்கு விஜய் மக்கள் இயக்கம் சார்பில் போட்டியிட்ட லோகநாதன் வெற்றி பெற்று இருக்கிறார்.

மேலும், காஞ்சிபுரம் கருப்படித்தட்டை, காந்தி நகர் 1 வது வார்டு உறுப்பினர் தேர்தலில் விஜய் ரசிகர் மன்ற நகர செயலாளர் எம்.பிரபு ஒரு வாக்கு வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்று இருக்கிறார்.

ஆக மொத்தமாக தற்போதைய நிலவரப்படி “விஜய் மக்கள் இயக்கத்தின் சார்பில் போட்டியிட்டவர்களில் தற்போது வரை 77 பேர் வெற்றி பெற்றுள்ளதாக” தளபதி விஜய் மக்கள் இயக்க அகில இந்தியத் தலைவர் புஸ்ஸி ஆனந்த் தகவல் தெரிவித்து உள்ளார்.

இந்த வெற்றியானது, தமிழகம் முழுவதும் உள்ள நடிகர் விஜய் ரசிகர்களின் மத்தியில் புதிய உற்சாகத்தை ஏற்படுத்தி இருக்கிறது. 

இதனிடையே, இந்த தேர்தலில் அதிமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் படுதோல்வியை சந்தித்த நிலையில், அமமுக, நாம் தமிழர், மக்கள் நீதி மய்யம் உள்ளிட்ட கட்சியினர் ஒரு பகுதிகளில் கூட வெற்றி பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.