தமிழகத்தில் ஐசியுவில் இருக்கும் கொரோனா நோயாளிகள் எண்ணிக்கை இரண்டு வாரத்தில் இரட்டிப்பாகி உள்ளது. அதே போன்று ஆக்சிஜன் தேவைப்படுபவர்களின் எண்ணிக்கை நான்கு மடங்கு அதிகரித்துள்ளது.

கடந்த 2019-ம் ஆண்டு சீனாவின் வூகான் நகரில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் பல்வேறு உருமாற்றமடைந்து வேகமாக பரவி வருகிறது. ஏற்கனவே இங்கிலாந்தில் ஆல்ஃபா, இந்தியாவில் டெல்டா, தென் ஆப்பிரிக்காவில் பீட்டா, பிரேசிலில் காமா என பல்வேறு வகைகளில் கொரோனா வைரஸ் உருமாற்றமடைந்துள்ளது. அதற்கு ஒமிக்ரான் என பெயரிடப்பட்டுள்ளது. 

மேலும் இந்த ஒமிக்ரான் வைரஸ் பிற வைரஸ்களை ஒப்பிடும்போது அதிவேகமாக பரவக்கூடும் என உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. 50 பிறழ்வுகளை கொண்டுள்ள ஒமிக்ரான் வைரஸ் 25-க்கும் அதிகமான நாடுகளில் அறிவிப்பதற்கு முன்னரே பரவியுள்ளது. இந்நிலையில் ஒமிக்ரான் வைரஸ் தற்போது இந்தியாவிலும் பரவியுள்ளது. மேலும்  ஒமிக்ரான் உருமாறிய கொரோனா வைரஸ் பல நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. ஒமிக்ரான்  வைரஸ் தொற்று பரவாமல் தடுப்பதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் மத்திய , மாநில அரசுகள் மேற்கொண்டு வருகின்றன . வெளிநாடுகளில் இருந்து வருவோரை விமான நிலையத்திலேயே பரிசோதித்து தனிமைப்படுத்தும் நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. 

இந்நிலையில் தமிழகத்தில் கொரோனா பாதிப்பு  எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே இருக்கும் வேளையில் ஐசியுவில் தீவிர சிகிச்சை தேவைப்படுவோர் மற்றும் ஆக்சிஜன் வசதி தேவைப்படுவோரின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. சென்னை கோவை சேலம் மதுரை வேலூர் ஆகிய ஐந்து மாவட்டங்களிலேயே ஆக்சிஜன் மற்றும் தீவிர சிகிச்சை தேவைப்படுவோர் அதிகம் உள்ளனர்.

தமிழகத்தில் ஜனவரி 1-ம் தேதி தமிழ்நாட்டில் மொத்தம் 8340 பேர் கொரோனாவுக்கு சிகிச்சைப் பெற்று வந்தனர். இதில் 366 கொரோனா நோயாளிகள் ஐ சியுவில் இருந்தனர். ஜனவரி 17-ம்  தேதியன்று கொரோனாவுக்கு சிகிச்சை பெறும் நோயாளிகள் எண்ணிக்கை 1,52,348 ஆக உயர்ந்துள்ளது. இதில் 814 பேர் ஐசியு வில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். அதாவது தமிழ்நாட்டில் உள்ள 9829 ஐ சி யு படுக்கைகளில் 8.2% படுக்கைகள் தற்போது உபயோகத்தில் உள்ளன.

மேலும் இதில் சென்னையில் தான் அதிக நோயாளிகள் உள்ளனர். 814 பேரில் 291 பேர் சென்னையில் சிகிச்சைப் பெறுகின்றனர். கோவையில் 72 பேர், சேலத்தில் 68 பேர் வேலூரில் 51 பேர், மதுரையில் 49 பேர் உள்ளனர். இதே போன்று ஜனவரி 1-ம் தேதி தமிழ்நாட்டில் ஆக்சிஜன் வசதி தேவைப்படுவோர் எண்ணிக்கை 1392 ஆக இருந்தது. ஜனவரி 17-ம் தேதி கிட்டத்தட்ட நான்கு மடங்கு உயர்ந்து 4013 பேர் ஆக்சிஜன் வசதியுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர். அதாவது தமிழ்நாட்டில் உள்ள 40757 ஆக்சிஜன் படுக்கைகளில் 9.8% தற்போது பயன்பாட்டில் உள்ளன. இதில் சென்னையில் 1407 பேர், கோவையில் 499 பேர், மதுரையில் 291 பேர், வேலூரில் 193 பேர், சேலத்தில் 149 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தமிழ்நாட்டில் ஜனவரி 1-ம் தேதி நிலவரம்: ஆக்சிஜன் படுக்கை நோயாளிகள்-1392, ஆக்சிஜன் இல்லா நோயாளிகள் - 1391, ஐசியு நோயாளிகள் - 366.

ஆக்சிஜன் நோயாளிகள் முதல் ஐந்து மாவட்டங்கள்: சென்னை 565, கோவை 212, ஈரோடு 95, மதுரை 49, தஞ்சாவூர் 49

ஐசியு நோயாளிகள் முதல் ஐந்து மாவட்டங்கள்: சென்னை 82, கோவை 62, ஈரோடு 51, சேலம் 30, தஞ்சாவூர் 13., தமிழ்நாட்டில் ஜனவரி 1-7ம் தேதி நிலவரம்: ஆக்சிஜன் படுக்கைகள் - 40 757, ஆக்சிஜன் நோயாளிகள் - 4013 (9.8%), ஐ சி யு படுக்கைகள் - 9829, ஐ சி யு நோயாளிகள் -814 (8.28%). 

ஆக்சிஜன் நோயாளிகள் முதல் ஐந்து மாவட்டங்கள்: சென்னை 1407, கோவை 499, மதுரை 291, வேலூர் 193, சேலம் 149. 

ஐசியு நோயாளிகள் முதல் ஐந்து மாவட்டங்கள்: சென்னை 291, கோவை 72, சேலம் 68, வேலூர் 51, மதுரை 49.