17-வது ஆண்டு சுனாமி நினைவு தினத்தையொட்டி பேரலையில் சிக்கி உயிர் நீத்தவர்களுக்கு கடலில் பாலை ஊற்றி பொதுமக்கள் அஞ்சலி செலுத்தினர். பல்வேறு அரசியல் கட்சியினரும் அமைப்பினரும் அஞ்சலி செலுத்தினர்.

tsunami

கடந்த 2004-ம் ஆண்டு இந்தோனேசியாவில் உள்ள சுமத்ரா தீவு அருகே கடலுக்கு அடியில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தால் சுனாமி என்னும் ஆழிப்பேரலை உருவானது. இதில் இந்தியா, இலங்கை, இந்தோனேசியா உள்ளிட்ட 14 நாடுகளில் கடலோர பகுதிகள் பெரும் பாதிப்பை சந்தித்தன. 2½ லட்சத்துக்கும் மேற்பட்டோர் இந்த அலையில் சிக்கி உயிரிழந்தனர். தமிழகத்தில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வாரி சுருட்டிய ஆழிப்பேரலையில் சிக்கி உயிர் இறந்தனர்.

இந்நிலையில் ஆண்டுகள் பல கடந்தாலும் அந்த சோகம் இன்னும் நீங்காத வடுவாக நிறைந்திருக்கிறது. சுனாமி தாக்கிய டிசம்பர் 26-ம் தேதியில் அலையில் சிக்கி உயிர் நீத்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் சுனாமி 17-வது ஆண்டு நினைவு தினம் நேற்று அனுசரிக்கப்பட்டது. சென்னை காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் டி.ஜெயகுமார் படகில் நின்றபடி கடலில் பால் ஊற்றி அஞ்சலி செலுத்தினார். பின்னர் அலையில் சிக்கி உயிர் நீத்தவர்களின் புகைப்படங்கள் இடம்பெற்றிருந்த நினைவு மேடையில் மலர் தூவி அஞ்சலி செலுத்தினார். அந்த பகுதியை சேர்ந்த மக்களும் நினைவு ஸ்தூபியில் மலர் தூவியும், கடலில் பூக்களை கொட்டியும் அஞ்சலி செலுத்தினர். சிலர் உயிரிழந்தவர்களின் நினைவுகளை எண்ணி கண்ணீர் சிந்தினர்.

அதனைத்தொடர்ந்து சென்னை பட்டினப்பாக்கத்தில் தமிழ்நாடு மீனவர் பேரவை தலைவர் அன்பழகனார் தலைமையில் த.மா.கா. தலைமை நிலைய செயலாளர் ஜி.ஆர்.வெங்கடேஷ், ஆம் ஆத்மி கட்சி தலைவர் வசீகரன் உள்ளிட்டோர் கடலில் பால் ஊற்றியும், பூக்கள் தூவியும் அஞ்சலி செலுத்தினர். தமிழக பா.ஜ.க. தலைவர் கே.அண்ணாமலை தலைமையில் பொது செயலாளர் கரு.நாகராஜன், சிறப்பு அழைப்பாளர் நடிகை குஷ்பு உள்பட நிர்வாகிகள் அஞ்சலி செலுத்தினர். சட்டமன்ற காங்கிரஸ் கட்சி தலைவர் செல்வபெருந்தகை தலைமையில் தேசிய செயலாளர் சி.டி.மெய்யப்பன், ஆர்.டி.ஐ.பிரிவு துணை தலைவர் மயிலை தரணி, செயற்குழு உறுப்பினர் சுமதி அன்பரசு மற்றும் மீனவர் பிரிவு நிர்வாகிகள் அஞ்சலி செலுத்தினர். எண்ணூர் பாரதியார் நகர் கடற்கரை பகுதியில் சமத்துவ மக்கள் கழக தலைவர் எர்ணாவூர் நாராயணன், கடலில் பால் ஊற்றி அஞ்சலி செலுத்தினார்.

மேலும் சென்னை விசைப்படகு மரம் விடும் தொழிலாளர் நலச்சங்கம், சென்னை-செங்கை சிங்காரவேலர் விசைப்படகு உரிமையாளர் சங்கம், சென்னை பைபர் படகு மீன்பிடி தொழிலாளர் நலச்சங்கம் போன்ற பல்வேறு மீன்பிடி சங்கங்கள் சார்பிலும் சுனாமியில் உயிர் இழந்தவர்களுக்கு நினைவஞ்சலி செலுத்தியதுடன் அன்னதானமும் வழங்கப்பட்டது. கட்சியினர் அமைப்பினர் அல்லாமல் தனிப்பட்ட முறையிலும் ஏராளமான பொதுமக்கள் தங்கள் உறவுகளை நினைத்து கடலில் பால் ஊற்றியும் மலர் தூவியும் தங்கள் அஞ்சலியை செலுத்தினர்.

இந்நிலையில் திருவொற்றியூர் கே.வி.கே.குப்பம் மீனவ கிராமத்தில் திருவொற்றியூர் எம்.எல்.ஏ. கே.பி.சங்கர் தலைமையில் தி.மு.க.அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி எம்.பி., மாதவரம் சுதர்சனம் எம்.எல்.ஏ., வடசென்னை எம்.பி., கலாநிதி வீராசாமி, திருவொற்றியூர் கிழக்கு பகுதி செயலாளர் தி.மு.தனியரசு மற்றும் நூற்றுக்கணக்கான பெண்கள் பால்குடம் சுமந்தபடி மவுன ஊர்வலமாக சென்று கடலில் பால் ஊற்றி மலர் தூவி அஞ்சலி செலுத்தினர். தி.மு.க. மாநில மீனவரணி செயலாளர் ஆர்.பத்மநாபன் தலைமையில் டி.கே.எஸ். இளங்கோவன் எம்.பி. மற்றும் ஏராளமான பெண்கள் எல்லையம்மன் கோவில் சந்திப்பில் இருந்து பால்குடம் ஏந்தி ஊர்வலமாக சென்று திருச்சினாங்குப்பம் மீனவ கடற்கரையில் அஞ்சலி செலுத்தினர். அ.தி.மு.க. சார்பில் முன்னாள் எம்.எல்.ஏ. கே.குப்பன் தலைமையில் முன்னாள் அமைச்சர் மாதவரம் மூர்த்தி உள்பட திரளான பெண்கள் திருவொற்றியூர் குப்பம் கடற்கரையில் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர். காங்கிரஸ் கட்சி சார்பில் வடசென்னை கிழக்கு மாவட்ட தலைவர் எம்.எஸ்.திரவியம் தலைமையில் நூற்றுக்கணக்கான காங்கிரசார் தாங்கல் கடற்கரையில் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.

தொடர்ந்து நாகையில் சுனாமி நினைவு தினத்தையொட்டி நம்பியார் நகர், கீச்சாங்குப்பம் உள்ளிட்ட கடலோர பகுதிகளில் உறவினர்கள் கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினர். நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் சுனாமி நினைவு ஸ்தூபியில் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். வேளாங்கண்ணியில் மவுன ஊர்வலம் நடந்தது. கடலூரில் சோனாங்குப்பம் கடலில் பால் ஊற்றியும், மலர் தூவியும் மீனவ பெண்கள் அஞ்சலி செலுத்தினா். புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாப்பட்டினத்திலும் பெண்கள் கடலில் பாலை ஊற்றி அஞ்சலி செலுத்தினர். மீனவர்கள் கடலில் மலர் தூவினர். தூத்துக்குடி, நெல்லையிலும் சுனாமி நினைவுதினம் அனுசரிக்கப்பட்டது.