14 வயது சிறுமியை, பெற்ற தாயே 55 வயதான முதியவருக்குத் திருமணம் செய்து வைத்த சம்பவத்தால், அந்த சிறுமி கருவுற்ற சம்பவம் கடும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.

வேலூர் மாவட்டத்தில் தான் இப்படி ஒரு கொடூரமான சம்பவம் அரங்கேறி இருக்கிறது.

வேலூர் மாவட்டம் கருகம்பத்தூர் பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர், தனது கணவரை இழந்த நிலையில் தனது பெண் குழந்தையுடன் தனியாக வசித்து வந்தார். அந்த பெண்ணின் மகளுக்கு தற்போது 14 வயது ஆகும் நிலையில், அந்த சிறுமி அங்குள்ள அரசு பள்ளியில் படித்து வந்தார்.

தற்போது கொரோனா காரணமாக, பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு உள்ளதால், அந்த சிறுமி தனது தாயாருடன் வசித்து வந்தார். 

இந்த நேரத்தில், தன்னுடைய 14 வயது பெண் பிள்ளையுடன் தனியாக வசித்து வந்த அந்த தாயார், அதே பகுதியைச் சேர்ந்த நபரை 2 வதாக திருமணம் செய்து கொண்டார். 

2 வது திருமணத்திற்குப் பிறகு, தன்னுடைய கணவருக்காக, தனது மகளை கணவனின் அண்ணன் 55 வயதான லோகநாதன் என்பவருக்கு கடந்த 3 மாதங்களுக்கு முன்பு திருமணம் செய்து வைத்து உள்ளார். கணவனின் அண்ணனுக்கு 55 வயது என்பதாலும், தனது மகளுக்கு 14 வயது என்பதாலும், இந்த திருமணத்தை, அவர் மிகவும் ரகசியமாகவே நடத்தி முடித்ததாகத் தெரிகிறது.

இந்த திருமணத்திற்குப் பிறகு, தற்போது 3 மாதங்கள் கடந்து உள்ள நிலையில், அந்த 14 வயது சிறுமி கருவுற்று உள்ளார். 

இதனால், அந்த 14 வயது சிறுமியின் உடலில் பல மாற்றங்கள் நிகழ்ந்து உள்ளன. இதனையடுத்து, மகளின் கருவை கலைக்க அவரது தாயார், அங்குள்ள அரசு மருத்துவமனைக்குத் தனது மகளை அழைத்துச் சென்று உள்ளார். 

அரசு மருத்துவமனையில் சிறுமியை பரிசோதித்த மருத்துவர்கள், அவரிடம் “என்ன வயசு?” என்று, விசாரித்து உள்ளனர். 

அத்துடன், “எப்படி கருவுற்றாய்?” என்றும், மருத்துவர்கள் அந்த 14 வயது சிறுமியிடம் விசாரித்து உள்ளனர். 

அதற்கு அந்த சிறுமி, “55 வயதான முதியவருடன் திருமணம் செய்து வைத்ததை” கூறியிருக்கிறார். இதனைக் கேட்ட அரசு மருத்துவர்கள், கடும் அதிர்ச்சியடைந்த நிலையில், உடனடியாக சமூக நலத்துறை அதிகாரிகளுக்குத் தகவல் தெரிவித்தனர். 

இது குறித்து அங்கு விரைந்து வந்த அதிகாரிகள், சிறுமியிடம் விசாரணை நடத்தினர். விசாரணைக்குப் பிறகு, சிறுமியை அவரது தாயிடம் இருந்து மீட்டு அங்குள்ள அரசு காப்பகத்தில் ஒப்படைத்தனர். 

மேலும், இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், சிறுமியின் தாயார் மற்றும் சிறுமியை திருமணம் செய்துகொண்ட 55 வயதான லோகநாதன் ஆகிய இருவரையும் போக்சோ சட்டத்தின் கீழ் அதிரடியாகக் கைது செய்து, சிறையில் அடைத்தனர். இதனால், அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.