சென்னையில் ஏ.சி.யில் பதுங்கியிருந்த நல்லப் பாம்பு கடித்து 66 வயது முதியவர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை பள்ளிக்கரணை வ.ஊ.சி தெரு, சிண்டிகேட் பேங்க் காலனி பகுதியில் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்று உள்ளது.  இந்த அடுக்குமாடி குடியிருப்பில், 66 வயதான ஸ்ரீதரன் தனது மனைவி, மகன் மற்றும் மகளுடன் குடும்பமாக வசித்து வந்துள்ளார். 

இந்நிலையில் நேற்று மதியம் 1 மணி அளவில் ஶ்ரீதரன் வீட்டில் உள்ள ஏசியில் இருந்து, இறந்து போன எலியானது கட்டில் மேலே விழுந்துள்ளது. இதையடுத்து ஶ்ரீதரன் அந்த ஏசியின் உள்ளே கையை விட்டு பார்த்துள்ளார்.

அப்போது ஏதோ வயர் போல் கையில் சிக்கியது. இதனால் அது மின்சார வயராக இருக்கும் என நினைத்து இழுத்துள்ளார். ஆனால் அதன் உள்ளே மின்சார வயர் இல்லாமல், நல்லப் பாம்பு பதுங்கியிருந்துள்ளது. இதையடுத்து முதியவர்  சுதாரிப்பதற்குள் அந்த பாம்பு அவரது கையில் இரு விரல்களில் கடித்துவிட்டது. 

p1

பின்னர் வலியால் துடித்த முதியவர் ஸ்ரீதரனை கண்டு அவரது குடும்பம் தவித்துப் போயினர். உடனடியாக ஸ்ரீதரனை அவரது குடும்பத்தினர் தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அழைத்துச் சென்றனர். 

ஆனால் ஸ்ரீதரனின் உடல்நிலை மோசமாக இருந்ததால், அவரை அனுமதிக்க மறுத்த தனியார் மருத்துவமனை, ஸ்ரீதரனை குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அழைத்து செல்லுமாறு அறிவுறுத்தியுள்ளது. இதையடுத்து உடனே குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு, ஸ்ரீதரனின் குடும்பத்தினர் அழைத்து வந்து, ஸ்ரீதரனை சேர்த்துள்ளனர். 

அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. எனினும் சிகிச்சை பலனளிக்காமல் நேற்று மாலை 4.30 மணி அளவில் முதியவர் ஸ்ரீதரன் உயிரிழந்துவிட்டார். பின்னர் சம்பவம் குறித்து பள்ளிக்கரணை காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. 

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த பள்ளிக்கரணை போலீசார் விசாரணை மேற்கொண்ட பின்னர், ஸ்ரீதரனின் உடலை குரோம்பபேட்டை அரசு மருத்துவமனையிலேயே பிரேத பரிசோதனை செய்தனர்.

p2

மேலும் இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்து பள்ளிக்கரணை காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பின்னர் காவல்துறையினர் கொடுத்த தகவலின் பேரில், ஶ்ரீதரனை கடித்த நல்லப் பாம்பை தீயணைப்பு துறையினர் வந்து பிடித்துச் சென்றனர். 

ஏ.சி. இயந்திரத்தில் இருந்து வந்த பாம்பு கடித்து முதியவர் இறந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னையில் கடந்த ஒரு வாரமாக காற்றழுத்த தாழ்வுப் பகுதியால், எதிர்பாராத கனமழை கொட்டி தீர்த்தது. 

இதனால் சென்னை நகரம் மற்றும் புறநகர் பகுதிகளான தாம்பரம், வேளச்சேரி, முடிச்சூர், பள்ளிக்கரணை உள்ளிட்ட பெரும்பாலான இடங்களில் வெள்ள நீர் தேங்கி உள்ளது. இந்த மழைநீரில் இருந்து பாதுகாப்பு கருதி ஏசியின் உள்ளே பாம்பு வந்திருக்கலாம் எனக் கூறப்படுகிறது.