வடசென்னையின் வியாசர்பாடியில், 70 வயது மதிக்கத்தக்க டாக்டர் திருவேங்கடம் என்பவர் ஆரம்ப காலத்தில் அவர் 2 ரூபாய்க்கு மட்டுமே மருத்துவம் பார்த்து சேவையாற்றி வந்தார். பின்னர் 5 ரூபாய்க்கு பொதுமக்களுக்கு மருத்துவம் பார்த்து வந்தார். இப்படி மருத்துவத்தை சேவையாக செய்து வந்த இந்த மருத்துவர், உடல் நலக்குறைவு காரணமாக கடந்த 13ம் தேதி தெற்கு ரயில்வே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், நேற்று, அதாவது ஆகஸ்ட் 15 நள்ளிரவில் மாரடைப்பு காரணமாக காலமானார். இது, அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவக்கல்லூரி 1973-ம் ஆண்டு எம்.பி.பி.எஸ் பேட்ஜ் டாக்டர் திருவேங்கடம் வீரராகவன். சென்னை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அரசு டாக்டராக பணியாற்றிய அவர், மருத்துவத் தொழிலை சேவையாகவே கருதினார். அதன்பிறகு தனியார் மருத்துவமனையில் பணியாற்றினார். அப்போது அவர் பெட்ரோலியத் துறை சார்ந்த தொழிலாளர்களுக்கு மருத்துவ சேவையாற்றினார். பணி நேரத்தைத் தவிர்த்து மீதமுள்ள நேரங்களில் வீட்டிலேயே ஏழை, எளிய மக்களுக்கு இலவசமாகவும் குறைந்த கட்டணத்தில் டாக்டர் திருவேங்கடம் வீரராகவன் சிகிச்சை அளித்துவந்தார்.

சென்னை எருக்கஞ்சேரி, வியாசர்பாடியில் டாக்டர் திருவேங்கடத்தைத் தெரியாதவர்கள் யாருமே இருக்க மாட்டார்கள். டாக்டர் பீஸாக 2 ரூபாய் வாங்கிய திருவேங்கடம், இறுதியாக 5 ரூபாய் வாங்கினார். அதனால் அவரின் பெயரை விட 5 ரூபாய் டாக்டர் என்று கூறினால்தான், அனைவருக்கும் தெரியும். 

2017-ம் ஆண்டு சிறந்த மனிதர் என்ற விருது வழங்கப்பட்டது. புகழுக்கும் பெயருக்கும் ஆசைப்படாத டாக்டர் திருவேங்கடம், தன்னுடைய சேவையை மட்டும் கடைசிவரை தொடர்ந்தார். சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவக்கல்லூரி 1973-ம் ஆண்டு எம்.பி.பி.எஸ் பேட்ஜ் டாக்டர் திருவேங்கடம் வீரராகவன். அப்போது அவர் பெட்ரோலியத் துறை சார்ந்த தொழிலாளர்களுக்கு மருத்துவ சேவையாற்றினார். பணி நேரத்தைத் தவிர்த்து மீதமுள்ள நேரங்களில் வீட்டிலேயே ஏழை, எளிய மக்களுக்கு இலவசமாகவும் குறைந்த கட்டணத்தில் சிகிச்சை அளித்துவந்தார்.

இந்நிலையில் அவரின் இறப்பு செய்தி, பலரையும் வேதனைக்குள்ளாக்கி இருக்கிறது. பொதுமக்கள் பலரும் தொடர்ச்சியாக தங்களின் வேதனையை பதிவு செய்து வருகின்றனர். 

மேலும் அரசியல் கட்சியனரும், தங்களின் இரங்கலை இம்மருத்துவருக்கு செலுத்தி வருகிறார்கள். தமிழக முதலமைச்சர் பழனிசாமியும், தனது இரங்கலை தெரிவித்துள்ளார். இதுதொடர்பான தன்னுடைய பதிவில், ```40 ஆண்டுகளுக்கு மேலாக ஏழை மக்களுக்கு குறைந்த விலையில் சிறந்த மருத்துவ சேவை வழங்கினார் என புகழாரம் சூட்டிய அவர், அவரை இழந்து வாடும் குடும்பத்தார், வியாசர்பாடி, எருக்கஞ்சேரி மக்களுக்கு இரங்கல்" என முதல்வர் தெரிவித்துள்ளார்.

துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், ``1973 ஆம் ஆண்டில் 2 ரூபாயில் தொடங்கி அண்மையில் 5 ரூபாயில் ஏழை எளியோருக்கு உயர்தர மருத்துவ சிகிச்சை அளித்து வந்த வடசென்னை மருத்துவர் திருவேங்கடம் அவர்கள் காலமான செய்தி மிகுந்த வேதனை அளிக்கிறது. இம்மண்ணை விட்டு மறைந்தாலும் மக்கள் மனங்களில் என்றும் வாழும் மருத்துவருக்கு எனது இதய அஞ்சலி!" என தெரிவித்துள்ளார்.

திமுக தலைவர் ஸ்டாலின் இதுபற்றி குறிப்பிடுகையில், ``வடசென்னையில் வெறும் 2 ரூபாய்க்கு மருத்துவ சிகிச்சை அளிக்கத் தொடங்கி தன் வாழ்நாளில் அதிகபட்சமாக ரூ.5 மட்டுமே சிகிச்சை கட்டணமாகப் பெற்றவர் ‘மக்கள் டாக்டர்’ திருவேங்கடம்! எளிய மக்களின் உயிர் காக்கும் அன்பிற்குரிய மருத்துவராக விளங்கிய திருவேங்கடம் அவர்களின் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கல்" எனக்கூறியிருக்கிறார்.

திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின், தன்னுடைய ட்விட்டர் பதிவில், ``சாமானிய மக்கள் நிறைந்த வடசென்னையில் ரூ.2 கட்டணத்தில் மருத்துவம் பார்க்க ஆரம்பித்தவர் டாக்டர் திருவேங்கடம். வணிகமயமாகிவிட்ட இக்காலத்திலும் அவர் வாங்கிய அதிகபட்ச கட்டணம் ரூ.5 மட்டுமே. அப்படிப்பட்ட மக்கள் மருத்துவரான மனித நேயர் திருவேங்கடம் அவர்களின் இறப்புக்கு என் ஆழ்ந்த இரங்கல்!" எனக்கூறி வேதனை தெரிவித்திருக்கிறார்.

இந்த ரியல் மெர்சல் நாயகனின் இழப்பு, மருத்துவத்துறைக்கான இழப்பாகவே பார்க்கப்படுகிறது